தமிழீழ விடுதலைப் புலிகளின் “கூட்டியக்கம்”!

(அதைத்தான் “தமிழர் இன ஓர்மை” (வேண்டும்) என்கிறோம்..!!)

ஆசிரியர்கள் என்று எவரையும் குறிப்பிட முடியாதபடிக்கு தமக்கான விடுதலைப்பாதையை தாமே கற்று தேர்ந்திருக்கிறார்கள் புலிகள்…!!
ஒரு துவக்கை கழட்டி பூட்டுவது தொடங்கி , சென்றி இருப்பது , ரெக்கி பார்ப்பது , சங்கேதக்குறியீடுகள் , வாக்கி டாக்கி ஊடாடல் சாதனங்கள் , கனேன்கள் , ஆர்டிலரிகள் , க்ரைனைட்கள் , பிகேக்கள் , மரப்பூண் பதித்த ஏகேக்கள் , பக்கெட் மிதிவெடி , ரங்கன் இளவழுதி மிதிவெடிகள் , பசிலான் ஏவுகணை என ஆயுத ரீதியிலும்…,

சார்ள்சு அன்ரனி சிறப்பு படையணி , இம்ரான் பாண்டியன் கவச வாகன எதிர்ப்பு படையணி , மாலதி படையணி , உந்துருளிப்படையணி , கேணல்.கிட்டு பீரங்கிப்படையணி , அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் படையணி என படைத்துறை ரீதியாகவும்….,

ஆணையிறவு தளமீட்பு ,ஓயாத அலைகள், முறியடிப்புச்சமர்கள் , ஆனந்த புரம் பெட்டிச்சமர் , நந்திக்கடல் மெளனம் என போரியல் ரீதியிலும்…

சாதி ஒழிப்பு , பெண் விடுதலை , வர்க்கவிடுதலை, இராசதந்திரம் என அரசியல் தளத்திலும்..,
.
நிதித்துறை , நீதித்துறை , பாெருண்மியத்துறை , வழங்கல் துறை , சூழல் தன்னாட்சி ஆணையம் ,கடற்றாெழில் துறை , கமத்துறை (வேளாண்மை) , தமிழீழ காவல்துறை என “இணை அரசு” என்கிற ரீதியிலும்…,

புலிகள் தம்மை வளர்த்து கொண்டதன் பின்னான ஒரே ரகசியம்…
அவர்களின் பண்பாடு…!!

தொடர்ச்சியான மேம்படுத்தலும் , தவறுகளை தொடக்கத்திலேயே களைவதும் , எந்தப் பொருளிலும் அதன் அதியுச்ச பயன்பாட்டை பெறத்துடித்த அவர்களின் உழைப்பும் தான் புலிப்பண்பாட்டின் ஆணிவேர்.

தனிப்பட்ட சிந்தனையாேடு கூடிய போராளிகளின் “கூட்டியக்கம்” தான் புலிகளின் வெற்றிக்கு அடிப்படை…!!

இந்த கூட்டியக்கம் தான் சயனைட்டை கடிக்க வைத்தது…!
இந்த கூட்டியக்கம் தான் கரும்புலியாய் வெடிக்க வைத்தது…!

தனித்த சிந்தனையற்று கைதட்ட மட்டுமே உருவாக்கப்படுகிற “மாட்டு மந்தைகள்” ஒரு போதும் விடுதலைத்தீயின் சுடரை கூட நெருங்க முடியா…!!

புலிகளிடமிருந்து பாடம் படியுங்கள்…!!

கற்றுத்தர இயலா ஆற்றாமையாேடு தான் நந்திக்கடல் எந்நேரமும் அசைந்து தளும்புகிறது…!!

அமர்ந்து அது சொல்லுவதைக் கேளுங்கள்…!!

  • தினேசுகுமார் அசோகன், 05-09-2019
    ………..சேலம் செயசீலன் 23 சூன் 2020

ஆகையினால், தமிழர் தேசியர்களே.!
புலிகளிடமிருந்து பாடம் படியுங்கள்.!!

இந்த திராவிடம் , இந்த இந்தியம் இவற்றை மறு ஆய்வு செய்யுங்கள்!
இனி, ‘தமிழ்நாட்டு விடுதலைக்கு’க் குறைந்து பேசுவதையும் வைப்பதையும்
அரைகுறையாக போலித்தனமாகப் பேசுகிறவன் பின்னாடி போறதையும் விட்டொழியுங்கள்!
முன்னாடி காட்டிக் கொடுத்த கண்ட கண்ட நாய்கள், இரண்டகர்கள், போலித் தலைவர்கள் பின்னாடி போறதையும் விட்டொழியுங்கள்!
ஒப்புக்கு ஊரை ஏமாற்றப் பேசுகிறவர்கள், ஏரணப்படி என்றும் வாதத் திறமை கொண்டும் மணலைக் கயிறாகத் திரிப்பவர்கள் பின்னாடி போறதையும் விட்டொழியுங்கள்!

கி.பி.1311-ஆம் ஆண்டில் மாலிக்கபூர் தமிழ் மண்ணின் மீது படையெடுத்து வந்த காலத்திலிருந்து, தொடர்ச்சியாக உருது முகமதியர், தெலுங்கர், மராட்டியர், ஐரோப்பியர், தில்லி இந்தியர் (வர்ண நெறியாளர்) ஆகியோருடைய மேலாளுமையின் கீழ் தமிழ் மண் அடிமைப்பட்டுக் கிடக்கிறது; தமிழ்மொழியும் தமிழர் இனமும் பல்வேறு நிலைகளில் உரிமை இழந்தும் உருக்குலைந்தும் / உருக்குழைந்தும் கிடக்கிறது.
தமிழர் இனமோ ஆயிரம் சாதிகளாய், பல சமயங்களாய், பல கட்சிகளாய்ப் பிளவு படுத்தப்பட்டு இன ஓர்மையற்று கிடக்கிறது. இன ஓர்மையற்ற நிலை தொடர்ந்து நீடிப்பதால்தான் நம் அடிமைநிலையும் தொடர்ந்து நீடிக்கிறது.

எதிரிகளால் ஏற்படுத்தப்பட்ட ஆயிரம் உள் உடைவுகளைப் புறக்கணித்து விட்டு ஒன்று சேரும் வழிமுறைகளை ஊன்றிப் பாருங்கள்.

இனக் கட்டுமானம் இல்லாமல் – இன ஓர்மை ஏற்படுத்தப் படாமல், இனத்திற்கான அரசியல் உரிமை என்பது முயற்கொம்பே..!

எனவே, நம்மை சரி பாருங்கள்!
நாம ஒரு பத்துத் தமிழன் ஒன்று சேர்வது எப்படி? என்று உட்கார்ந்து எண்ணிப் பாருங்கள்!

என்னதான் பண்ணுவீர்களோ, பத்துக் கை ஒன்று சேர வேண்டும்; பத்துக் கை சேர்ந்து ஒரே குத்தாகக் குத்த வேண்டும் இந்தியத்தை-திராவிடத்தை!
அப்படியொரு கருத்துக்கு வாருங்கள்.

ஒற்றுமை இல்லாமல் நமக்கு வலிமை இல்லை!

வலிமை இல்லாமல் நமக்குப் போராட்டம் இல்லை!!

போராட்டம் இல்லாமல் நமக்கு விடுதலை இல்லை!!!

  • அருள்நிலா.

களங்கமற்றவர்கள்! – இன்று கரும்புலிகள் நாள்

முதல் படத்தில் இருப்பது இரா.பொ.இரவிச்சந்திரன். ‘ஏழுவர் விடுதலை’ என்று பேசுகின்றோமே, அந்த எழுவரில் ஒரு முக்கிய நபர். ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 29 ஆண்டுகளாக இன்றும் (மதுரை) சிறையில் உள்ளார்.

இந்த இரா.பொ. இரவிச்சந்திரனும், முதல் தற்கொலை போராளியான கரும்புலி கேப்டன் மில்லரும் ஒரே பயிற்சி பாசறையில்- ஒரே முகாமில், சில வேளைகளில் ஒரே குடிலில் ஒன்றாக இருந்தவர்கள். இரண்டு மூன்று பெரிய தாக்குதல்களில் பங்கேற்ற படையணிகளில் ஒன்றாக நின்றவர்கள்.

அந்த கேப்டன் மில்லர்தான் கரும்புலியாக மாறினார். -ஜுலை 5 1987-ல் வடமராச்சி இராணுவ முகாமில் கொஞ்சம், அல்ல உச்ச திமிருடன் இருந்த சிங்கள இராணவத்தை- முகாமை வெடிகுண்டுகள் நிறைந்த லாரியுடன் சென்று மோதி சிதறடித்தார். மிதப்பிலேயே இருந்த சிங்கள இராணுவத்திக்கு புலிகள் தந்த அதிர்ச்சி அன்பளிப்பு அது. வரலாற்றில் முதல் தற்கொலை போராளியாக நின்றார் கேப்டன் மில்லர்.

இரா.பொ.இரவிச்சந்திரன், தமிகத்திற்கு வந்து வேறு ஒரு பணியில் இருந்தபோதுதான் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சரியான படிப்பாளி. நல்ல துணிவும் நேர்மையும் கொண்டவர். அன்றும் சரி, இன்றும் சரி, “ஆமாம். நான் புலிகள் இயக்கத்தில்தான் இருந்தேன். இயக்கம் எனக்கு உத்தரவிட்டிருந்தால் இந்த கொலையை செய்யத் தவறியிருக்க மாட்டேன்” என நெஞ்சுரத்தோடு சொன்னது மட்டுமல்ல,..

”ஆனால் இது புலிகள் செய்த கொலையல்ல. வேறு சதி நடந்து இருக்கின்றது, ராஜிவ்கொலை வெடிகுண்டு- ஒரு இந்திய தயாரிப்பாகக்கூட இருக்கலாம். சிவராசன் சொன்னதின் அர்த்தமும் அப்படித்தான் இருந்தது” என்று துணிச்சலாக சொன்னவர். இவர் கொடுத்த தகவலின் பேரில் விசாரணை சென்றிருந்தால் ‘ஏழுபேரும் சிறையில்’ இருந்திருக்க மாட்டார்கள். அப்படி நடக்காதது அரச சதி.

