கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.
கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.

குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.

கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது. பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். மருந்து சாப்பிடும் காலத்தில் உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின், ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.

சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும். கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும்.

கரிசலாங்கண்ணி, கரிசாலை, அரிப்பான், பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன.

கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.

மணத்தக்காளி கீரை

நாகரீக வளர்ச்சியின் காரணமாக இன்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய படுகின்ற காய்கறிகளை நமது மக்கள் விரும்பி உண்கின்றனர். ஆனால் ஆண்டாண்டு காலமாக நமது மண்ணில் விளைகின்ற உடலுக்கு பல சத்துக்களை அளிக்கும் கீரை வகைகளை இன்று குறைந்த அளவிலான மக்களே உண்ணும் நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. மருத்துவ மூலிகையாக கருதக்கூடிய கீரை வகைகளில் ஒன்று தான் மணத்தக்காளி கீரை. இந்த மணத்தக்காளி கீரையை உண்பதால் ஏற்பட்டும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

மணத்தக்காளி கீரை பயன்கள்


தொண்டை கட்டு


பாடகர்கள், ஆசிரியர்கள், பேச்சையே தொழிலாக கொண்ட மேடை பேச்சாளர்கள் போன்றவர்கள் தொடர்ந்து பல மணி நேரம் நீர் கூட அருந்தாமல் தொண்டை வறண்டு போகும் அளவிற்கு பேசும் போதும், படும் போது தொண்டை பகுதியில் வறட்சி ஏற்பட்டு தொண்டை கட்டிக்கொள்வதோடு, வீக்கம் மற்றும் புண்களும் ஏற்படுகிறது. இப்படியான சமயங்களில் மணத்தக்காளி கீரையை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வயிற்று புண்கள்

காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமாணம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மணத்தக்காளி கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது

அத்தியாவசிய சத்துகள்

உடலின் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் அவசியமாக உள்ளன. மணத்தக்காளி கீரையில் இந்த எல்லா சத்துக்களும் அதிகளவில் நிறைந்திருக்கின்றன. எனவே மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது.

ஜுரம், காய்ச்சல்

ஜுரம் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாகி பலவீனத்தை ஏற்படுத்தும். மேலும் கை, கால்களில் வலியையும் உண்டாகும். மணத்தக்காளி செடியின் இலைகள் சிலவற்றை பறித்து, அந்த இலைகளை நன்றாக கசக்கி சாறு எடுத்து, அந்த சாற்றை காய்ச்சலை போக்க நெற்றியிலும், கை கால்களில் ஏற்படும் வலியை போக்க கை, கால்களிலும் நன்கு தேய்த்து வந்தால் குணம் கிடைக்கும்.

காச நோய்

காச நோய் என்பது ஒரு வகையான கிருமி நமது உடலுக்குள் புகுந்து, நுரையீரல்களில் தங்கி அந்த உறுப்புகளை பதித்து சுவாசிக்கும் போது மூச்சுத்திணறல், வறட்டு இருமல் போன்றவற்றை ஏற்படுத்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் ஒரு நோய் ஆகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் சிறிதளவு மணத்தக்காளி கீரை மற்றும் அதன் பழங்களை சாப்பிட்டு வந்தால் நோயின் கடுமையை குறைக்கும்.

கல்லீரல்

கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை, ஹெப்பாடிட்டீஸ் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு மணத்தக்காளி செடியின் இலைகளை தண்ணீரில் வேக வைத்து அருந்தி வர இந்த நோய்கள் சீக்கிரம் நீங்குவதற்கு துணைபுரியும்.

சிறுநீரகம்

குறைந்த அளவில் நீரை குடிப்பதாலும், அதிகம் உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலையை உண்டாக்குகிறது. மணத்தக்காளி கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். சிறுநீரை நன்கு பெருகி உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும்.

கருத்தரித்தல்

திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் சில பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலை இருக்கும். இத்தகைய பெண்கள் தங்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது மணத்தக்காளி கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் அவர்களின் கருப்பை பலம் பெரும். அவற்றின் உள் தங்கியிருக்கும் நச்சுக்கள் எல்லாம் வெளியேறி சீக்கிரம் அப்பெண்களை கருத்தரிக்கும் நிலையை உண்டாக்கும்

மலட்டு தன்மை

ஆண்கள் பலருக்கும் குழந்தை பிறக்காத நிலை ஏற்பட காரணம் அவர்களின் உயிரணுக்கள் வலிமையின்றி இருப்பதே ஆகும். மணத்தக்காளி கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு உடலில் ஓடும் நரம்புகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளை வலுப்படுத்தி ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது.

