வாகன ஓட்டுநர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்

துயர் துடைப்பு நிதி, ஆறு மாத வரி விலக்கு உள்ளிட்ட வாடகை வாகன ஓட்டுநர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மூன்று மாத காலத்திற்கும் மேலாக அனைத்து தொழில்களும் பெருமளவில் முடங்கிபோயுள்ளது. இதன்காரணமாக வாடகைக்கு வாகனங்களை இயக்கும் தொழில் புரிவோரும், அதில் பணிபுரியும் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என அனைத்து தரப்பினரும் தொழில் முடக்கத்தால் வருமானமின்றி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தினக்கூலிக்கு வாகனங்கள் இயக்கிவந்த வாடகை வாகன ஓட்டுநர்கள், தங்களது வாகனக் கடனுக்கான மாதத்தவணையைக் கூட செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள ஓட்டுநர்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகையான 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்ததால் பெரும்பாலான வாகன ஓட்டுநர்களுக்கு அந்த உதவித்தொகை கூட கிடைக்கவில்லை.

கடுமையான ஊரடங்கு காரணமாக நெடுநாட்கள் இயக்கப்படாது, சிறிதும் வருமானமின்றி தவித்துவந்த வாடகை வாகன ஓட்டுநர்கள் தமிழக அரசு அறிவித்த தளர்வுகளுக்கு பிறகுதான் வாகனங்களை இயக்க தொடங்கினர். இருந்தபோதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் ஒரு நாளைக்கு ஓரிரு பயண வாய்ப்பே கிடைக்கின்றது. அதிலும் சமூகப்பரவலைத் தவிர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியமையால், வழமையை விட குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகளை அனுமதிப்பதால் குறைந்தளவு வருமானம் தான் கிடைக்கிறது. அந்த வருமானமும் கடந்த இருமாதங்களாக அதிகரிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக நட்டத்திலேயே முடிவடைகின்றன.

இவைமட்டுமின்றி சாலைவரி, சுங்கவரி, மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரி காரணமாக எளிய மக்களால் வாடகை வாகனத் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் கைவிடும் சூழலே நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான வாடகை வாகன ஓட்டுநர்களின் குடும்பங்கள் பசியில் வாடி, வறுமையில் உழலும் நிலைக்குத் தள்ளப்பட்டு அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.

இத்தகைய சூழலிலும் தமிழக அரசு வாடகை வாகனங்களுக்கான வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

பொதுமுடக்கம் முடிந்தாலும் இயல்பு நிலைத்திரும்ப குறைந்தபட்சம் 6 மாத காலமாவது ஆகும். இவற்றைக் கருத்திற்கொண்டு தமிழக அரசு,

1. வாடகை வாகனக் கடனுக்கான மாதத்தவணைகளை இந்த ஆண்டு இறுதிவரை வசூலிக்கக் கூடாது எனவும். அந்தக் காலங்களில் வங்கிக் கணக்குகளில் தவணைகளுக்கான காசோலைகளைச் செலுத்தி பணம் இல்லாமைக்கான அபராதம் உள்ளிட்டவற்றை எந்த வங்கிகளும் வசூலிக்கக்கூடாது எனவும், இது வங்கிகளுக்கு மட்டுமன்றி சிறு-குறு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் தமிழக அரசு விரிவான உத்தரவினைப் பிறப்பிக்க வேண்டும்.

2. வாடகை வாகனங்களின் தகுதிச் சான்று, வணிக ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகனக் காப்பீடு ஆகியவற்றைப் புதுப்பித்துக் கொள்வதற்கு இந்த ஆண்டு இறுதிவரை விலக்கு அளிக்க வேண்டும்.

3. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடையும் இந்த நேரத்தில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வந்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்‌.

4. தமிழகத்தில் வணிக ஓட்டுநர் உரிமம் அல்லது ஓட்டுநர் உரிமம் (Badge or Licence)வைத்துள்ள அனைத்து வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் தமிழக அரசு துயர் துடைப்பு நிதியாக ரூ.10,000 வழங்க வேண்டும்.

5. அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் பொருளாதாரப் பின்னடைவில் இருப்பதால் தமிழகத்திலுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் குறைந்தபட்சம் இந்த ஆண்டு இறுதிவரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்.

6. சாலை வரி, வாடகை வாகன வரி போன்ற வரிகளை இந்த ஆண்டு முழுமைக்கும் நீக்க வேண்டும்.

இப்பேரிடர் காலத்தில் அன்றாடப் பிழைப்புக்கே வழியின்றி அல்லலுறும் வாடகை வாகன ஓட்டுநர்களின் மிக நியாயமான இக்கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

மூலப்பதிப்பு: http://bit.ly/32wQzA7

கொரோனா கசாயம்

கொரனோவால் எந்த உயிரிழப்பும் இல்லாமல் சிறப்பாக கட்டுப்படுத்தி, குணப்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டிய சித்த மருத்துவர் திரு.வீரபாபு அவர்கள் கொரோனாவைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருக்கு துணை மருந்தாக அவர் கண்டுபிடித்த மூலிகை தேநீரையும் சேர்த்துக் கொடுத்து தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஆங்கில மருந்து இல்லாமல், முழுவதும் சித்தா மருந்துகளைக் கொண்டே #கொரோனாவை ஒரே வாரத்தில் குணப்படுத்தி வருகிறார்.

அவ்வாறு தாம் கொடுக்கும் மூலிகை தேநீரில் சேரும் பொருட்களை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளார்.
அதன் விபரங்கள்

சுக்கு – 100 கிராம்,
அதிமதுரம் – 100 கிராம்,
சித்தரத்தை – 30 கிராம்
கடுக்காய்த்தோல்- 30 கிராம்
மஞ்சள் – 10 கிராம்,
திப்பிலி – 5 கிராம்,
ஓமம் – 5 கிராம்
கிராம்பு- 5 கிராம்,
மிளகு – 5 கிராம்

மேற்குறிய அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

இவற்றை இடித்துப் பொடிசெய்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தவும்.
ஒரு பாத்திரத்தில் 400 மி.லி நீர் விட்டு அதில் இந்த பொடியை 10 கிராம் அளவு போட்டு நன்கு கொதிக்க விடவும். இக்கசாய நீர் 100 மி.லி அளவாக வற்றியதும் ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை அல்லது 10 மி.லி அளவு தேன் சேர்த்து கிளறி, இறக்கி ஆற வைக்கவும்.
இளம் சூடாக ஆறிய பின்பு இதை வடிகட்டி காலையில் உணவிற்கு பின்பு குடிக்கவும். இரவிலும் இதே போல் செய்து உணவிற்குப் பின்பு குடிக்கவும்.

பொதுவாக கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களுக்கு கபசுரக் குடிநீரை உணவிற்கு முன்பும், இந்த #மூலிகை #தேநீரை உணவிற்குப் பின்பும் கொடுக்கப் படுகிறது.

இந்த மூலிகை தேநீர் அடுப்பில் கொதிக்கும் போது 5 கற்பூரவள்ளி இலைகள், 10 புதினா இலைகளும் சேர்க்கலாம்.

இந்த மூலிகைத் தேநீரை பெரியவருக்கு ஒருவேளைக்கு 100 மி.லி அளவு கொடுக்க வேண்டும்.
சிறுவர்களுக்கு இதில் பாதி அளவு 50 மி.லி போதும்.
இதை கொரோனா அறிகுறிகள் குணமாகும் வரை கொடுக்க வேண்டும்.

கொரோனா இல்லாதவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை தினமும் ஒருவேளை வீதம் காலையில் குடித்து வரலாம்.!
பத்தியமில்லை.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசை தமிழரின் மூலிகை மருந்து ஓட ஓட விரட்டுகிறது என்பது வியப்பான நற்செய்தி.