வேடிக்கை என்னவென்றால் ராஜிவ் கொலை வழக்கிற்கும், இரா. பொ. இரவிச்சந்திரனுக்கும் துளியும் தொடர்பில்லை. கொலைச்சதியும் தெரியாது. (இவர்களுக்காக தொடக்கத்தில் முன்நின்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமி இன்றும் சொல்வார்).

உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகளில் இரண்டு பேர் இவரை விடுவிக்கலாம் என்றே தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்கள். ஒரு நீதிபதிதான் சிறை தண்டனை என்றார்.

ஆயுதங்களை பதுக்கினார் என்பதுதான் இரவிச்சந்திரன் மீதான வழக்கு. தவிர குற்றவாளி சிலருக்கு அடைக்களம் தந்தார் என்பதும் சேர்ந்தது. இதற்கு இந்திய தண்டனைச் சட்டத்தில் அதிகம் போனால் முன்றாண்டுகளோ அல்லது ஐந்தாண்டுகளோ தான் சிறைவாசம் இருந்திருக்கும்.

ஆனால் ஆயுள்தண்டனைக் கைதியாக 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றார், இன்று வரை! ,இவரை பரவலாகத் தெரியுமா என்றால் இல்லை.

தமிழகத்தைச் சேர்ந்த அருப்புக்கோட்டைதான் சொந்த ஊர். வசதியான குடும்பம். 1998-க்கு பிறகு பல வழக்குகளுக்காக சொத்தும் கரைந்து போனது. வழக்கிற்கென்று யாரிடமும் நிதி கேட்டதில்லை. அப்பா நடந்து ஓய்ந்து இறந்துவிட்டார். அவரைப் பெறாத தாயாண இராஜேஸ்வரி அம்மாள் இன்றும் ஓயாமல் சிறைச்சாலைக்கு நடந்து கொண்டிருக்கின்றார்.

“நாட்டில் (ஈழம்) இருந்திருந்தால் மண்ணுக்காக விதையாகி இருப்பேன். வீட்டில் இருந்திருந்தால் பெற்றோர்களுக்காவது உதவியாகி இருப்பேன். இரண்டும் கெண்டானாக சிறையில் இருக்கின்றேனே என்பது தான், ‘எதற்குமில்ல வாழ்வாய்’ என்னைக் கொல்கிறது” என்ற ரவிச்சந்திரனின் குரல் இன்னும் காதில் ஒலித்தபடியே உள்ளது.

புலிகள் எப்போதும் களங்கமற்றவர்கள்.

பா.ஏகலைவன்,
மூத்த பத்திரிகையாளர்.

https://bit.ly/2NZamQ2

கிரேட் எஸ்கேப்

1996ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம்தேதியை இலங்கைப்படையின் உயர் அலுவலர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாள் அது.

அன்று தலைநகர் கொழும்பில் இருந்து விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டர் ஒன்று மணலாறு (வெளிஓயா) நோக்கிப் புறப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் இலங்கையைப் பொறுத்தவரை மிக முக்கியமான புள்ளி ராஜாக்கள்.

ஆம். அந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அனுருத்த ரத் வத்தை, ராணுவத் தளபதி ரோகன் தலுவத்தே, மேஜர் ஜெனரல் அசோகா ஜெய வர்த்தனே, காவல்துறை ஐ.ஜி. டபிள்யூ பி. ராஜகுரு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பிரேமரத்ன சுமதிபால உள்பட 11 பேர் இருந்தனர்.

சனிக்கிழமை காலை எட்டரை மணியளவில் இந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. ஹெலிகாப்டரை சாகர கொட்டேகடேனியா என்பவர் ஓட்டிச் சென்றார். கூட துணை வலவராக பெரேரா என்பவர்.

இதன் பின்னர் சற்றுநேரம் கழித்து கொழும்பில் இருந்து பெல் 412 ஹெலிகாப்டர் ஒன்று மணலாறுக்குப் புறப்பட்டது. அதில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திஸரா, விமானப்படை ஏர்வைஸ் மார்ஷல் ஆன்சலம் பெய்ரிஸ் போன்றவர்கள் இருந்தார்கள்.

இரண்டாவதாகப் புறப்பட்ட பெல் 412, காலை 10 மணியளவில் மணலாறு போய்ச் சேர்ந்தது. ஆனால் முதலில் புறப்பட்ட பெல் 212 அங்கு இன்னும் வந்து சேரவில்லை.

மணி 10.55! அமெரிக்க பெல் 212 ஹெலிகாப்டர்களில் உள்ள எரிபொருள் மூலம் இரண்டரை மணிநேரம் மட்டுமே பறக்க முடியும். பெல் 212 புறப்பட்டுச் சென்று 2 மணி நேரம் ஆகிவிட்டது. இதனால் பதற்றம் உருவாகத் தொடங்கியது.

உடனே அநுராதபுரம், வவுனியா விமானப்படைத் தளங்களுக்குத் தகவல் பறந்தது. வவுனியா விமானதளம், ஒரு பெல் 212 ஹெலிகாப்டர் குறைந்த எரிபொருளுடன் பறந்தபடி தங்களுக்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறியது.

வவுனியா பகுதியில் இருந்து மணலாறு பகுதிக்கு 10 நிமிடத்தில் பறந்து வந்து விடலாம். ஆனால் 212 ஏன் வரவில்லை?

இப்போது பெல் 212ல் என்ன நடந்தது என்று பார்க்கலாம். அதன் விமானியான ஸ்குவாட்ரான் லீடர்(!) சாகர கொட்டேகடேனியா வவுனியாவைக் கடந்ததும் வடகிழக்கு நோக்கி பறப்பதற்குப் பதிலாக வடமேற்கு(!) நோக்கிப் பறந்திருக்கிறார். இதனால் நடு வழியில் பாதை தவறி ஹெலிகாப்டர் தடுமாறத் தொடங்கியது.

180 டிகிரியில் ஹெலிகாப்டரைத் திருப்பி பறக்கவிட்டபோது பூநகரி(!) தென்பட்டது. கூப்பிடு தொலைவில் மன்னார் கடல் வேறு கண்ணில் படத் தொடங்கியது.

இதற்குள் 2 மணி 20 நிமிடம் ஆகிவிட்டது. இன்னும் 10 நிமிடம்தான் ஹெலிகாப்டர் பறக்க முடியும். இல்லாவிட்டால் எரிபொருள் தீர்ந்து விழவேண்டிய நிலை. இதனால் விமானி பதற்றத்துடன் ஹெலிகாப்டரை தமிழர் ஒருவரின் காய்கறி தோட்டம் மீது இறக்கினார். (‘சாகிற நேரத்தில கூட அடுத்தவனுக்குத் தொல்லை குடுக்காம சாக மாட்டானுங்க’ என்று கவுண்டமணி ஒரு படத்தில் வசனம் பேசுவாரே, அதைப்போல, ஆபத்து, விபத்து நேரப்போகும் நேரத்தில் கூட, தமிழர்களின் உடைமையை நாசம் செய்ய சிங்களம் தவறாது)

அந்த காய்கறி தோட்டம் அருகே தமிழர்களின் 3 வீடுகள் இருந்தன. அதில் 2 வீடுகள் காலி. ஒரு வீட்டில் கே. திருச்செல்வம் என்பவர் இருந்தார். தமிழ்தெரிந்த ராஜகுரு, திருச்செல்வத்திடம் விசாரித்தபோது, அது வவுனியா-மன்னார் சாலையில் பம்பைமடு பகுதிக்கு வடகிழக்கே உள்ள கிடச்சுரி என்ற பகுதி என்பது தெரிய வந்தது. அங்கிருந்து 6 கி.மீ. கிழக்கே தவசியான்குளம். தாண்டிகுளம் தாண்டி வவுனியா நகரம் 9 மைல் தூரம். தாங்கள் முழுக்க முழுக்க புலிகளின் பகுதிக்குள் இறங்கி வந்து நிற்கிறோம் என்பது ஹெலிகாப்டரில் வந்தவர்களுக்குப் புரிந்து போனது.

ஹெலிகாப்டர் தரையிறங்கிய இடத்துக்கு ஏறத்தாழ 10 கி.மீ. தொலைவில் பம்பைமடு பகுதியில் ராணுவத்தின் முன்னரங்க பாதுகாப்பரண் இருந்தது. திருச்செல்வத்திடம் ஒரு போத்தல் மண்ணெண்ணெய் வாங்கி அதன்மூலம் பெல் 212ஐ கிளப்ப முயற்சி நடைபெற்றது. ஹெலிகாப்டர் சிலஅடி உயரம் மட்டுமே மேலெழும்பியது. அதற்கு மேல் அதனால் பறக்க முடியவில்லை.

இதற்குள் ஹெலிகாப்டர் ஒன்று தங்கள் பகுதியில் தாழ்வாகத் தடுமாறிப் பறந்ததை புலிகள் பார்த்துவிட்டனர். அவர்கள் வாகனங்களில் ஏறி ஹெலிகாப்டர் இருந்த பகுதிக்கு விரைந்து வந்து கொண்டிருந்தனர்.

ஹெலிகாப்டரின் காக்பிட்டில் உள்ள தொலைதொடர்புக்கருவி முற்றிலும் செயலிழந்து போனதால் அதில் இருந்தவர்களால் வவுனியா நகரத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. வாக்கி டாக்கிகளும் செயல்படவில்லை.

இதனால், ஹெலிகாப்டரை கைவிட்டுவிட்டுவிட்ட அவர்கள் பம்பைமடு நோக்கி நடந்து செல்ல முடிவு செய்தனர். ஹெலிகாப்டரை இனி யாரும் இயக்க முடியாத வண்ணம் அதன் ஒயர்கள், கேபிள்களை அறுத்துப்போட்டனர். பின்னர் கைக்கடிகாரத் தில் உள்ள திசைகாட்டிக் கருவியைப் பயன்படுத்திக் கொண்டு, திருச்செல்வத்தின் இரு ஆண்குழந்தைகளை பிணைக்கைதிகள் போல தங்களுடன் கூட்டிக் கொண்டு அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள்.