புற்றுநோய்

பல வகையான புற்று நோய்களில் வயிற்று புற்று நோயும் ஒன்று. இந்த புற்று நோய் வயிறு மட்டுமல்லாமல் அதனுடன் தொடர்புடைய குடல், கணையம் போன்றவற்றையும் பாதிக்கும் தன்மை கொண்டது. மணத்தக்காளி கீரையை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகிறது.

சிறுகீரை

சிறுகீரையானது பரவலாக தோட்டங்களிலோ, வீடுகளிலும் பயிர் செய்யப்படும் ஒரு வகை கீரை வகையாகும். மூளைகீரை, தண்டுகீரை போன்ற கீரை வகைகளை சேர்ந்த மிகசிறிய கீரை வகையாகும். சுமார் இருபது செ.மீ உயரம் வரை வளரக்கூடியது. நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இக்கீரை மெல்லிய தோற்றமுடையது. இக்கீரை மருந்துகளின் வீரியத்தை குறைக்க கூடியது.

இந்த கீரையில் சுண்ணாம்புசத்து, இரும்புசத்து போன்றவை மிக அதிக அளவில் உள்ளன. நீர்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவுசத்து, ஆகியவையும் இதில் உள்ளன. இந்த கீரையில் வைட்டமின் ஏ, பி, சி ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.
உடற்பருமன் கொண்டவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் சாப்பிட ஏற்ற கீரை சிறுகீரை.

சிறுகீரை மருத்துவ பயன்கள்

  1. சிறுகீரையை தினமும் சமைத்துச் சாப்பிட்டால் இரும்புச் சத்து உடலில் அதிகரிக்கும் மேலும் காச நோய் குணமாகும்.
  2. நீர்க்கடுப்பு, வீக்கம், பித்தநோய் சரியாகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை எடுத்து கொண்டால் உடலில் உள்ள இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும்.
  1. இக்கீரையில் கால்சியம் சத்து மிகுதியாக இருப்பதால் எலும்பு பலப்படும்.
  2. இந்தக்கீரையில் நமது நினைவாற்றலை அதிகரிக்க கூடிய சத்துகள் அடங்கியுள்ளன.
  3. மேலும் இந்த கீரையை தொடர்ந்து எடுத்து வர எரிச்சல் தணியும், மூலநோயைக் கட்டுப்படுத்தும், வாயு மற்றும் வாதநோயை அகற்றும். மாலைக்கண் போன்ற நோய்களை குணமாக்கும்.
  4. சிறுகீரை உடலுக்கு அழகையும், முகத்துக்குப் பொலிவையும் தரக்கூடியது.
  5. சிறுகீரையுடன் மிளகு, வெங்காயம், பூண்டு, மஞ்சள் சேர்த்து சூப் செய்து சாப்பிட கண் புகைச்சல் குறையும்.
  6. சிறுகீரையுடன், முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவ முகப்பரு குறையும்.
  7. சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் குணமாக சிறுகீரை மற்றும் மஞ்சளை சேர்த்து கஷாயம் வைத்து குடிக்க வேண்டும்.
  8. சிறு கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்துக்கொண்டால் சொரி , சிரங்கு , படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

வெந்தயக் கீரை

வெந்தயக் கீரைகள் இரும்புச்சத்துப் பொருட்களை அதிக அளவில் கொண்டு உள்ளன. இரும்புச் சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை வராமல் தடுப்பதோடு உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.
வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவிற்குச் காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் உண்டு வந்தால், நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளுர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். வெந்தயக் கீரையை வேகவைத்து, வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தினால் வரும் மயக்கம் சரியாகும்.

பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பு, உப்பு சேர்த்து அரைத்து மோரில் கரைத்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.

வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும். மேலும் கண்பார்வைக் குறைவு நோய்கள் இருப்பவர்கள் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்

வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும். கீரையில் உள்ள புரதப் பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

வெந்தயக் கீரையில் ஏ வைட்டமின் சக்தியும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் இதை சாப்பிடும் போது மாரடைப்பு, கண் பார்வை குறைபாடு, வாதம், சொறி சிரங்கு, இரத்த சோகை ஆகியவை குணமடையும்.