சித்த மருத்துவர்கள் மீது சந்தேகம் ஏன்? ஐகோர்ட் கேள்வி

சித்த மருத்துவர்கள், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறினார், சந்தேக பார்வையை விரிப்பது ஏன் என, தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

திருத்தணிகாசலம் என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை எதிர்த்து, அவரது தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கூறியதாவது:

சித்த மருத்துவர்கள் மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறினால் சந்தேக பார்வையை விரிப்பது ஏன்? மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் சந்தேகம் எழுப்புவது ஏன் சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்தலாமே? மத்திய மாநில அரசுகளால் சித்த மருத்துவத்தின் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் அலோபதி என்ற பெயரில் கபசுர குடிநீர் கொடுத்து சித்த மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்படுகிறது. சித்த மருத்துவர்கள் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறினாலே சந்தேகத்துடன் பார்க்கிறது.

நமது மருத்துவர்களுக்கு கட்டமைப்பு, பண உதவிசெய்து அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக எத்தனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சித்த மருத்துவர்கள் கண்டுபிடிதத எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன? அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளனரா? ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, சித்தா வளர்ச்சிக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது.? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் பதில் அளிக்க மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

கபசுரக் குடிநீர் வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்

இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரம் சாதிக் பாஷா நகரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

என்றும் மக்கள் பணியில், நாம் தமிழர் கட்சி

இப்படிக்கு:
தொகுதி செய்திபிரிவு
இராணிப்பேட்டை தொகுதி
நாம் தமிழர் கட்சி

ஏனெனில், நாங்கள் யோக்கியர்கள்?

கொரோனா நிதியாக PM cares க்கு எவ்வளவு நிதி வந்தது என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சொல்ல முடியாது – மத்திய அரசு.

பண மதிப்பிழப்பில் எவ்வளவு பணம் திரும்ப பெறப்பட்டது ?

பதில்: சொல்ல முடியாது

புதிதாக அச்சடிக்கப்பட்ட பணம் எத்தனை லட்சம் கோடி ?

பதில்: சொல்ல முடியாது

கைப்பற்றப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு ?

பதில்: சொல்ல முடியாது.

ஜி.எஸ்.டி யால் அரசுக்கு எத்தனை லட்சம் கோடி லாபம் ?

பதில்: சொல்ல முடியாது

பணம் சம்மந்தமான எந்த தகவலையும் வெளியே சொல்ல முடியாது
எதுக்கும் கணக்கு காட்டவும் முடியாது. ஆனால் உலகத்துலேயே நாங்க மட்டும் தான் யோக்கியன் மற்றவன் எல்லோருமே தேச துரோகி!

கோவிட்-19: சித்த மருத்துவம் காட்டும் நம்பிக்கைப் பாதை – மருத்துவர் கு. சிவராமன்

கரோனாவுக்கு எதிரான போரில் பங்கேற்க சித்த மருத்துவர்கள் முன்வந்தபோது, முன்வைக்கப்பட்ட கேள்வி: “இந்த நோயோ புதிது. இந்த வைரஸ் எடுத்திருப்பது புதுப் பரிமாணம்; நாங்களே கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கும்போது, இதில் சித்த மருத்துவம் என்ன செய்துவிட முடியும்?” எனக் கேட்காத அலோபதி மருத்துவர்கள் குறைவு. நவீன அறிவியலின் ஆய்வுக் கண்களை மட்டுமே கொண்டு அளவிடும் அறிவியாலாளர்கள் மத்தியில், சித்த மருத்துவ ஆய்வாளர்கள் சற்றே நெருக்கடியை உணர்ந்த தருணம் அது. அதேநேரம் ‘கரோனாவுக்கு எதிராக எங்கள் துறையில் இதுவரை கிடைத்த அனுபவங்களை, அறிவியலின் துணைகொண்டு உரசிப்பார்க்க முன்வருகிறோம்’ என சித்த மருத்துவர்கள் முன்வந்தார்கள். அதற்குத் தற்போது பலன் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.