ரத்வத்தை சாலைவிபத்து ஒன்றில் அண்மையில் காலில் அடிபட்டிருந்தார். ஆகவே தடி ஒன்றை ஊன்றியபடி அவர் நடந்து வந்தார். வழியில் ஏரி ஒன்றைப் பார்த்த அவர், ‘இதில் கொஞ்சநேரம் நீந்திவிட்டுப் போகலாமா?’ என்று கேட்டிருக்கிறார். (இருட்டு வழியில் பயத்தை மறைத்துக் கொள்ள சிலர் சீழ்க்கை அடிப்பதில்லையா அதைப் போல).

காட்டுக்குள் இந்த கும்பல் ஒருமணிநேரம் நடந்த போது, அவர்களுக்குப் பின்னால் மூன்று முறை அடுத்தடுத்து வெடிச்சத்தங்கள் கேட்டன. வானத்தில் புகை வளையங் கள் எழுந்தன. புலிகள் ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்து அதை வெடிவைத்து தகர்த்து விட்டார்கள் என்பது தெரிந்து விட்டது. இதனால் நடைவேகத்தை அவர்கள் விறுவிறுவென மேலும் கூட்டினார்கள்.

இப்போது ஐ.ஜி. ராஜகுரு வைத்திருந்த சிறிய காவல்துறை ரேடியோ உயிர்ப்பெற்றது. வவுனியா நகரத்தை தொடர்புகொண்ட அவர், தாங்கள் நடுக்காட்டில் வழிதெரியாமல் தவிப்பதாக செய்தி அனுப்பினார். பம்பைமடு முன்னரங்க நிலையில் இருந்து ராணு வத்தினரை உடனே உதவிக்கு அனுப்புமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து காணாமல் போனவர்களை மீட்க விமானப்படை தளபதி ஒலிவர் ரண சிங்கே, ராணுவ மேஜர் ஜெனரல் லால் வீரசூரிய ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுக்க, காட்டில் சிக்கியவர்களை மீட்க 2 ஹெலிகாப்டர்கள் விரைந்தன.

5 கி.மீ. தொலைவு வரை 2 மணிநேரம் வரை நடந்த அவர்கள், ஒருவழியாக ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஹெலிகாப்டர் ஒன்று அவர்களை வழியில் கண்டு ஏற்றி வவுனியாவுக்குக் கூட்டிச் சென்றது. மாமா அனுருத்த ரத்வத்தை காணாமல் போனதால் பதறிப்போன அதிபர் சந்திரிகா தொலைபேசி மூலம் பேசி, மாமாவின் நலத்தை விசாரித்தார். (என்ன மாமா நல்லா இருக்கீங்களா?)

இதனிடையே இலங்கை ராணுவம் அதன் வழக்கமான சவடாலை விடவில்லை. ‘காட்டுக்குள் கைவிடப்பட்ட பெல் 212 ஹெலிகாப்டரை புலிகள் தகர்க்கவில்லை, புலிகள் கையில் அது சிக்கிவிடக்கூடாது என்பதற்காக ராணுவம்தான் தகர்த்தது‘ என்று ராணுவம் அறிவித்தது.

ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது அந்தப் பகுதியில் புலிகள் யாருமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஹெலிகாப்டரை புலிகள் தகர்த்தால் என்ன? ராணுவம் தகர்த்தால் என்ன? மூன்றாம் ஈழப் போரில் இலங்கை விமானப்படை 8ஆவது வான் ஊர்தியை இழந்தது என்பது மட்டும் உண்மை.

பொதுவாக பெல் 212 ஹெலிகாப்டர்களில் ஜி.பி.எஸ். கருவி இருக்கும். ஆனால், குறிப்பிட்ட அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஜி.பி.எஸ். கருவி என்ன ஆனது என்று தெரியவில்லை. வன்னிப்பகுதியில் வழி தெரியாமல் போயிருந்தால் கூட யானை யிறவு-வவுனியா இடையே ஒடும் ஏ9 நெடுஞ்சாலையைப் பிடித்து தெற்கே பறந்துகூட வவுனியாவுக்கு வந்து சேர்ந்திருக்கலாம். ஆனால் ஹெலிகாப்டரின் வலவர் இதை ஏன் செய்யவில்லை என்பது தெரியவில்லை. மொத்தத்தில் மர்மங்கள் நிறைந்த ஒரு திரைக்கதை போல இருந்தது இந்த நிகழ்வு.

அனுருத்த ரத்வத்தை தப்பிப்பிழைத்த பரபரப்பான அந்த ஹெலிகாப்டர் நிகழ்வின் போது புலிகளின் தங்களுக்குள் நடத்திய தொலைத்தொடர்பு உரையாடல் முக்கிய மானது. ‘என்ன ஆயிற்று?’ என்று புலி ஒருவர் கேட்க, மற்றொருவர், ‘கைக்கு எட்டி யது வாய்க்கு எட்டவில்லை’ என்று பதில் அளித்தார்.

உண்மைதான். அனுருத்த ரத்வத்தை, ராணுவத் தளபதி ரோகன் தலுவத்தே, மேஜர் ஜெனரல் அசோகா ஜெயவர்த்தனே, காவல்துறை ஐ.ஜி. டபிள்யூ பி. ராஜகுரு, வன்னி மாவட்ட எம்.பி.யான பிரேமரத்ன சுமதிபால போன்றோர் புலிகளின் கையில் பிணைக்கைதிகளாக சிக்கியிருந்தால் 13 ஆண்டு ஈழப்போர் வரலாற்றில் ஒருவேளை முக்கியத் திருப்பம் ஏற்பட்டிருக்கலாம்.

மோகன ரூபன்

சீன ஊடுருவலால் இந்தியாவிற்கு ஆபத்து என அன்றே கூறிய மேதகுவே பிரபாகரன்

எங்கள் தலைவர் சிந்தித்துச் செயற்பட்ட ஒரு சில நடவடிக்கைகளை வெளிநாடுகளும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளும் தற்போது உணரத் தலைப்பட்டுள்ளன. முக்கியமாக சீனா தொடர்பான அவரின் நிலைப்பாடு வெளிநாடுகளின் கவனத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.

சீனா சிறிலங்காவுக்குள் வர்த்தகத்தை முன்நிறுத்தி பிரவேசிப்பதை தலைவர் விரும்பவில்லை. நாளடைவில் சீனாவின் நடவடிக்கையினால் இந்திய மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம். அதேவேளையில் சிறிலங்காவிலும் தமிழீழத்திலும் வாழும் மக்களுக்கும் பல பாதிப்புகள் ஏற்படலாம் என அவர் கருதினார். அதனை வெளிப்படையாக அவர் தெரிவிக்காவிட்டாலும், சீனாவின் ஊடுருவல் குறித்து தமிழீழ புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வந்ததை சீனா வெளியிட்டிருந்தது. 2004ஆம் ஆண்டிற்கும், 2005ஆம் ஆண்டிற்கும் இடையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணி அம்பாந்தோட்டைக் கடலில் இரண்டு தாக்குதல்களை நடத்தி இருந்தது.

அதன்போது, சீன அதிகாரிகளின் சொகுசுப் படகுகளே தாக்கியழிக்கப்பட்டன. அம்பாந்தோட்டையில் துறைமுகம் கட்டுவது தொடர்பாகவும், சிறிலங்காவில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தவே சீன அதிகாரிகள் அங்கு வந்திருந்தனர். இதற்கு தமிழர்களின் எதிர்ப்பபைத் தெரிவிக்குமுகமாக தலைவர் மேற்படி தாக்குதல்களை நடத்தினார் என்பதை சில வெளிநாடுகள் தற்போது உணர்ந்துள்ளன. 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளின் தளம் அழிக்கப்பட்டதின் பின்பே சீனா சிறிலங்காவுக்குள் பிரவேசித்தது என்பதை உலகமே அறியும்.

பல்லாயிரம் கோடிக்கணக்கான டொலர்களை சிறிலங்காவுக்கு கடனாகக் கொடுத்து பல அபிவிருத்தித் திட்டங்களை சீனா ஆரம்பித்துள்ளது. பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பையும் சீனா தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. சிறிலங்காவிலுள்ள குடிமக்கள் சந்ததி சந்ததியாக சீனாவுக்கு கடனாளிகளாக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால்,மிகவும் தூரநோக்கோடு தேசியத் தலைவரால் முன்னெடுக்கப்பட்ட சீன எதிர்ப்பு நடவடிக்கையை அன்று அந்த நாடுகள் கண்டுகொள்ளவில்லை.

அன்று தமிழீழமே ஒரே தீர்வு என்பது தேசியத் தலைவரின் ஒரே முடிவு.

இனப்பிரச்சினைக்கு தீர்வு அவசியம். ஆனால், அதற்காக தமிழீழத் தனிநாடு தீர்வாகாது என இந்தியாவும் மேற்கத்தேய நாடுகளும் கூக்குரலிட்டன. பேச்சுவார்த்தைமூலம் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றும் குறிப்பிட்டார்கள்

ஆனால் இன்று இந்தியா அதனை அனுபவித்து கொண்டு இருக்கிறது.

தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் சகோதரர், திரு. வேலுப்பிள்ளை மனோகரன் குமுதம் ரிப்போட்டருக்கு வழங்கிய பேட்டி!

தமிழீழ தேசியத் தலைவராகப் போற்றப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனை நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவரது அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரனை? ‘பிரபாகரனின் அண்ணனாக வாழ்வது ஒரு யாகம்!’ என்ற உறுதிப்பாட்டுடன் இத்தனை காலமும் இருந்த இடம் தெரியாமல் வாழ்ந்து வந்தவர் வேலுப்பிள்ளை மனோகரன்.