வெந்தயக் கீரையின் தண்டை அரைத்து, மோருடன் குடித்துவர, வயிறு தொடர்பானப் பிரச்னைகள் தீரும். வெந்தயம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளைப் போக்கும்.

பொன்னாங்கண்ணிக் கீரை

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணிக் கீரை பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும் மூலிகையாகவும் திகழ்கிறது.

கீரையைப் போன்ற உணவு வேறு எதுவும் இல்லை, கீரையைப் போல் நோய் தீர்க்கும் வைத்தியனும் இல்லை என்றார்கள் சித்தர்கள்.அதற்கு ஏற்ப பல உன்னதமான கீரை வகைகள் நம் மண்ணில் விளைகின்றன. அதில் பொன்னாங்கண்ணி கீரை மகத்துவம் நிறைந்தது. இந்த கீரை மேனிக்கு பொன் போன்ற மினுமினுப்பையும் அழகையும் தரக்கூடியது. அதனால் தான் அதை பொன்னாங்கண்ணி என்று கூறினார்கள்.

பொன்+ஆம்+ காண்+ நீ = பொன்னாங் கண்ணி.

பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என்று இருவகைகள் உள்ளன. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இதில் மருத்துவக்குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டுப் பொன்னாங்கண்ணியில் தான் பலவித சத்துகள் நிறைந்துள்ளன.

பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன.

மருத்துவப் பயன்கள்:

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணிக் கீரை பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும் மூலிகையாகவும் திகழ்கிறது.

பொன்னாங்கண்ணிக் கீரையை பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பகலில் கூட நட்சத்திரங்களைப் பார்க்கலாம் என்பார்கள். அந்த அளவுக்கு கண் ணொளிக் கொடுக்கும் சத்துக்கள் அதில் உள்ளன. இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந் தால் கண்ணாடி அணிய வேண்டிய தேவையே இருக்காது.

காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்
கூசும் பீலீகம் குதாங்குர நோய் பேசி வையால்
என்னாங் காணிப்படிவம் எமம் செப்ப லென்னைப்
பொன்னாங்கண்ணிக் கொடியைப் போற்று.

என்ற அகத்தியரின் பாடல் பொன்னங்கண்ணிக் கீரையின் மருத்துவக் குணத்தைக் கூறுகிறது. இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால் பொன்னாங்கண்ணிக் கீரை காச நோய், இருமல், கண்நோய்கள், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணமாக்கக் கூடிய சிறந்த உணவாகும் என்பது தான்.

பொன்னாங்கண்ணிக் கீரையைத் தைலமாகத் தயாரித்தும் பயன்படுத்தலாம். அதாவது கீரையின் சாறுஎடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்ச வேண்டும். மெழுகுப்பதம் வரை கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அந்த தைலத்தை தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண் புகைச்சல், உடல் சூடு ஆகிய பிரச்சினைகள் சரியாகும். புத்துணர்வும் கிடைக்கும். கண் பார்வையும் தெளிவாகும்.

உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.

அருணாசலம் பிள்ளை சாப்பாடும் சொதிக்குழம்பும்

சமையல் செய்வதும் ஏறக்குறைய தவம் செய்வதைப் போன்றதுதான்.

தவம் செய்கிறவர்களின் மனம் ஒருபுள்ளியில் இருக்கும்.

சமையல் செய்கிறவர்களும் அப்படித்தான்.
ஆக்குப்பரை எனும் சமையல்கட்டில் சமையல் செய்யும் சமையல்தொழிலாளி பதம் மாறாமல் எவ்வளவு உப்புப்போடவேண்டும் எவ்வளவு இனிப்பு போடவேண்டும், புளிகரைத்து ஊற்றினோமா என்பதில் கவனம் இல்லாவிட்டால் செய்த குளறுபடிகள் பத்துநிமிடங்களில் பச்சை வாழையிலையில் சாப்பிடும் வக்கனையான வாய் சாட்சிசொல்லிவிடும்.