மத்திய அரசு மார்ச் மாதத்தில் ஆயுஷ் அமைச்சகப் பரிந்துரைகளையும் கரோனாவுக்கான வழிகாட்டுதலையும் அறிவிப்பாக வெளியிட்ட பின்னர், பல்வேறு விவாதங்கள் எழுந்தன, விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த கூறுகளைக் கொண்ட ‘ஆரோக்கியம் வழிகாட்டுதல்’ தொடர்பான அரசாணையை தமிழக அரசு ஏப்ரல் 23 அன்று வெளியிட்டது. நோய் எதிர்ப்பாற்றல் தரக்கூடிய கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர்; நோய்க்குப் பின்னர் அமுக்கரா சூரண மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றை உட்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன் தேசிய, மாநில வரலாற்றில் முதன்முறையாக ஆய்வு நோக்கில் சித்த மருத்துவக் குடிநீரை நவீன மருதுகளுடன் சேர்த்துப் பயன்படுத்துவதற்கான கூட்டு சிகிச்சைக்கான ஒப்புதலையும் தமிழக அரசாணை வழங்கியது.

சித்த மருத்துவ உலகுக்கு இது மிக முக்கிய மைல்கல். அரசாணை வருவதற்கு முன்னரே தமிழக அரசின் இந்திய மருத்துவத் துறை மாவட்ட ஆட்சியர்கள் அனுமதியுடன் கபசுரக் குடிநீரை நோய்த்தடுப்புக்கு வழங்கத் தொடங்கியிருந்தது. அரசாணை பெற்றதும், மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், ஆராய்ச்சிப் பார்வையுடன் பணியாற்றும் சித்த மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் முழு வீச்சில் ஆய்வுகளைத் தொடங்கினார்கள்.

முதல் கட்ட ஆய்வுகள்

திருப்பத்தூரில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வுதான் முதல் நிலை ஆய்வு முடிவை அளித்தது. டெல்லியில் இருந்து திரும்பிய இரண்டு குழுக்கள் பரிசோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு குழு (42 பேர்) கபசுரக் குடிநீர் உடனும் மற்றொரு குழு குடிநீர் (70 பேர்) இல்லாமலும், ஒரே உணவு, ஒரே வாழ்க்கை முறையுடன் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். ஆய்வின் முடிவில் குடிநீர் குடித்த குழுவில் எல்லோரும் நலமுடன் வீடு திரும்ப, கபசுரக் குடிநீர் குடிக்காத குழுவில் 5 பேருக்குத் தொற்றுநோயிருந்தது தெரியவந்தது. மருத்துவர் வி. விக்ரம்குமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது. எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாத முதல் நிலை ஆய்வுதான் என்றாலும், இந்த ஆய்வு கொடுத்த ஊக்கமான முடிவு வேறு பல ஆய்வுகளுக்கு முன்னோடியாக அமைந்தது.

திருப்பத்தூரில் வி. விக்ரம்குமார் மேற்கொண்ட இரண்டாம் கட்ட ஆய்வு தற்போது நிறைவடைந்து, ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த ஆய்வில், முதல் நிலை ஆய்வுத் தகவலாக LDH (Lactate dehydrogenase enzyme), CPK (Creatine phosphokinase enzyme) குறைவதை மத்திய ஆராய்ச்சி நிறுவனம் பதிவுசெய்துள்ளது. அந்த வகையில் கபசுரக் குடிநீர் புதிய மருந்துப் பரிமாணம் பெறுவதை ஆச்சரியத்துடன் விளக்குகிறது.

அதேவேளை நெல்லை மேலப்பாளையம் கிருஷ்ணாபுரத்தில், இதேபோல் நிலவேம்புக் குடிநீர் குடித்தவரிடையே ஒருவர்கூட தொற்றைப் பெறாத நிலையை ஆராய்ந்து அறிந்தது. இந்தக் குழுவில் ஒருவர் டெல்லியில் இருந்து நேரடியாக நெல்லை வராமல், வேறு ஊருக்கு பயணிக்க, அவருக்குக் குடிநீர் வழங்க வாய்ப்பில்லாமல் போனது. அவருக்கு நோய்த்தொற்று இருந்தது.