தற்போது டென்மார்க் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், அந்த நாட்டில் இருந்து செயல்படும் ‘அலைகள்’ இணையதளத்தின் 10-வது ஆண்டுவிழாவில் முதன்முதலாக மேடையேறியுள்ளார். அலைகள் இணையதளத்துக்கு நீண்டதொரு பேட்டியும் அளித்திருந்தார். வேலுப்பிள்ளை மனோகரனிடம் பேட்டி பெறும் முதல் தமிழக ஊடகமாக ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் நாம் பேட்டி காண முயன்றோம்.

டென்மார்க்கில் இருக்கும் ஊடகவியலாளர் கி.செ.துரை அவர்களின் உதவியுடன் அதில் வெற்றியும் கண்டோம். இனி நமது கேள்விகளும், அதற்கு வேலுப்பிள்ளை மனோகரன் அளித்த பதில்களும்….

கேள்வி- டென்மார்க் நாட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் குடும்பம், பிள்ளைகள் பற்றிச் சொல்ல முடியுமா?

பதில்- ‘நான் ஈழத்தில் வாழ்ந்தபோது சரக்குக் கப்பலில் மாலுமியாக (போசன்) பணி புரிந்தேன். உலகின் பல நாடுகளுக்கும் எமது கப்பல் போகும். இப்போது டென்மார்க்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறேன். தமிழகத்தில் சில காலம் வாழ்ந்தபோது கோழி வளர்ப்பில் ஈடுபட்ட அனுபவமும் உண்டு. இப்போது மனைவி மற்றும் இரு மகன்களுடன் டென்மார்க்கில் உள்ள வைலை என்ற அமைதியான நகரில் எளிமையாக வாழ்ந்து வருகிறேன்.”

கேள்வி- மருத்துவத்திற்காக மலேசியாவில் இருந்து முறையான விசா பெற்று தமிழகம் வந்த உங்கள் தாயார் பார்வதி அம்மாள், திருப்பி அனுப்பப் பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்-‘‘அலைகள்’ பத்தாண்டு விழாவிற்கு நான் தலைமை தாங்கப் போனபோதுதான், தாயார் திருப்பியனுப்பப்பட்ட செய்தி எனக்குக் கிடைத்தது. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. விழாவிற்குப் போகாமல் இருந்து விடலாமா என்று கூட நினைத்தேன். அந்த நேரம் மலேசியா அரசு, தாயாருக்கு ஒரு மாத விசா நீட்டித்து வழங்கிவிட்டது என்ற செய்தி கிடைத்ததும் ஓரளவு ஆறுதலடைந்தேன்.
விசாவை தவறுதலாக வழங்குவதும் திருப்பி அனுப்புவதும் சாதாரண நிலையில் உள்ள ஒருவருக்குப் பொருந்தலாம். ஆனால், எனது தாயாரின் நிலையை எண்ணிப் பாரு ங்கள். தமது எதிரிக்குக்கூட இந்த அவல நிலை வருவதை யாரும் விரும்ப மாட்டார்கள். இதைவிட என்ன சொல்ல..”

கேள்வி- தங்கள் தாயார் பார்வதி அம்மாள் பற்றிய தகவல்களை தமிழகத் தலைவர்கள் யாராவது உங்களிடம் பகிர்ந்து கொண்டார்களா?

பதில்- ‘இல்லை! நான் எனது தம்பியின் பெயரைப் பயன்படுத்தி வாழ்வில் எதையும் செய்தது கிடையாது. அப்படியான செயல்களை தம்பி விரும்பவும் மாட்டார். இதனால் அரசியல் தலைவர்கள் யாரையும் நான் சந்தித்ததில்லை. ஆனால், தமிழகத்தில் வாழ்ந்த காலம்தொட்டு பழ.நெடுமாறன் எங்கள் குடும்ப நண்பராகவே பழகி வந்தார். அவருடன் மட்டுமே எனக்குத் தொடர்புண்டு. எனது தாயார் விடயம் தொடர்பாக அவர் பகிரங்கமாக கருத்துரைத்து வருகிறார். எனது தாயாரைத் தங்கள் தாய்போல பராமரிக்க தமிழக மக்கள் தயங்கமாட்டார்கள். அவர்களுக்கும் எமக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. மற்றபடி என் தாயார் பற்றிய செய்திகளைப் பத்திரிகைகளில் படித்துத்தான் தெரிந்து கொண்டேன்.”

கேள்வி-ஈழத்தில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது உங்களது தந்தை, தம்பி பிரபாகரன் ஆகியோர் உங்களிடம் ஏதாவது பேசினார்களா? அந்த போர்ச் சூழல் நிலவரம் குறித்து ஏதாவது தெரிவித்தார்களா?

பதில்-‘பிரபாகரன் அவரது வேலைப்பளு காரணமாக தொலைபேசியில் அதிகமாக என்னிடம் தொடர்புகொண்டது கிடையாது. அப்படியே பேசினாலும் குடும்ப விடயங்களைப் பற்றி மட்டுமே பேசுவார். எனது தந்தை தாயகம் சென்ற பின் தந்தையார் மூலமாகத்தான் அனைவரது சுகங்களையும் நான் அறிந்து வந்தேன். ஆனால் சென்ற ஆண்டு போர் உச்சகட்டமடைந்தபோது, எனது தந்தை கடைசியாக என்னுடன் பேசினார். நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அதற்குப் பிறகு யாரும் தொடர்பு கொள்ளவில்லை.”

கேள்வி- முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது சார்லஸ் இறந்தார் என்ற செய்தியை பிரபாகரன் மற்ற தளபதிகளிடம் ‘என் மகனையும், மகளையும் நாட்டுக்காக விதைத்து விட்டேன்’ என்று கூறியதாக சிலர் எழுதினார்கள். அது பற்றி பிரபாகரன் உங்களிடம் ஏதாவது கூறினாரா? அல்லது மற்ற தளபதிகள் மூலமாகவாவது தெரிவித்தாரா?

பதில்-‘‘இப்படியொரு தகவலைக் கூறியவர்கள் எல்லோருமே இடையில் இருந்தவர்கள்தான். இது, இவர்கள் மூலம் பிரபாகரனால் சொல்லப்படக்கூடிய செய்தியா என்று நீங்கள்தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.

தனது பிள்ளைகள் தேர்வில் சித்தியடைந்த (வெற்றியடைந்த) தகவலை இதற்குமுன் ஒருமுறை என்னிடம் தெரிவித்த பிரபாகரன், அந்தத் தகவலைக் கூட இவர்களை வைத்தே சொல்லியிருப்பாரே..? சரி! பிரபாகரன் இதுபற்றிக் கூறாவிட்டாலும் என் தந்தையாவது அதை ஏதோ ஒரு வழியில் தெரிவித்திருப்பார். எனது குடும்பத்தினர் ஒருவருடைய குரலில் இருந்தும் சார்லஸ் இறந்ததாகக் கூறப்படும் இந்தத் தகவல் எனக்கு வரவில்லை. அதனால்தான் மர்மம் இருக்கிறது என்றேன்.”

கேள்வி- முள்ளிவாய்க்கால் யுத்த முடிவுக்குப் பிறகு பிரபாகரனின் உடலென்று ஓர் உடலைக் காட்டியபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? ஒரு மூத்தவர், அண்ணன் என்கிற முறையில் ஏன் அவரது உடலை முறைப்படி நீங்கள் கௌரவத்துடன் பெற்று மரியாதை செய்ய முன்வரவில்லை? இந்தக் கேள்வி அனைவருக்கும் இருக்கிறதே?

பதில்-‘‘இதற்குப் பதில் தர சிறிது முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்திய அமைதிப்படை ஈழத்தில் தங்கியிருந்த காலத்திலேயே தனது உயிர் மட்டுமல்ல, உடலும் கிடைக்கக் கூடாது என்ற உறுதியுடன் வாழ்ந்தவர் பிரபாகரன். அப்படிப்பட்டவருடைய உடல் என்று ஒன்று காண்பிக்கப்பட்டபோது நான் பலமாக யோசித்தேன்.

அது என்னுடைய தம்பியின் உடல்தான் என்பதை உறுதி செய்யக்கூடியவர் எனது தந்தைதான். அவர்தான் தம்பியுடன் கடைசி நேரம் வரை அங்கே இருந்தவர். அவரை அழைத்து வந்து அதைக் காண்பித்து உறுதி செய்ய வேண்டியதுதானே மரபு? அப்படி ஏன் செய்யவில்லை என்று எமக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் சிங்கப்பூர் மற்றும் கனடாவில் இருந்து பேசுவதாகக் கூறி என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட இருவர், அந்த உடலுக்கு உரிமை கோரும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அப்போது கே.பி. என்பவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறியிருந்தார். எனவே, ‘கே.பி கூறுவதை நம்புவதா? அல்லது நீங்கள் கூறுவதை நம்புவதா?’ என்று நான் அவர்களைக் கேட்டேன்.

மேலும், அன்றைய நிலையில் சிறீலங்கா செல்வது பாதுகாப்பு சிக்கல் கொண்ட விடயமாக இருந்தது. நாம் அங்குபோன பின் தவறான ஓர் உடலத்தைக் காண்பித்து உறுதி செய்யும்படி வற்புறுத்தினால் நாம் மறுத்து விட்டுத் திரும்ப வழியிருக்குமா? என்பதையும் சிந்தித்தேன். இதையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் நமது நிலைப் பாட்டின் நியாயத்தன்மை உங்களுக்குப் புரியும்.”

கேள்வி- உங்கள் தம்பி பிரபாகரனை நீங்கள் கடைசியாக எப்போது, எந்தச் சந்தர்ப்பத்தில் சந்தித்தீர்கள்? மீண்டும் சந்திப்போம் என்று அப்போது ஏதும் நினைத்தீர்களா? நினைக்கின்றீர்களா?