ஆக்குப்பரை எனும் சமையல்கட்டில் சமையல் செய்யும் சமையல்தொழிலாளி பதம் மாறாமல் எவ்வளவு உப்புப்போடவேண்டும் எவ்வளவு இனிப்பு போடவேண்டும், புளிகரைத்து ஊற்றினோமா என்பதில் கவனம் இல்லாவிட்டால் செய்த குளறுபடிகள் பத்துநிமிடங்களில் பச்சை வாழையிலையில் சாப்பிடும் வக்கனையான வாய் சாட்சிசொல்லிவிடும்.

ஒருவினாடி கூட அங்கிங்கு அகலாமல் தவம் போல் செய்யப்படுவது சமையல். அதனால் சமையல்கலைக் கலைஞர்களைத் தவசுப்பிள்ளைகள் என்று நெல்லைப் பக்கம் அழைப்பர்.

தவசுப்பிள்ளை என்கிற சொல் திருநெல்வேலிக்கே உரித்தான சொல். எவ்வளவு பொருள்பொதிந்த சொல்!

ஒருதிருமணத்தில் திருப்தியான விஷயம் சமையல்தான். வடக்குப்படையான் மவன் கல்யாணத்துக்குப் போனேன் போட்டான்பாரு ஒரு சாப்பாடு சான்சே இல்லை தெரியுமா? என்று பத்து வருடங்களுக்கு முன்நடந்த திருமணத்தைப் பற்றி வளவு வீட்டில் உக்காந்து இன்னிக்கும் பேசிட்டிருக்கிற ஆளுக நம்ம பாளையங்கோட்டையில் உண்டு.

மதுரம், ஜானகிராம், ஆர்யாஸ், சரவணபவன் போன்ற பெரிய நிறுவனங்கள் இன்று பெரியபெரிய திருமண ஆர்டர்களை அந்தந்த மண்டபங்களுக்கே போய் அழகான ஸ்டால்கள் போட்டு சுடச்சுட அங்கேயே செய்து தருகின்றன.

எண்பதுகளில் தவசுப் பிள்ளை என்றால் அருணாசலம் பிள்ளைதான்.

திருமணம் என்றவுடன் இன்றிருக்கும் கேட்டரிங்க் எல்லாம் அன்று இல்லை.

சடங்கு காது குத்து நிச்சயதார்த்தம் என்றால் ஐம்பது பேருக்குள்தான் விசேச வீடுகளில் கூப்பிடுவார்கள், அவர்களுக்காகத் தனியே தவசுப் பிள்ளை போட்டு சமைக்க முடியாது.

அப்படிப்பட்டவர்களுக்கு ஆபத்பாந்தவன் தான் அருணாசலம் பிள்ளை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மாடவீதியில் இருக்கும் சங்கர் அதேபோல்தான், கல்யாணவீடுகளில் அவர் சமையல் தூள்பறக்கும்.

ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும்போது இறுதிநாள் அந்தாண்டு யார் ஓய்வு பெறப்போகிறார்களோ அவர்களுக்கு விருந்து உபசாரம் நடக்கும்.

சில்வர் வாளியில் அவியல் மணத்தோடு வந்துவிட்டதென்றால் அருணாசலம் பிள்ளை சமையல் என்று பொருள்.

சேனையையும் கத்தரிக்காயையும் கேரட் பீன்ஸையும் உருளைக்கிழங்குடன் போட்டு தேங்காய் எண்ணெய் கமகமக்க அவர் செய்துதரும் அவியலை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.

அப்பாவோடு அருணாசலம் பிள்ளை வீட்டிற்கே போயிருக்கிறேன். அவர் ஜோஸப் பேக்கரிக்கு எதிரேயுள்ள முருகப்பெருமான் தெருவில் அப்போது அருணாசலம் பிள்ளை இருந்தார்.

நெற்றிநிறைய திருநீறு, தோளில்துண்டு, தும்பைப்பூ போன்ற வேட்டி..போனவுடன் முன்னறையில் சூடாகக் காபி வரும், ஆள்சிவப்பழமாய் இருப்பார். போனவுடன் பெரிய வணக்கம் போடுவார். “ சார்வா எங்கிருந்து வர்ரிய?” என்பார்.

சொல்லிமுடித்தவுடன் என்ன நிகழ்ச்சி? , என்ன சாப்பாடு? எத்தனை பேருக்கு வேண்டும்? என்று கேட்பார். அதற்கு அவர் வாங்கும் தொகை மிக நியாயமானது.

சென்னையில் அவர் இருந்திருந்தால் டிவி சமையல் நிகழ்ச்சி பத்திரிகைப் பேட்டி என்று அவரைக் கொண்டாடியிருப்பார்கள்.

