“திருப்பதி தமிழர்களுக்கே”
ம.பொ.சி. தொண்டர்படையோடு போராடிய நாள்: 16.8.1947
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் அன்று சென்னை மாநகரில் விடுதலை விழாக் கொண்டாடிய தமிழக எல்லைப் மீட்புப் போராளி ம.பொ.சி. அவர்கள் “போர் முறையும் போர் முனையும் மாறும் நாள்” என்று அறிவித்தார்.
திருப்பதியை மீட்பதே இனி என் முதல் வேலை என்று கூறி விட்டு மறுநாள் (16.8.1947) காலையில் 12 பேர்களோடு வடக்கெல்லையில் உள்ள திருப்பதி நோக்கிப் புறப்பட்டார். அவருடன் புறப்பட்ட தமிழரசுக் கழகத் தோழர்களின் பெயர்கள் வருமாறு:
1.திரு. கொ.மோ. ஜனார்த்தனம்
2.திரு. சோம. சுவாமிநாதன்
3.திரு. தாமோதரம்
4.திரு. வேங்கடசாமி
5.திரு. கிருஷ்ணமூர்த்தி
6.திரு. அம்மையப்பன்
7.திரு. விசுவநாதன்
8.திரு. லூயிஸ்
9.திரு. மு. வேணுகோபால்
10.திரு. தங்கவேலு
11.திரு. டி. ஆறுமுகம்
12.திரு. ஜி. சுப்ரமணியம்
இந்தத் தோழர்களை தமிழினத்தவர் ஒருபோதும் மறத்தல் கூடாது. அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெயராகும்.
ஏனெனில், திருப்பதி நோக்கிச் சென்ற இந்தத் தமிழர்கள் மீது ஆந்திரர்கள் நடத்திய வன்முறைகள் சொல்லி மாளாது.
1911ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் நாள் வரை திருப்பதிக்கு தெற்கேயுள்ள பகுதிகள் முழுவதும் தமிழகத்திற்கு சொந்தமாகவே இருந்து வந்தது. திருப்பதியும், திருக்காளத்தியும் தமிழ் வழங்கும் வட ஆற்காடு மாவட்டத்தில் தான் இருந்தன.
ஆனால், ஆந்திரப்பகுதியோடு இருந்த கடப்பாவிலிருந்து சில வட்டங்களையும் தமிழ் மாவட்டமான வட ஆற்காட்டிலிருந்து சில வட்டங்களையும் பிரித்தானிய அரசு பிரித்து சித்தூர் மாவட்டம் என்று அறிவித்தது. இது ஆந்திரர்கள் திருப்பதி, திருக்காளத்திப் பகுதிகளை சொந்தம் கொண்டாட ஏதுவாகிப் போனது.
1946ஆம் ஆண்டு தமிழரசுக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி கன்னியாகுமரி முதல் வட வேங்கடம் வரை உள்ள தமிழர் தாயகப்பகுதிகளை மீட்டு புதிய தமிழகம் அமைப்பதை தனது இயக்கத்தின் கொள்கைப் பிரகடனமாக ம.பொ.சி. அறிவித்தார்.
அதனை நிறைவேற்றும் பொருட்டுதான் ம.பொ.சி.யின் திருப்பதி பயணம் ஆகஸ்ட் 16ஆம் நாள் தொடங்கியது. அன்று காலை சென்னையிலிருந்து தொடர் வண்டியில் புறப்பட்டுத் திருவாலங்காடு தொடர்வண்டி நிலையத்தை அடைந்த தமிழரசுக் கழகக் குழுவினரை தமிழாசிரியரும் வடக்கெல்லைப் போராளியுமான மங்கலங்கிழார், திருவாலங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் டி.எம். திருமலைப்பிள்ளை ஆகியோர் பெருங்கூட்டத்துடன் வரவேற்றனர். அந்நாளில் திருவாலங்காடு ஆந்திர மாநிலத்தின் பகுதியாக இருந்து வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
திருவாலங்காடு சென்ற அன்று மாலை, அந்தக் கிராமத்தில், எல்லைக் கிளர்ச்சியின் தொடக்கக் கூட்டம் நடைபெற்றது.
மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டு கரடுமுரடான சாலைகளுக்கு இடையில் கனகம்மா சத்திரத்துக்குப் பயணமாயினர். அந்த ஊரில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் நடந்து கொண்டிருந்த போது , சத்திரத்துக்கு வெளியே தெலுங்கர்கள் கூட்டம் அணி திரண்டு எதிர் முழக்கமிட்டனர்.
அதைப் பொருட்படுத்தாமல் கூட்டத்தை முடித்துக்கொண்டு திருத்தணிக்குச் சென்றனர். அங்கு இருந்த நூற்றுக்கணக்கான கடைகளில் ஒரு கடையில் கூடத் தமிழில் பெயர்ப் பலகைகள் இல்லை. தணிகைத் தமிழர்கள் தெலுங்கில் பேசி வந்தனர். அங்கு எல்லாம் தெலுங்குமயமாக இருந்தது.
திருத்தணியில் நடந்த கூட்டத்திலும் தெலுங்கர்கள் குழப்பம் விளைவிக்க முயன்றபோது அங்கிருந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் வன்னியர் சத்திரமொன்றைக் காட்டி அங்கு பேசலாம் என்று சொல்லிக் கூட்டம் நடத்த உறுதுணையாய் நின்றார். அவர் தான் வடக்கெல்லைப் போராட்டத் தளபதிகளில் ஒருவரான திரு. கே. விநாயகம் ஆவார். அந்த சந்திப்பு தான் ம.பொ.சி., வினாயகம் ஆகிய இருவரின் முதல் சந்திப்பாகும்.
வன்னியர் சத்திரத்தில் கலந்து கொண்ட தமிழர்களிடம் பேசிய ம.பொ.சி. தமிழிலேயே பேச வேண்டும், பெயர்ப் பலகைகளை தமிழிலேயே எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகு இளைஞர்களின் பேரணி தணிகைத் தெருக்களில் நடைபெற்றது. அதில் ” தணிகை தமிழருக்கே” என்று முழக்கம் எழுப்பப்பட்டது.
அங்கிருந்து தமிழரசுக்கழகக் குழுவினர் கிளம்பி நகரி (புதுப்பேட்டை) சென்றனர். அங்கு திரு. வரதப்ப முதலியார் என்பவர் சிறப்பான முறையில் வரவேற்றார். பின்னர் சிவசக்தி வேல் என்பவரின் கொட்டகைக்கு முன் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது ம.பொ.சி. குழுவினருக்கு எதிராக சென்னை மாநில சட்ட மன்ற உறுப்பினர் கே.வரதாச்சாரியார் என்ற தெலுங்கரின் சகோதரியார் ஒரு சிறு கூட்டத்தை அழைத்துக்கொண்டு எங்களுக்கு ஆந்திராவும் வேண்டாம், தமிழ்நாடும் வேண்டாம், ” சித்தூர் சித்தூர்காரர்களுக்கே” என்று தமிழில் முழக்கமிட்டு வந்தார். அப்போது அந்தக் கும்பலின் கூச்சலுக்கு இடையே பேசிய ம.பொ.சி. “சித்தூர் சித்தூர்காரர்களுக்குத்தான். அதை யாரும் அபகரிக்க முடியாது. அதை எந்த நாட்டோடு சேர்த்து பட்டா செய்வதுதான் இன்றைய பிரச்சினை” என்றார்.
நகரி கூட்டத்தை முடித்துக் கொண்டு புத்தூர் சென்ற குழுவினரை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரு. துரைசாமி முதலியார் தலைமையில் வரவேற்றனர். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ம.பொ.சி. வீட்டில் தெலுங்கு பேசும் தெலுங்கர்கள் ஆந்திரர்களின் ஆசைமொழிக்கு பலியாகாமல் தமிழர்களோடு சேர்ந்து போராட முன்வர வேண்டும் என்று பேசினார்.
ஆகஸ்ட் 19ஆம் நாள் அக் குழுவினர் திருப்பதி தொடர்வண்டி நிலையம் அடைந்தனர். அங்கு ஆந்திர இளைஞர்கள் சிலர் வீதிகளின் சுவர்களிலே “மீசைக்கார கிராமணியே திரும்பிப் போ! ” திருப்பதி ஆந்திரர்களுக்கே சொந்தம்” என்று எழுதி வைத்திருந்தனர். பல இடங்களில் கறுப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது.