பதில்- ‘‘இந்தக் கேள்விக்கு ஜோதிடம்தான் பதிலாக வருகிறது. ‘பிரபாகரனுடைய பிற்கால வாழ்வு நேதாஜியின் வாழ்வு போல மர்மமாக இருக்கும்’ என்று கூறியிருந்த ஜோதிடர் ஒருவர், ‘எனது ராசிக்கும் பிரபாகரனின் ராசிக்குமிடையே உள்ள நிலை காரணமாக இருவரும் சந்திப்பது சாத்தியமில்லை’ என்றும் கூறியிருந்தார்.

பிரபாகரனை ஈழத்தில் உள்ள ஒரு வீட்டில் கடைசியாக 1979-ம் ஆண்டு தற்செயலாக அங்கு சென்றபோது சந்தித்தேன். அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். பேசவில்லை. அவர் வந்ததும் நான் அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.

பின்னர் சென்னைக்கு நானும் எனது தந்தையும் ஒருமுறை சென்றபோது, தம்பி அங்கு நிற்பதாகவும் (இருப்பதாகவும்) பார்க்கப் போகும்படியும் எனது தந்தை கூறினார். சேலத்தில் இருக்கும் எனது மனைவி இரண்டொரு நாளில் வந்தபின் அவருடன் சேர்ந்து சென்று தம்பி யைப் பார்ப்பதாகக் கூறினேன். பின்னர் ஒருமுறை (1987-ல்) தம்பியை இருவரும் பார்க்கச் சென்றோம். ஆனால், அவர் யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதிக்குப் புறப்பட்டுப் போய் விட்டார்.”

கேள்வி- பிரபாகரனின் இடம், இப்போது வெற்றிடமாக இருக்கிறதே. அடுத்த தலைவர் இவர்தான் என்று வேறு யாரையும் அவர் அடையாளம் காட்டாமல் விட்டிருப்பது பெரும் குழப்பமாக அல்லவா இருக்கிறது?

பதில்- ‘‘இல்லை. விடுதலைப் போராட்டத்திற்கென ஒரு நியதி இருக்கிறது. இவருக்குப் பின் இவர்தான் என்று யாரையும் அதில் நியமிப்பதில்லை. ஒரு போராளியின் இடம் வெற்றிடமானால், அவரது இடத்துக்கு இன்னொரு போராளி வருவார். எல்லா போராளிகளுடைய வெற்றிடங்களையும் காலமும், செயற்பாடும் நிரப்பிச் சென்றுள்ளன. ஒவ் வொரு வெற்றிடமும் காலத்தால் சரியாகவே நிரப்பப்பட்டுள்ளன. இதில் குழப்பமடைய வேண்டிய தேவையில்லை.

மேலும் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை புலம்பெயர் தமிழ்மக்களின் கையில் கொடுப்பதாக தம்பி தெரிவித்துள்ளார். அங்கும் அவர் மக்களையே அடையாளம் காட்டியிருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.”

கேள்வி-‘தலைவர் இறக்கவில்லை, பாதுகாப்பாக இருக்கின்றார்’ என்று முதலில் கூறிய கே.பி., பிறகு, ‘அவர் வீர மரணம் அடைந்து விட்டார்’ என்று கூறினார். ‘இப்படியொரு இரண்டுங் கெட்டான் பதிலை பிரபாகரன் தன் வாழ்வில் என்றுமே கூறியது கிடையாது’ என்று நீங்கள் இணையத்திற்குத் தெரிவித்திருந்தீர்கள். அப்படியென்றால்…?

பதில்- ‘உறைந்த மௌனத்தால் தம்பி ஏதோ ஒரு செய்தியை உலகிற்குச் சொல்லியுள்ளார் என்பதுதான் பதில். மௌனத்தைப் போல சிறந்த, சரியான பதில், வார்த்தைகளில் இருப்பதில்லை. ஏனென்றால், பிரபாகரன் எந்தவொரு கேள்விக்கும் இரண்டு பதில்களை என்றுமே கொடுத்தது கிடையாது. இப்போது அவர் மௌனமாக ஒரு பதிலைக் கொடுத்துள்ளார்.”

கேள்வி- தந்தையார் வேலுப்பிள்ளை அவர்கள் மரணமடைந்ததில் ‘இயற்கையானது’ என சிங்கள அரசு சொன்னது. ஆனால் நீங்கள் ‘மர்மம் இருப்பதாக’ கூறியுள்ளீர்கள். அதற்கான காரணங்கள்….?

பதில்- ‘‘தந்தையார் இறந்த செய்தியை எமக்கு அறிவிக்காமலே அவரது உடலை அடக்கம் செய்திருந்தால் இப்போது அவரையும் நாம் தேடிக் கொண்டுதானிருப்போம். அவர் எங்கே இருக்கிறார் என்பதை அறிய நாங்கள் எடுத்த முயற்சிகள் எதுவுமே பயனளிக்கவில்லை. என் தந்தை இறப்பதற்கு முன் அவரை சந்தித்தவரென யாருமில்லை. அவரை எங்கு வைத்திருந்தார்கள் என்பது பல மாதங்களாகத் தெரியவில்லை.

ஆனால், அவர் இறந்தது மட்டும் தெரிந்தது என்றால், இடைப்பட்ட காலத்தில் என்ன நடந் தது என்ற கேள்வி இயல்பாகவே வரும். எனது தந்தை கொண்டு செல்லப்பட்ட பின் அவருடைய குரலில் இருந்து ஒரு வார்த்தைகூட எமக்குக் கிடைக்காத நிலையில், அந்த மரணத்தை மர்மமற்ற இயற்கை மரணமென வர்ணிப்பதை ஏற்க முடியுமா? நீங்களே சொல்லுங்கள்.”

கேள்வி- தலைவர் பிரபாகரன், அவரது மனைவி, மக்கள் என அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லியாயிற்று. தந்தையின் மரணம்.. அலைக்கழிப்போடு தாய் ஓரிடம்…. இப்படி எல்லாமும் உங்கள் மனதை எப்படி வதைத்திருக்கிறது? என்ன மனநிலையில் இருக்கின்றீர்கள்?

பதில்- ‘‘வாழ்வில் இதைவிட சுமப்பதற்கு பெரிய சுமை என்ன இருக்கப் போகிறது? அதைத்தான் சுமந்து கொண்டு வாழ்கிறேன். அந்தச் சோகத்தை தமிழ்ப்படுத்திக் கூற என்னால் முடியவில்லை.”

கேள்வி- பிரபாகரன் பெரிய தேசியத் தலைவராக அதிகாரத்தில் இருந்தபோதுகூட, அந்த அதிகாரங்களைக் கொஞ்சமேனும் பகிர்ந்துகொள்ளாமல் இப்படி ஒதுங்கி எளிமையாக வாழ்ந்து வருகிறீர்கள். அதுபற்றி தலைவர் எப்போதாவது உங்களிடம் கேட்டதுண்டா? ஏன் இப்படி என்று வருத்தப்பட்டதுண்டா?

கேள்வி- ‘‘என்றுமே கேட்டதில்லை. மேலும் போராட்டத்தில் ஈடுபடுவது, தம்பியுடன் தொடர்புகொள்வதெல்லாம் நமது சொந்த முடிவுகளே..”

கேள்வி- ‘என் தம்பி நேதாஜியை நேசித்தார். அவரைப் போலவே தூய்மையாக வாழ்ந்தார். நேதாஜியின் பிற்பகுதி வாழ்க்கைத் தோற்றத்தைப் போலவே கடந்த ஓராண்டு காலத்தை வைத்திருக்கிறார்… அதிலும் ஒரு போராட்டம் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறீர்கள். அதன் அர்த்தம்…?

பதில்- ‘‘நேதாஜியின் போராட்டம் முடிந்ததாக இன்று வரை யாருமே கூறியதில்லை. காந்தி சுதந்திரம் பெற்றுத் தந்தாலும், அந்தப் போராட்டத்தை அருவமாக நின்று நகர்த்தியது நேதாஜியின் போராட்ட சக்திதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதுபோல பிரபாகரன் 30 ஆண்டுகளாக நடாத்திய போராட்டமும் வெறும் பயங்கரவாத முத்திரையால் முடிவு கட்டப்பட முடியாத போராட்டமாகும். தமிழினத்தின் விடிவை முப்பதாண்டு காலமாக மின்னல் வேகத்தில் நகர்த்தியவர் அவர்தான். இனி எது நடந்தாலும் அது தம்பியின் தாக்கமில்லாமல் நடக்க முடியாதளவிற்கு முத்திரை பதித்துள்ளார்.

தமிழினத்திற்கு சுதந்திரம் வேண்டும் என்ற பந்தை அவர் சுவர் மீது அடித்தார். இப்போது அந்தப் பந்து புது விசையுடன் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. பிரபாகரன் சுதந்திரத்தின் வடிவம், பிரபாகரன் மீதான தேடல் சுதந்திரத்தின் மீதான தேடலே என்பதுதான் அதன் அர்த்தம். நேதாஜியைத் தேடியவர்கள் இறுதியில் கண்டது சுதந்திரம் என்பதுபோல, இந்தத் தேடலும் விடிவினைத் தரும். அப்போது நேதாஜி போல பிரபாகரனும் சுதந்திர சூரியனாக அரசியல் வானில் பிரகாசிப்பார். இந்தியா சுதந்திரம் பெற்றது போல தமிழினமும் ஒருநாள் சுதந்திரம் பெறும்.”

கேள்வி- பிரபாகரனது பிற்பகுதி வாழ்க்கை மர்மம் நிறைந்ததாக இருக்கும். யாரும் அவரைக் காண இயலாது. அவர் எங்கே இருக்கின்றார் என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருக்கும் என்று தமிழக ஜோதிடர் ஒருவர் ஆரம்பகாலத்தில் கூறினார். அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதையும் இப்போது எண்ணிப் பார்க்கிறேன்’ என அலைகளுக்குத் தெரிவித்துள்ளீர்கள். அதுபற்றி விளக்கமாக பதில் தர இயலுமா?