அவர்வீடே கல்யாணவீடு மாதிரி இருக்கும். ஒருபக்கம் வெங்காயம், பூண்டு உறித்துக்கொண்டிருப்பார்கள், இன்னொரு பக்கம் காய்கறிகள் நறுக்கிக்கொண்டிருப்பார்கள். மூட்டைமூட்டையாய் அரிசி இருப்பில் இருக்கும்.

வாழைப்பழம் தார்தாராகத் தொங்கிக் கொண்டிருக்கும்.

எவ்வளவுபேருக்குச் சாப்பாடு என்று முந்தைய நாளே சொல்லிவிட்டால் சொன்னநேரத்தில் ஆட்டோவில் டானென்று உணவு வந்து இறங்கிவிடும்.

எண்பதுகளிலேயே தலையில் தொப்பியோடு சீருடையில் உணவு பறிமாற ஆட்கள் வைத்திருந்தார்.

அவர் திருநெல்வேலி ஸ்பெஷல் சொதிக்குழம்பு வைத்தார் என்றால் சாதப் பற்றாக்குறை வந்துவிடும். தேங்காய் துறுவலைத் தண்ணீர்விட்டு ஆட்டி பால் எடுத்து பாசிப்பருப்பை வறுத்து மிளகாய் பூண்டுடன் வேகவைத்து அவர் செய்யும் சொதிக்குழம்பு அத்தனை சுவையானது. இஞ்சிப் பச்சடியோடு சொதிக்குளம்பும் அவர் கை மணத்தில் திருநெல்வேலி முழுக்க மணக்கும்.

திருநெல்வேலியில் திருமணத்திற்கு மறுநாள் மறுவீடு அன்று அதுதான் வைக்கப்படும்.

மதியச்சாப்பாட்டிற்கு மட்டுமல்ல இரவு ஊத்தப்பத்திற்கும் இடியாப்பத்திற்கும் அவர் வைத்த சொதி சுவையான இணையுணவுதான்.

அன்றுமுதல் இன்று வரை வெள்ளிக்கிழமை என்றால் நெல்லை உணவகங்களில் சொதிக் குழம்புதான். சாப்பிட்டுவிட்டு சனி ஞாயிறு வீட்டில் தூங்கவோ என்னவோ அப்படியொரு வழக்கம் இன்று வரை நெல்லை உணவகங்களில் தொடர்கிறது.

பள்ளிநாட்களில் பாலாதான் ரெகுவிலாஸ் அழைத்துப் போனான். எந்த கடையில் எது நன்றாக இருக்கும் என்ற நாடித்துடிப்பை அறிந்தவன் அவன்.

நான் வழக்கம்போல் ங வென்று பின்னால் போகும் ரகம். அற்புதமான சுவைக்கலைஞன் அவன் நம் நண்பனாக வாய்த்து வேறுவழியில்லாமல் இப்படிக் கூட்டிக்கொண்டு அலைகிறானே என்று அவ்வப்போது நினைப்பேன்! என்ன செய்வது? யாருக்கு யார் நண்பனாக வாய்க்க வேண்டும் என்று அந்த தேவன் எழுதியதை இந்த தேவன் மாற்றமுடியுமா?

எங்கள் சொதிசுவையகமான ரகுவிலாஸ் டவுண் சந்திப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இருந்தது. மிகப் பழைய உணவகம்.

சொதியும் கூழ்வத்தலையும் இஞ்சித் துவையலை ஒருபிடி பிடிப்போம். அதைவிட்டால் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள விசாகபவன். ஆரெம்கேவி போய் தீவாளிக்குத் துணிமணிகள் எடுத்துவிட்டு மூணுமணிக்கு விசாகபவன் போனாலும் சொதிக்குழம்பு இருக்கும்.

ரசம்,மோர், வத்தக் குழம்பெல்லாம் அன்று கணக்கில் எடுப்பதே கிடையாது.

மொத்தச் சாதம் முடிகிறவரை ஒன்லி சொதிதான். மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு பீடாவைச் சவைத்தவாறு அங்கிருந்து மார்க்கட் பஸ் ஏறினால் நயினார்குளம் அரசமரநிறுத்தம் வரும்போது ஒரு சொக்குசொக்குமே அந்தநாள் மீண்டும் வராது. தூங்கிஒருநாள் ஹைகிரவுண்ட் ரவுண்டானாவில் முழிப்புவந்து திரும்ப அதே பஸ்ஸில் மார்க்கட் வந்து இறங்கியது ADJ கண்டக்டர் தலையில் அடித்துக்கொண்டதும் மறக்கமுடியாத மகாத்மியங்கள்.