விரிவான ஆய்வுகள்

கரோனா தொற்று இருப்பவர்களிடையே கபசுரக் குடிநீருடன் ஆங்கில மருந்து தரப்பட்ட கூட்டு ஆய்வு திருப்பதியில் நடைபெற்றது. இதுவரை 18 பேர் குணமடைந்துள்ளனர், 12 பேர் நலமடைந்துவருகின்றனர் என்று சித்த மருத்துவ கவுன்சிலின் டாக்டர் சாம்ராஜ் தெரிவிக்கிறார்.
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி கோவிட் சிறப்புப் பிரிவில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சித்த மருத்துவக் கபசுரக்குடிநீரை வழங்கியது. அந்த வகையில் ஐந்தே நாட்களில் கோவிட் நோயாளிகள் நெகட்டிவ் நிலையைப் பெற்றதைப் பதிவுசெய்துள்ளது.

சென்னை ஜவஹர் கல்லூரி வளாகத்திலும் வைஷ்ணவக் கல்லூரி வளாகத்திலும் கோவிட் நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர், மூலிகைத் தேநீர் வழங்கப்பட்ட சிகிச்சையில் ஏழாம் நாள் முதல் கோவிட் நோயாளிகளின் பரிசோதனை மாதிரிகள் நெகட்டிவ் ஆகியுள்ளன. இந்தத் தகவலை மருத்துவர் வீரபாபுவும் தேசிய சித்த மருத்துவ நிறுவன வழிகாட்டுதலுடன் நடத்தியுள்ளார். அதேபோல் புழல் சிறையில் 23 நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு ஏழாம் நாளில் 22 பேருக்கு நெகட்டிவ் ஆனது. இது குறித்து தேசிய சித்த மருத்துவ நிறுவனம், அடுத்த கட்ட ஆராய்ச்சிகளை நடத்திவருகிறது.

முறைசார்ந்த ஆய்வு

பொதுவாக நோயாளிகளிடன் நடத்தப்படும் பரிசோதனையில் Randomised clinical trial (RCT) மிக முக்கியமானது. சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் கபசுரக் குடிநீர் சார்ந்து இங்கே நடத்திவரும் ஆய்வு முடியும் தறுவாயில் உள்ளது. இந்தக் குடிநீர் ‘வைரஸ் எண்ணிக்கையை குறைக்கிறதா?’ என Quantitative RTPCR முறையில் கணக்கிட்டும், குடிநீரைக் குடிக்கும்போது ரத்தத்தில் நோய் எதிர்ப்பாற்றல் அணுக்களான இண்டர்லூகான், சைட்டோகைன் ஆகியவற்றின் பங்கு குறித்தும் அறிந்துகொள்ள மேற்கொள்ளப்படும் ஆய்வு இது. இந்த ஆய்வின் முடிவுகள் உலகின் கவனத்தை சித்த மருத்துவத்தின் பக்கம் திருப்பக்கூடும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்.) கீழுள்ள Clinical Trials Registry – India (CTRI)இல் பதிவுசெய்யப்பட்டு நடத்தப்படும் ஆய்வு இது. மருத்துவர் நடராஜன் குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டுவருகிறார்கள்.

தற்காப்பாக 15,000 பேருக்குக் கபசுரக் குடி நீர் கொடுக்கப்பட்டதில், எத்தனை பேர் நோய்த்தொற்றைப் பெற்றுள்ளனர் என நடத்தப்பட்ட ஆய்வில் 0.1 சதவீதத்துக்கும் குறைவானோரே தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று மத்திய சித்த மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. கபசுரக் குடிநீரைக் கொடுத்ததால் ஏதாவது எதிர்விளைவு ஏற்பட்டுள்ளதா என ஆராய்ந்ததில், கபசுரக் குடிநீர் சிலருக்கு வயிற்று தாபிதத்தை (சூடு) ஏற்படுத்துவதை தவிர வேறு பிரச்சினைகள் அறியப்படவில்லை. இரைப்பை அழற்சியை உருவாக்கும் தன்மை இந்தக் குடிநீருக்கு இருப்பதால், இரைப்பை சார்ந்த நோயாளிகள், ஏற்கனவே இரைப்பை அழற்சி, அல்சர் போன்றவற்றுக்கு சிகிச்சை எடுப்பவர்கள், மருத்துவர் வழிகாட்டுதலின் படியும் உணவுக்குப் பின்னரும் இந்தக் குடிநீரை அருந்த அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஆய்வை மருத்துவர் சத்யராஜேஸ்வரன் குழு நடத்திவருகிறது.