‘‘‘நானும் தம்பியும் ஒருவரையொருவர் சந்திக்க முடியாது’ என்று கூறிய ஜோதிடர்தான் ‘பிரபாகரனை பிற்காலத்தில் யாருமே காண முடியாது’ என்றும் தெரிவித்திருந்தார். ‘அவரை எல்லோரும் தேடுவார்கள் ஆனால் காண முடியாது’ என்றும் தெரிவித்திருந்தார். இது எப்போதோ பார்த்த ஜோதிடம், இப்போது நினைத்தால் பொருந்தி வருகிறது. ஜோதிடம் என்பது அவரவர் நம்பிக்கை சார்ந்தது.”

கேள்வி- தமிழகத்தில் உள்ள ஈழ விடுதலை ஆதரவு இயக்கத் தலைவர்கள் பற்றி உங்களுடைய கருத்து? அவர்களில் யார் யார் உங்களுடன் பேசுவார்கள்? தமிழகத்தில் உள்ள இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது….?

‘‘நான் ஆரம்பத்திலேயே சொல்லியது போல அரசியல் தலைவர்களுடன் நான் தொடர்பு கொள்வதில்லை. பழ. நெடுமாறன் ஒருவருடன் மட்டுமே எனக்குத் தொடர்பி ருக்கிறது. ஆகவே, என்னிடம் தலைவர்கள் பற்றிய யாதொரு கருத்தும் கிடையாது. தமிழகத்தில் உள்ள இளைஞர்களை பிரபாகரன் நேசித்ததும், தமிழக இளைஞர்கள் தங்கள் உடன்பிறந்த சகோதரனாக பிரபாகரனை நேசித்ததும் வரலாற்றில் மறக்கக்கூடிய நிகழ்வுகளா? தமிழக இளைஞர்களுக்கு எங்கள் அன்பையும், நன்றியையும் குமுதம் ரிப்போர்ட் டர் மூலமாகச் சொல்வதில் மகிழ்ச்சியடை கிறேன்.’

மூத்த பத்திரிக்கையாளர்
— பா. ஏகலைவன்
நன்றி: குமுதம்

https://bit.ly/2Cio0v3

மாமன்னன் சிவாஜியைப் போலவே தமிழீழ விடுதலைப் புலிகள்?

டதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவரான கோவிந்த் பன்சாரே எழுதிய இந்த புத்தகத்தை முன்னாள் நீதியரசர் மேன்மையாளர் ஹரிபரந்தாமன் அவர்கள் அனுப்பியிருந்தார்.

இதை எழுதி வெளியிட்டதற்காக வேண்டியே 78 வயதான தோழர் கேவிந்த் பன்சாரே படுகொலை செய்யப்பட்டார்.

காரணம்,‘மாமன்ன சிவாஜி ஓர் இந்து வெறியர்- பற்றாளர்-பிராமணர்களைக் காத்தார், இந்து சாம்ராஜ்யத்தைக் கட்டியமைத்தவர் என்று RSS-இந்துத்துவா தலைமைகள் ஏற்படுத்தி வைத்திருக்கும் கட்டுக்கதைகளை எல்லாம் இந்த புத்தகம் ஆதாரங்களோடு மறுத்து உண்மையை அம்பலப்படுத்தியிருப்பதுதான்.

மராட்டிய சிவாஜியின் ஆட்சியில் இந்து-முஸ்லீம்கள் ஒற்றுமை மேலோங்கியுள்ளது. பிராமணர்களுகாகவோ, இந்துக்களுக்காகவோ அவர் இருக்கவில்லை.

இன்னும் சொல்லப்பானால்

மாமன்னன் சிவாஜியின் மெய்க்காவலர்களில் ‘மாதரி மெஹர்’ என்ற இஸ்லாமியரும் ஒருவர். ஆக்ரா கோட்டை சிறையில் இருந்து தன் உயிரைப் பணயம் வைத்து சிவாஜியை தப்பிக்க வைத்தவரும் அவர்தான். அதனாலேயே அவரை சித்ரவதை செய்து கொன்றார்கள்.

சிவாஜியின் முக்கியத்துவம் வாய்ந்த பிரதான பீரங்கிப்படையின் தளபதியே இப்ராஹிம் கான் என்ற இஸ்லாமியர்தான்.

முக்கியத்துவம் வாய்ந்த கடல்படை ஆயுதப்பிரிவின் தளபதியே தாரியா சரங் தௌலத்கான் என்ற இஸ்லாமியர்தான்.

சலேரிப் போருக்கு பின் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பேரரசர் ஔரங்கசீப் ஒரு பிராமணரை அனுப்பினார். மாமன்னர் சிவாஜியோ அவரது பிரதம மந்திரி காஸி ஹைதரை அனுப்பினார். முஸ்லீம்களுக்கு அப்படியொரு முக்கியத்துவம்.

1678-ல் போலவாடி கோட்டை முற்றுகை நடக்கின்றது. அந்த கோட்டையின் தலைமை பொறுப்பு தளபதி சாவித்திரி தேசாய் என்ற பெண்.

சிவாஜியின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான சுகுஜி கெயிக்வாட் கோட்டையின் முற்றுகையை உடைக்க 27 நாட்கள் கடும் போரை நடத்தினார். இறுதியில் வெற்றி. அந்த வெற்றித் திமிறில் கோட்டையின் பொறுப்பாளரான தளபதி சாவித்திரி தேசாயை பாலியல் வல்லுறவு செய்கிறார்.

தகவல் அறிந்த சிவாஜி, தனது படையணியின் மிக முக்கிய தளபதி என்றும் பாராமல் சுகுஜி கெயிக்வாட்டின் கண்களை குருடாக்கி ஆயுள் முழுதும் சிறையில் அடைத்தார்.

போரின் போதும், அதற்கு பின்பாகவும் தனது ராணுவ வீரர்கள் பெண்களைத் தொடவேக்கூடாது, ராணுவ முகாம்களுக்கு பெண்களை அழைத்து வரக்கூடாது என உத்தரவு போட்டிருந்தார்.

விவசாய நிலங்களை-விவசாய பொருட்களை கொள்ளைடிக்கவோ நாசப்படுத்தவோக் கூடாது. ராணுவத்தின் தேவைகளுக்கு வேண்டிய விவசாய பொருட்களை பணம் கொடுத்தே வாங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டது. அதிகாரிகள் அதை மேற்பார்வையிட்டனர்.

விவசாயக்குடி மக்களே போர்வீரர்களாகவும் மாற்றப்பட்டார்கள். அதனால் அவர்களிடம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்கள் இல்லாமல், ‘அனைவரையும் தம்மில் ஒருவராக பார்க்கும் போக்கு’ மாறியிருந்தது.

வரிவசூலித்துக்கொண்டு தனி ராஜங்கம் நடத்திய- பெண்களை மனம்போல் சூரையாடிக் கொண்டிருந்த நிலச்சுவான்தார்-பண்ணையார் முறையை ஒழித்தார். அரசு அதிகாரிகளே குறைந்த வரிகளை வசூலிக்க ஏற்பாடு செய்தார்.

நிலச்சுவான்தாரிகளின் அரண்மனை, கோட்டை கொத்தலங்கள் எல்லாம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அவர்களை சாதாரண குடியானவர்களைப் போல வாழ உத்தரவிட்டார். அதை கண்காணிக்கவும் செய்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சாதாரண மக்கள் புரிந்துகொள்ள கடினமாக இருந்த அரசு நிர்வாக மொழி பெர்ஸியை, தாய்மொழியான மராத்தி மொழியில் மாற்றிக்கொண்டார்.

நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துவிட்டுப்போன அந்த மாவீரன் சிவாஜியின் அரச-படை நடைமுறைகள் எல்லாம், இந்த நூற்றாண்டில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், தலைவர் பிரபாகரன் அவர்களையும் நினைவு படுத்தியது.

https://bit.ly/3gMq0vg

பி பி சி க்குத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் 1993 பெப்ருவரியில் அளித்த பேட்டி

கேள்வி:
முஸ்லிம் மக்கள் பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:
முஸ்லிம் மக்கள் தனித்த பண்பாடுடைய ஓர் இனக்குழு என்றவகையில் அவர்களது பிரச்சினை அணுகப்பட வேண்டும். முஸ்லிம் மக்களின் தனித்துவம், நில உரிமைப்பாடு பேணப்படும். அதேவேளை அவர்கள் தமிழ்மக்களோடு ஒன்றிணைந்து வாழ்வதே அவர்களது சமூக, அரசியல், பொருளாதார வாழ்வைச் சிறப்பிக்கும் என நாம் கருதுகிறோம். சிங்களப் பேரினவாதிகளும் சுயநலம் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே வேற்றுமையையும் விரோதத்தையும் வளர்த்துவிட முயலுகிறார்கள். இந்தச் சூழ்ச்சிக்கு முஸ்லிம் மக்கள் பலிக்கடா ஆகக்கூடாது.

கேள்வி:
யாழ்ப்பாணத்திலிருந்து ஏன் முஸ்லிம் மக்களை வெளியேற்றினீர்கள்?அவர்களும் யாழ்ப்பாண மக்கள்தானே?
பதில்:
1990 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இனக்கலவரம் வெடித்து பெரும் தொகையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டபொழுது யாழ்ப்பாணத்திலும் கலவரம் பரவும் ஆபத்து எழுந்தது. அந்த வேளையில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நாம் அவர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறும்படி கேட்டுக்கொண்டோம். ஆயினும் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியமர அனுமதிப்போம்.

வடபகுதி முஸ்லிம்கள்

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் முஸ்லிம் காடையர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழக்கும் செய்திகள் வடபகுதியில் பரவப்பரவ அங்கு பதட்டநிலை உருவாகத் தொடங்கியது.

வடபகுதியில் உள்ள தமிழர்களின் உடன்பிறந்தவர்களும், உறவினர்களும் கிழக்கில் பாதிப்பிற்குள்ளாகும்போது அதற்கு எதிர் நடவடிக்கைகள் தோன்றுவது இயற்கையே. வடபகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர்கள் கிழர்ந்தெழக்கூடிய அபாயம் உருவானது. ஆனால் விடுதலைப்புலிகள் தலையிட்டு கலவரங்கள் ஏற்படுவதை தடுத்தனர்.