டவுண் போகமுடியவில்லை என்றால் மார்க்கட் அன்னபூர்ணாவுக்கு அருகில் உள்ள சேதுமெஸ்தான் எங்கள் அடுத்த தெரிவு.

பெரியகடை போன்றெல்லாம் இருக்காது.

வீட்டை மெஸ் ஆக மாற்றியுள்ளார்கள், அங்கே சொதிசாப்பிடுவோம்.

உணவுசமைக்கவும் உணவைப் புசிக்கவும் ரசனை இருந்தால் மட்டுமே சரியாகச் செய்யமுடியும்.

என் சேக்காளி ஒருவன் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வியாழக்கிழமை சென்னையிலிருந்து நெல்லை எக்ஸ்பிரஸில் கிளம்பி பாளையங்கோட்டை வந்து சொதி சாப்பிட்டுவிட்டு இருநாட்கள் தாமிரபரணியில் திவ்யமாய் ஆனந்தக் குளியல் போட்டுவிட்டு ஞாயிறு மாலை அதே நெல்லை எக்ஸ்பிரஸில் இருட்டுக்கடை அல்வாவோடு கிளம்பி திங்கட்கிழமை எந்திரவாழ்க்கைக்குள் நுழைந்துவிடுவான்.

நகரத்தில் இருப்பவனுக்கும் நரகத்தில் இருப்பவனுக்கும் எப்போதும் ஒரு சொர்க்கம் இருக்கத்தானே செய்யும். எங்கள் சொர்க்கம் நெல்லையைத் தவிர வேறெங்கு இருக்கமுடியும்?

By

சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
திருநெல்வேலி

இதுதான் நம்ம நாடு?!

மக்கள் எல்லாரும் கொரோனா வந்துவிட்டதால்.. பிழைப்புகள் எல்லாம் முடங்கி விட்டதே!. என நொந்து கிடக்க, மாநில அரசும் ஒன்றிய அரசும் மக்களின் கவலையை உணராது ஆளாளுக்கு விலைகளை ஏற்றிய வண்ணம் இருக்கின்றனர்.

ஏதோ மக்கள் எல்லாம் இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னால் எந்த ஒரு கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறார்கள் போலும். இந்தியாவில் வேலை தேடி வட மாநிலத்து மக்கள் பல மாநிலங்களிலும் சிக்குண்டு கிடந்து, தங்களின் ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிர்ப்பது பார்த்தால் .. இத்தனை ஆட்சிகள் வந்தும் மக்களுக்கு முன்னேற்றம் இல்லை என்பது தெளிவாகிறது.

ஏறத்தாழ இரண்டு மாதங்கள் எந்த வேலைக்கும் போகாமல் இருக்கும் அன்றாட தினக்கூலிகளும் விளைவித்த அழுகும் பொருள்களான காய்கறி பழ வகைகளை எடுத்துச் சென்று விற்க முடியாமலும் வாங்குவார் வந்து வாங்க முடியாமலும் இழப்பை சந்திக்கும் வேளாண் மக்களின் அழுகையை உணராதவர்களாக இருப்பது கவலையிலும் கவலையளிக்கிறது.

இதனிடையே ஏறிக்கொண்டே இருக்கும் உணவு பொருட்களின் விலைகளோடு தலைதெறிக்க ஓடும் வேகத்தில் எல்லாம் விலையேறிக் கொண்டிருக்க.. தங்கத்தின் விலையும் ஏறிவிட்டது. கடைகள் எல்லாம் அடைத்து கிடக்கும் போதே எந்த காரணத்தால் விலை உயர்த்தப்பட்டது என்ற விளக்கம் இல்லை. அப்போ அரசுகள் மக்களை கைக்கழுவி விட்டு, யார் எதை செய்தாலும் செய்துக் கொள்ளுங்கள் என விட்டுவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. ஆட்சி அரசியல் மக்களுக்கனதாக இல்லை..