வைட்டமின் சி, டி, துத்தநாகச் சத்து சார்ந்து ஒரு பிரிவினருக்கும் கபசுரக் குடிநீர் சார்ந்து இன்னொரு பிரிவினருக்குமாக 251 பேரிடம் Survival analysis ஆய்வை கோவை ஈஎஸ் ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்தக் குழுவினர் மேற்கொண்டனர். இந்த ஆய்வு மருத்துவ ஆய்விதழுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் குடிநீர் அருந்திய கர்ப்பிணிப் பெண் நலமுடன் குழந்தையைப் பெற்றெடுத்ததும் பதிவாகியுள்ளது.

ஒருங்கிணைந்த முயற்சி

நோயாளிகளிடம் நடத்தப்படும் ஆய்வு முடிவுகள் ஒருபக்கம் இருந்தாலும், மற்றொருபுறம் மருந்து சார்ந்த ஆராய்ச்சிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கபசுரக் குடிநீர், நொச்சிக் குடிநீர், அரத்தைக் குடிநீர் ஆகியவற்றின் Bioinformatics docking studies உள்ளிட்ட முதல்கட்ட Invitro ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. ராமச்சந்திரா பல்கலைக்கழகம் உள்ளிட்ட தனியார் பல்கலைகழகங்களிலும் ஆய்வுகள் தொடங்கியுள்ளன. சில தனியார் ஆய்வு நிறுவனங்கள், உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்படி கோவிட்-19 சார்ந்து சித்த மருந்துகளில் ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு முடிவுகள் “காய்ப்பு உவப்பு” இல்லாமலும், பாரபட்சமற்றும் உலக மருத்துவ ஆய்விதழ்களில் சமர்ப்பிக்கப்படும்போது சித்த மருத்துவத்தின் மீதான பார்வை உலக அரங்கில் வலுப்பெறும்.

கள்ளகுறிச்சி, தேனி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, நெல்லை மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவர்களும் நவீன மருத்துவர்களும் இணைந்து ஆய்வு நடத்திவருவது ஒருங்கிணைந்த மருத்துவத்தின் ( Holistic Medicine) இன்றைய தேவையையும் நீண்ட நாட்களாக கனவாக மட்டுமே இருந்த அம்சம், நனவாகி வருவதையும் காட்டுகிறது.

தமிழகத்தின் பல பகுதிகளில் சித்த மருத்துவர்கள் தனிநபர் பாதுகாப்பு உடை அணிந்து, நோயாளர்களுக்குக் குடிநீரைக் கொடுத்து, மத்திய அரசின் ஆரோக்கிய சஞ்சீவினி செயலியில் ஆய்வு முடிவுகளைப் பதிவிட்டுவருவது, கரோனா காலத்தில் தமிழ் மருத்துவம் இன்னொரு தளத்துக்கு நகர்ந்துவருவதைக் காட்டுகிறது. சித்த மருத்துவம், உலக மரபு மருத்துவங்களுக்கு இணையான அந்தஸ்தைப் பெறும் நாள் நிச்சயம் வரும்.

கட்டுரையாளர், பிரபல சித்த மருத்துவர்-எழுத்தாளர்
தொடர்புக்கு: ‪herbsiddha@gmail.com‬

வள்ளுவப் பண்பாட்டு நடுவம்:அறிக்கை எண்: 03/19.06.2020

தமிழக அரசிற்கு எமது நடுவத்தின் சார்பாக கீழ்க்காணும் இரண்டு கோரிக்கைகளை வைக்கிறோம். இதன் பொருட்டு தமிழக அரசு இவ்விரு கோரிக்கைகள் மீதும் உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறு வேண்டுகிறோம்.