கிழக்கு மாகாணத்தில் 5000 க்கு மேற்பட்ட தமிழர்கள் வயது வேறுபாடின்றி முஸ்லிம் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டிருந்தபோதும்கூட வடபகுதியில் ஒரு முஸ்லிமிற்குக்கூட எத்தகைய அபாயமும் ஏற்படவில்லை. இதற்கு காரணம் விடுதலைப் புலிகளே.

வடபகுதியில் மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் இவர்களுள் யாரும் இதுவரை தமிழர்களால் கொல்லப்பட்டதாகவோ, தாக்கப்பட்டதாகவோ எந்த முஸ்லிம்கூட குற்றம்சாட்டியதில்லை.

நிலைமையை புலிகள் இயக்கம் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் தமிழர்களிடையே பதட்டம் தணியவில்லை.அதேவேளையில் முஸ்லிம்களிடையே துரோகிகள் முளைத்தனர். வடபகுதியில் புலிகளின் முகாம்கள், நடமாட்டங்கள் குறித்து சிங்கள இராணுவத்திற்கு தகவல் கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு முஸ்லிம்கள் தொடர்பு சாதனங்களுடன் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டனர்.
அவர்களை விசாரணைக்கு உட்படுத்தியபோது பல பயங்கரமான உண்மைகள் வெளிவந்தன. கிழக்கு மாகாணத்தைப்போல வடக்கிலும் தமிழர்-முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்த சதித்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதற்காக இரண்டு பாரவூர்திகளில் வெடிபொருட்களும் ஆயுதங்களும் மறைக்கப்பட்டு வைத்திருப்பது தெரியவந்தது இவையனைத்தும் தமிழர்கள் கூடும் பகுதிகளில் மறைமுகமாக வெடிக்கவைப்பதற்கும் கண்மூடித்தனமாக சூட்டுத்தாக்குதலை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனாலும் இதனை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் தொடர்பான விடயமாகக் கையாள விரும்பாத இயக்கம் அவர்களை குற்றம் சுமத்த விரும்பவில்லை.

புலிகளின் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ள வடபகுதியில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டால் அதற்கான பழி புலிகள் மீது தான் சுமத்தப்படும்.

மேலும் முஸ்லிம்களிடையே துரோகிகள் ஊடுருவியிருப்பதை அவர்களாலேயே தடுக்கவும் முடியவில்லை. எனவே முஸ்லிம்களின் பாதுகாப்பு கருதியும், துரோகிகளின் ஊடுருவலைத் தடுக்கவும் வடமாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் அனைவரையும் வெளியேற்றித் தீரவேண்டிய கட்டாயத்திற்கு புலிகள் ஆளானார்கள். இதைத்தவிர வேறு வழி இருக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மார்ட்டர் பீரங்கி

ஈழப்போரின்போது புலிகள் அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யாமல், தன் கையே தனக்குதவி என்ற அடிப்படையில் புதிய நவீன ஆயுதங்களைத் தயாரித்து வந்தார்கள்.

அப்படி சொந்தமாக மார்ட்டர் பீரங்கி, ராக்கெட் லாஞ்சர், மிதிவெடி போன்ற பற்பல ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன. புலிகளுடன் ஒப்பிடும் போது இலங்கை ராணுவம் பெரிதாக எந்த ஆயுதத்தையும் உருவாக்கவில்லை. (தெரிஞ்சா செய்ய மாட்டோமா?) அனைத்துவகை ஆயுதங்களையும் வெளிநாடுகளில் இருந்தே இலங்கை அரசு காசை கொட்டி இறக்குமதி செய்து வந்தது.

புலிகளோ புதுப்புது வகை ஆயுதங்களை சொந்தமாக உருவாக்கி வந்தனர். அந்த ஆயுதங்களுக்கு, மறைந்த தங்கள் போராளிகளின் பெயர்களை அவர்கள் சூட்டி வந்தனர்.

புலிகள், தங்களது சொந்த தயாரிப்பில் உருவாக்கிய கனரக மார்ட்டர் பீரங்கிக்கு ‘பசிலன் 2000‘ என பெயர் சூட்டியிருந்தனர். லாரி போன்ற ஒரு வாகனத்தின் மீது இதை நிலைநிறுத்தி இயக்க முடியும். இடம்விட்டு இடம் எளிதாக கொண்டு செல்ல முடியும்.

மேஜர் பசிலன் (நல்லய்யா அமிர்தலிங்கம்), முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்தவர். புலிகளின் வன்னிப்பகுதி தளபதியாக இருந்தவர். இவரது தலைமையின் கீழ்தான் புலிகளின் தலைசிறந்த தளபதியான பிரிகேடியர் பால்ராஜ் ஒரு காலத்தில் போராளியாகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அமைதிப்படைக்கு எதிரான போரில் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய ராணுவத்தின் பல டாங்குகளைச் சிதறடித்தவர் பசிலன். 1987ஆம் ஆண்டு எறிகணை தாக்குதல் ஒன்றில் இவர் வீரமரணம் எய்தினார்.

இந்த மேஜர் பசிலனின் பெயரைத்தான் தங்களது நவீன மார்ட்டர் பீரங்கிக்குப் புலிகள் சூட்டியிருந்தனர். புலிகளின் மார்ட்டர் பீரங்கிக்கு பசிலன் என்ற பெயர் சரி. அது என்ன 2000?

2000 ஆண்டு அப்போது தொலைவில் இருந்தது. எனினும், இரண்டாயிரம் ஆண்டு வந்தாலும்கூட இதுபோன்ற ஒரு மார்ட்டர் பீரங்கியை உலகில் வேறு எந்த ஒரு விடுதலை இயக்கத்தாலும் தயாரிக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்ட புதிய மார்ட்டர் பீரங்கிக்கு ‘பசிலன் 2000’ என புலிகள் பெயர் சூட்டியிருந்தனர்.(பின்னர் பசிலன் 5000 எல்லாம் வந்தது தனிக்கதை)

பசிலன் மார்ட்டர் பீரங்கியில், ஆரம்பகாலத்தில் மார்ட்டர் குண்டுகளுக்குப் பதிலாக சோதனை அடிப்படையில் 25 முதல் 30 கிலோ எடையுள்ள மணல் பைகளை வைத்து சுட்டு, அந்த மார்ட்டர் பீரங்கியின் சூட்டுத்திறனை புலிகள் மெருகேற்றி இருந்தனர்.
80களில் புலிகள் பாபா மார்ட்டர்கள் பீரங்கிகளைப் பயன்படுத்தி வந்தார்கள். காலத்திகேற்ப மாற்றம் தேவை என்பதால் புலிகளின் பயன்பாட்டுக்கு வந்த கனரக மார்ட்டர்தான் பசிலன் 2000.

வாகனத்தில் இடம்விட்டு இடம் எடுத்துச் செல்லக்கூடிய மார்ட்டர் பீரங்கியான பசிலன் ஒற்றைக்குழாய் கொண்டது. வழக்கமாக மார்ட்டர் பீரங்கிக் குழாய்கள் சற்று செங்குத்தாக நிற்கும். ஆனால் பசிலன் 2000 மார்ட்டர் பீரங்கியின் குழாய் சற்றே சரிந்து நீண்டிருக்கும். காட்டுக்குள் இலைதழைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் எளிதாக ஊடுருவிச் செல்ல இந்த ஏற்பாடு.

அதுபோல பசிலன் 2000 மார்ட்டர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தும்போது அதன் குண்டுகள் தணல்பிழம்பை கக்காது. இதனால் தணலும், புகையும் வருவதைப் பார்த்து பசிலன் 2000 இருக்கும் இடத்தை இருட்டில் அல்லது காட்டில் கண்டுபிடித்து யாரும் பதில் தாக்குதல் நடத்த முடியாது. (ங்கொய்யால. யார் கிட்ட?)

புலிகளின் இந்த பசிலன் மார்ட்டர் பீரங்கியால் அதிகம் அவதிப்பட்டு வந்தது யாழ்ப்பாணம் பலாலி விமானப்படைத்தளம்தான். பலாலி விமானப்படை தளத்தில் முடங்கிக் கிடந்த ராணுவத்துக்கு பசிலன் பீரங்கி அவ்வப்போது சிறப்பான முறையில் விருந்து அளித்து வந்தது.

30 கிலோ அளவுள்ள மார்ட்டர் குண்டுகள் குறிதவறாமல் பலாலி விமானப்படைத் தளத்துக்குள் அடிக்கடி வந்து விழுந்தன. விமான ஓடுபாதை கூட புலிகளின் மார்ட்டர் பீரங்கித் தாக்குதலுக்குத் தப்பவில்லை.

புலிகளின் பசிலன் 2000 மார்ட்டர்களின் ஆரம்பக் கட்ட தாக்குதல் தொலைவு வெறும் 200 மீட்டர்தான். போகப்போக பசிலன் 81 மி.மீ. மார்ட்டர் மார்ட்டர்களின் தாக்குதல் தொலைவு 5 ஆயிரத்து 400 மீட்டராக நீளத் தொடங்கியது.

அச்சுவேலி தெற்குப்பகுதியில் இருந்து 81 மி.மீ. பசிலன் மார்ட்டர்களால் புலிகள் தாக்குதல் நடத்தியபோதெல்லாம், குண்டுகள் 4 முதல் 5 கி.மீ. தூரம் பறந்து வந்த பலாலியில் விழுந்தன. ஒருமுறை காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் பலியானார். ஒருமுறை விமானநிலைய டெர்மினல் கட்டடத்துக்கு மிக அருகில் ஒரு குண்டுவிழுந்து வெடித்தது. இன்னொருமுறை விமானப்படைக்குச் சொந்தமான சீனத்தயாரிப்பு ஒய்-8 போக்குவரத்து விமானம் மயிரிழையில் காயலான் கடைக்குப் போகாமல் தப்பியது.