உலகச் சந்தையில் எப்போழ்தும் இல்லாத அளவுக்கு எண்ணெய் விலை வீழ்ச்சி. அதற்கு தகுந்தாற் போல் விலைகளை அமைத்திருந்தால் அதன் பயனை இந்திய மக்கள் அனுபவித்திருப்பர். கொரோனா கவலையை தீர்க்காத அரசுகள் விலையேற்றத்தை தடுக்காமல், இறக்கப்படாமலே இருக்கும் எரிவாயு விலை. மசகு எண்ணை பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயர்த்தி விட்டன.

நோயையும் அதன் அறிகுறிகளையும் கண்டறியும் கருவிகளையும் கூட படைத்தளிக்க முடியாத நாடு வாங்கிய கருவிகளின் விலையில் கூட இரண்டு இரண்டு மடங்கு. முதலில் இந்தியாவின் நோய் எதுவென கண்டு பிடிக்க வேண்டிய கருவிகளாக மக்கள் சிந்திக்க வேண்டியுள்ளது.

எந்த நோயிற்கும் விலை குறைந்த நம் நாட்டு மருத்துவத்தை முன் நிறுத்தி உலக மக்களுக்கெல்லாம் எளிதில் நோய் போக்கி பாதுகாப்பு அளிக்கும் சித்த மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்றுச் செய்ய மறுக்கிறன.

இதன் இடையிடையே கோடி கோடிகளாய் நாட்டின் பெரு முதலாளிகள் என சொல்லப்பட்டவரக்ளுககே கடன் தள்ளுபடிகள். ஏழைகளின் கடன்களுக்கு அது இல்லை.

நாடு தன் உற்பத்திகளை எல்லாம் இழந்து விட்டது. அன்றாடக் கூலிகளாக ஆனவர்களின் வாழ்க்கை என்னாவது.. எனத் தெரியாமல் முடங்கி விட்டது ஏழைகளின் வாழ்க்கை. உலகம் நோயின் முன்னால் கைகட்டி நிற்கிறது. ஆனால் மாநில அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்களை தேடி நின்றழைக்கிறது. இன்னமும் எத்தனை காலம் தான் மக்களின் முயற்சிகளை முன்னெடுக்காமல் முடமாக்கப் போகிறதோ..

வெளிநாட்டுக்காரர்களை நம்பி வாழும் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? சிந்திக்காத அரசுகள். மாநில உரிமைகளை பறிக்கும் மைய அரசு. கல்வி உரிமை, காவிரி நீர் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு, சிரிக்கும் மாநில அரசு.

போகிற போக்கை பார்த்தால்.. நாடு மக்களுக்காக எதையும் செய்யாது. முடிந்தால் அடிபடும் மக்களே.. அரசிற்கு உதவுங்கள் என கை விரித்து விட்டு மதுக்கடைகளை திறக்க நாளும் குறித்து விட்டது. கட்டும் வரிகளும் போதாதென்று?!.

இந்த நிலையில் நம் நாட்டில் நல்ல பல ஆளுங்கட்சி போதாதென்று பல எதிர் கட்சிகள்? கேள்வியை யார் கேட்பது? வாழட்டும் நம் சனநாயகம் மட்டும்! கேள்வி கேட்பாரின்றியே?!

பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

மருத்துவம் குணம் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசி

பெயர் காரணம்

பழங்காலத்தில் தங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதற்கு முன்னர் மாப்பிள்ளை பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வைப்பர். அந்த கல்லை தூக்கம் நபருக்கு தங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர். இந்த ரக அரிசியை சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்கும் பலம் உடையவர்களாக இருப்பார்கள். இதனால், இதற்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வந்தது.

தனித்துவம்

இந்தியாவில் தொன்றுதொட்டு பயிரிடப்படும் பாரம்பரிய நெல் வகைகள் மிகவும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. அவற்றிலும் மாப்பிள்ளை சம்பா தனித்தன்மை உடையது. அதற்குக் காரணம், மாப்பிள்ளை சம்பாவின் நோய் எதிர்ப்பு சக்தி. இதில் புரதம், நார்சத்து மற்றும் உப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

மருத்துவம் குணம்

  • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது.
  • நரம்புகளுக்கு வலுவூட்டும் மற்றும் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும்.
  • உடலுக்கு வலுவைத் தரக்கூடிய அணைத்து வகையான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உள்ளது.
  • நீண்ட நாள்பட்ட வயிறு வலி மற்றும் வாய் புண்களை குணப்படுத்தும்.