கோரிக்கை : 1
மதிப்பெண்கள் இன்றி தேர்ச்சி என சான்றிதழ் வழங்கக் கோரிக்கை:

கொரோனா நோய்த் தொற்று பரவலின் காரணமாக, கடந்த கல்வி ஆண்டில் (2019-20) தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியருக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களில் இருந்து 80% மதிப்பெண்ணும், மாணவ, மாணவியரின் வருகைப்பதிவில் இருந்து 20% மதிப்பெண்ணும் வழங்குவதாக அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்துப் பள்ளிகளில் இருந்தும் விடைத்தாள்களையும், வருகைப்பதிவையும் வழங்க கோரப்பட்டுள்ளது. இந்த விவரங்களை அளிக்கும் நிலையில் தனியார் பள்ளிகள், பெற்றோரிடம் பணம் பெற்றுக்கொண்டு மாணவர்களுக்கு கூடுதலாக மதிப்பெண்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பள்ளி மேலாண்மைத் தகவல் மையம் (EMIS) எனும் இணையதளத்தில் அன்றாடம் வருகைப்பதிவும், காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களும் ஏற்கனவே தொடர்ந்து பள்ளியளவில் பதிவேற்றம் செய்யப்படும் போது, அதற்குரிய ஆவணங்களைத் தனியாக மீண்டும் ஒருமுறை அரசு கோரத் தேவையில்லை. அதனால், இந்த நடைமுறையைப் பின்பற்றும் போது, தனியார் பள்ளிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு மதிப்பெண்கள் வழங்குவதற்கு வாய்ப்புகள் உருவாகிவிடும். எனவே இந்த நடைமுறையை உடனடியாக அரசு இரத்து செய்ய வேண்டும்.

மேலும், அனைவரும் தேர்ச்சி என அளிக்கும்போது மதிப்பெண் வழங்கல் என்பதே தேவையற்றது. எனவே, பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் அனைவருக்கும் மதிப்பெண்கள் அளிக்காமல், தேர்ச்சியெனச் சான்றிதழ் வழங்க வேண்டுமென வள்ளுவப் பண்பாட்டு நடுவம் கோருகிறது.

கோரிக்கை: 2
மும்பை தாராவியில் தமிழ்வழியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கும் முழுத் தேர்ச்சி அளிக்க வேண்டி கோரிக்கை:

இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான மகாராட்டிரத்தில், கொரோனா பாதிப்பு பெருமளவில் இருப்பதும், இந்திய அளவில் அம்மாநிலம், இந்நோய்த் தொற்றில் முதல் இடத்தில் இருப்பதும் அனைவரும் அறிவோம். அதனால் அங்கு ஏராளமானோர் நோய் தொற்றுக்கு பலியாகி வருகின்றனர்.

அம்மாநிலத்தின் தலைநகரான மும்பையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாகத் திகழும் தாராவி பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். தாராவியின் 2.1 சதுர கி.மீ. பரப்பளவில் சுமார் 10 இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆசியாவிலேயே மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியாகத் திகழ்வது தாராவிதான். இந்நிலையில் அப்பகுதியில் வாழும் தமிழர்களுக்கென தமிழக அரசு தனித்தேர்வர் முறையில் தேர்வு எழுத அனுமதித்து இருந்தது. அதனால், தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு தேர்வு எழுத, சுமார் 200 மாணவ, மாணவியர் விண்ணப்பித்து இருந்தனர்.

கொரானா அச்சமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில் தேர்வுகளை எதிர்கொள்வதில் அம்மாணவ, மாணவியர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள், கல்வியாளர்கள், பல்வேறு அமைப்புகள், நீதிமன்றம் ஆகியோரது கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் படிக்கும், இலட்சக்கணக்கான தமிழக மாணவர்களுக்காக, அனைவருக்கும் முழுத்தேர்ச்சி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்தது போல, தாராவிவாழ் மாணவ, மாணவியருக்கும் முழுத்தேர்ச்சி வழங்குமாறு தமிழக அரசை வள்ளுவப் பண்பாட்டு நடுவம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறது.

இங்ஙனம்
வள்ளுவப் பண்பாட்டு நடுவம்

https://bit.ly/3fGF2l3