அவருக்கு வரவேற்பு கொடுக்க வந்த ம.பொ.சி.யின் சிறை நண்பர்
திருப்பதிக் கீழ்த்திசை வேங்கடேசுவரர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் நாராயணசாமி நாயுடு என்பவர் பயந்து போய் ம.பொ.சி. குழுவினரை திரும்பிப் போகுமாறு வற்புறுத்தினார். ம.பொ.சி.யோடு மங்கலங்கிழாரும் வந்திருந்தார். ம.பொ.சி. திரும்பிப் போவதை அவமானமாகக் கருதி, திரும்பிப் போக மறுத்து விட்டார்.
கீழ்த்திருப்பதியில் கலவரச் சூழலுக்கு இடையில் கோயில் குளக்கரையில் பொதுக் கூட்டம் தொடங்கியது.அப்போது நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடி ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் கூச்சலிட்டனர்.
மங்கலங்கிழாரையும், கொ.மோ. ஜனார்த்தனம் ஆகிய இருவரையும் பேசவிடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் குளக்கரையில் உள்ள மரங்களில் ஏறி கிளைகளை உடைத்து கூட்டத்தினர் மீது வீசினார்கள். ம.பொ.சி. பேசிய போதும் கூச்சல் நின்றபாடில்லை. பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியோடு காணப்பட்டார்கள். ” வேங்கடத்தை விட மாட்டோம்” என்று ஒரு மணி நேரம் எழுச்சி உரையாற்றினார்.
அதிலே ” பந்தாடும் விஜயநகர ராசா முதல் பண்ணை ஜமீந்தார் பர்லா கிமிடி வரை – சட்ட நிபுணர் அல்லாடி முதல் சமய வேதாந்தி ராதா கிருஷ்ணன் வரை – பார்ப்பன எதிரி பொப்பிலி அரசர் முதல் பார்ப்பனப் பெரியார் பட்டாபி சீதாராமய்யா வரை எல்லோரும் ஆந்திர மகாசபையின் நிழலில் ஐக்கிய முன்னணி வகுத்து ” சென்னையோடு சித்தூரையும் சேர்த்து ஆந்திர மகாணத்தை அமைத்தே தீருவோம்” என்று போர் முரசு கொட்டுகின்றனர். இதன் எதிரொலியே தமிழரின் விழிப்பு.
இனி கேட்பாரற்ற நிலையில் ஆந்திரர்கள் தமிழரை கேவலப்படுத்த – தமிழரின் நிலத்தைப் பறிக்க தமிழரசுக் கழகத்தார் விட்டு வைக்கப் போவதில்லை ” என்று ஆவேசமாக முழங்கினார். இந்தப் பேச்சை அன்றைக்கு இந்து, தினமணி போன்ற ஏடுகள் பரபரப்பாக வெளியிட்டன.
அதையடுத்து ஆந்திர மாகாண காங்கிரஸ் கட்சித் தலைவர் என்.ஜி.ரங்கா அவர்கள் சென்னையில் மாநாடு நடத்தி அதிலே , “கிராமணியாரே, தமிழருக்கு திருப்பதி கிடைக்காது. தமிழரிடமிருந்து சென்னையைப் பறிப்போம்” ஏன்று திமிர்த்தனமாக பேசினார். அந்த மாநாட்டின் ஊர்வலத்திலே ” மதராஸ் மனதே” என்றதோடு, ” சலோ மதராஸ்” என்றும், தமிழர்களே சென்னையை விட்டு வெளியேறுங்கள் என்றும் முழக்கம் எழுப்பப்பட்டது.
ம.பொ.சி.யின் திருப்பதி மீட்பு போராட்டத்திற்கு எந்த கட்சியும் அப்போது ஆதரவளிக்க முன்வரவில்லை. மாறாக கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.
ம.பொ.சி.யின் தொடர் போராட்டத்தால், திருத்தணியை மட்டும் மீட்க முடிந்தது. தமிழர்களின் வழிபாட்டுத் தலமான
காளகத்தி, திருப்பதியை தமிழகம் இழக்க நேர்ந்தது.
தமிழர்களின் இழந்த தாயகப் பகுதிகளை மீட்டெடுக்க திருப்பதிக்கே சென்று போராடிய வீரத்தமிழ் மறவர்களை இந்நாளில் போற்றி வணங்குவோம்!
-கதிர் நிலவன் தமிழ்த்தேசியன்
Tamilthesiyan.wordpress.com