ஒருமுறை விமானதளத்தின் கண்ட்ரோல் கோபுரம் அருகே புலிகளின் மார்ட்டர் குண்டுவிழுந்து வெடித்ததில் 2 ராணுவத்தினர் பலியானார்கள். 16 பேர் வரை காயமடைந்தார்கள். ஒருமுறை மற்றொரு விமானமும் நூலிழையில் தப்பிப்பிழைத்தது.

புலிகளின் சொந்தத் தயாரிப்பான பசிலன் 2000 கனரக மார்ட்டர் பீரங்கி, ஒரு சிறுரக ஆர்டிலரி பீரங்கி போலவே செயல்பட்டு வந்தது. பழையகாலத்து ஒனிட்டா டி.வி.யை ‘நமது பெருமை அண்டை வீட்டாரின் பொறாமை’ என்று விளம்பரப்படுத்துவார்களே. அதைப்போல புலிகளின் பசிலன் 2000, பிறநாட்டு விடுதலை போராளி இயக்கங்களுக்கு பெரும் பொறாமை தருவதாக இருந்தது.

சிங்கள ராணுவத்துக்கோ அது உச்சகட்ட எரிச்சலை அளித்து வந்தது. ஒரு கட்டத்தில் புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்டதுபோல சிங்கள ராணுவமும் ‘கெம்பியா’ என்ற பெயரில் ஒரு மார்ட்டர் பீரங்கியைத் தயாரித்தது. அது உண்மையில் உருவாக்கப்பட்டதா? போரில் பயன்பட்டதா? இல்லையா? என்பது புத்த பிரானுக்கே வெளிச்சம்.

புலிகளின் பசிலன் 2000 பீரங்கியை யார் மறந்தாலும் மறந்திருக்கலாம். ஆனால், பலாலி விமானப்படைத்தளம் மட்டும் மறந்திருக்கவே முடியாது. காரணம். அவ்வளவு அடி!

https://bit.ly/3dhAdhp

சீமானின் பேட்டியும் அதை திராவிடம் எதிர்கொண்ட விதமும்

சீமான் அவர்கள் விகடனுக்கு அளித்த நேர்காணலை பார்த்து வெளியே வந்த இரண்டு நபர்களிடம் “சீமான் என்ன பேசினார்?” என்று நிரூபர்கள் கேள்வி கேட்கின்றனர்.

முதல் நபரின் பதில்:

முதலில் அவர் திரைத்துறை பற்றி பல விசயங்கள் பேசுகிறா்.

பிறகு, என் மீது தேச துரோக வழக்கு போட்டாலும், போடாவிட்டாலும்,
நான் சிறைக்கே சென்றாலும்
நான் CAA சட்டத்திற்கு எதிராக எப்போதும் பேசி கொண்டு தான் இருப்பேன் என்கிறார்.

பிரதமர் குடியுரிமை சான்றை காட்டட்டும், பிறகு நாங்கள் காட்டுகிறோம் என்கிறார்..
CAA என்பது இசுலாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. ஒட்டு மொத்த குடிமகன்களுக்கும் எதிரானது.
சாமியார்கள் பலருக்கும் ஒரு சான்றும் இல்லை.. அவர்களை எல்லாம் என்ன செய்ய போகிறீர்கள் என்கிறார்..

பிறகு, “குளத்தில் நாயி, பறவைகள் கூட தண்ணீர் குடிக்குது, ஆனால் என்னை (மனிதர்களை) அந்த குளத்தில் தண்ணீர் குடிக்க கூடாதுனு சொல்ரீங்களே.. எனக்கு எப்படி இந்த தேசம் மீது பற்று வரும்” என்று அம்பேத்கர் கூறிய செய்தியை அழகாக சொல்கிறார்.

மதுவை விற்று தான் அரசை நடத்த வேண்டுமா? என்று கேள்வி கேட்கிறார். இத்தனை நாள் சிரமபட்டு கடைபிடித்த சமூக இடைவெளி இந்த மது கடை திறந்து விட்டதன் மூலமாக கேளியாகி விட்டது.

அத்யாவசிய தேவைக்கு மருந்து கடைக்கு செல்லும் போது எங்களை அடித்த காவல்துறை, தற்போது மதுக்கடையில் குடிக்க வருவோர்களுக்கு பாதுகாப்பு தருகிறது என்று கூறி, அண்ணா, காந்தி ஆகியோர்கள் மது ஒழிப்பிற்கு எதிராக பேசியதை சுட்டி காட்டுகிறார்.

மதுவிற்கு மாற்றாக, மாற்று பொருளாதாரம் பற்றி கூறுகிறார்.

பிறகு, ஆமைக்கறி விசயத்தை பற்றி கேள்வி கேக்கும் போது,
“ஆமைக்கறி நான் சாப்பிட்டேன். ஆகவே சாப்பிட்டேன் என்று கூறுகிறேன். ஆமைக்கறி என்பது அங்கு சுலபமாக கிடைக்கும்” என்று கூறி, இட்லி கறி சாப்பிட்டது, உடும்பு கறி சாப்பிட்டது என்று புலிகளின் விருந்தோம்பல் பற்றி கூறுகிறார்.

பிறகு ஓட்டுக்கு காசு கொடுப்பதை பற்றி அறிஞர் அண்ணா சொன்ன செய்தியை சுட்டிகாட்டி அந்த செயலை கடுமையாக எதிர்த்து பேசுகிறார்.

பிறகு மாநில சுயாட்சி பற்றி மிக தெளிவாக எடுத்துரைக்கிறார்.

மத்திய அரசு மட்டும் அனைத்து அதிகாரத்தை வைத்துக்கொள்ளாமல், மாநில அரசு வைத்திருக்க வேண்டிய அதிகாரங்களை தெளிவாக எடுத்துறைக்கிறார்.

மாநிலவாரியாக நிதியை பகிர்ந்தளித்து அந்தந்த மாநிலமே அதை கையாளட்டும் என்று கூறுகிறார்.

ஒவ்வொரு மாநிலமும் போட்டி போட்டு கல்வி, மருத்துவத்தில் முன்னேறட்டும் என்கிறார்.

இந்தியா என்பது ஒரு நாடே கிடையாது. இது ஓர் ஒன்றியம்.
யுனேடட் ஸ்டேட் ஆப் அமெரிக்கா என்பது போல, இது யுனெட்டேட் ஸ்டேட் ஆப் இந்தியா என்கிறார்.

தமிழ்நாடு ஒரு தேசம்
ஆந்திரா ஒரு தேசம்
கேரளா ஒரு தேசம்
கர்நாடகா ஒரு தேசம்
உபி ஒரு தேசம்
மேற்கு வங்காளம் ஒரு தேசம்
குஜராத் ஒரு தேசம்
என்று இங்கே பல நாடுகள் இங்கு உள்ளன.

அத்தனை தேசிய இனங்களையும் தனி தனியாக சுயாட்சி செய்ய விடுங்கள்.

இராணுவம், பணம் அச்சிடுதல், வெளியுறவு, போக்குவரத்து போன்ற துறைகளை மட்டும் மத்திய அரசு வைத்து கொண்டு, பிற அனைத்தையும் அந்தந்த மாநிலங்களுக்கு கொடுத்து விட்டு அதிகாரத்தை பரவலாக்குங்கள் என்று, இதுவரை எடப்பாடி, ஸ்டாலின் கூட பேசாத மாநில சுயாட்சி முறையை மிக தெளிவாக எடுத்து சொல்கிறார்.

என்று அந்த முதல் நபர் சொல்லி விட்டு நகர்கிறார்.

அடுத்து,

இரண்டாவது நபர்:

அய்யோ சாமி முடியலங்க, அவர் இட்லி கறி சாப்பிட்டாராம். எங்கேயாவது இட்லி கறிய கேள்வி பட்ருகீங்களாங்க.

என் மனைவி ஒரு நாள் கூட இட்லி கறி செஞ்சு கொடுத்ததே இல்லங்க. அப்படி ஒன்னு இல்லவே இல்லங்க. பேட்டி முழுவதும் ஒரே பொய்யா பேசுராருங்க.

அது எப்டீங்க இட்லிகுள்ள கறி இருக்கும்.

ஏதோ ஆமைக்கறி திண்டாராம்.
உடும்பு கறி திண்டாராம்.
அது எப்புடிங்க ஆமை, உடும்ப கறிலாம் திண்ண முடியும்.

நான் தயிர் சதத்தை தவிர எதையிமே திண்டது இல்லைங்க.

என்று பேசிவிட்டு அவர் இடத்தை காலி செய்தார்.

ஆகவே, கீழே சீமான் பேட்டி கொடுத்த இரண்டு காணொளிகளையும் பதிவிடுகிறேன். அதை பார்த்த பிறகு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அதில் நீங்கள் முதல் நபரா? இல்லை இரண்டாவது நபரா ? என்று.

Link 1: https://youtu.be/8ScKAEex56w
Link 2: https://youtu.be/5ay4sYDgk40

தமிழர் விடுதலையை எள்ளி நகையாடும் திராவிடம்

தலைவர் எப்படி இருப்பார்,
எப்படி சிரிப்பார்,
எப்படி கதைப்பார்,
அவரின் ரசனைகள் என்ன,
அவரின் குணம் எப்படி,
அவரின் உணவு ரசனை,
அவரின் அன்புள்ளம்,
அவரின் இலட்சிய வேட்கை,
அவரின் குழந்தை மனம் என்று இன்னும் பல உருவகங்களை தந்து தலைவர் பற்றியதான எம் போன்ற பிள்ளைகளின் உணர்வுகளுக்கு
உயிரூட்டியவன் அவன்.

அந்த மாதலைவனின் கோவத்தையும் போர்க்குணத்தையும் மட்டுமே கண்ட உலகிற்கு தலைவரின் இன்னொரு பரிணாமத்தை பறைசாற்றியவன் அவன்தானடா..

அதுவரை ஊடகங்கள் வேற்று உலகத்து மர்ம மனிதர்கள்போல் சித்தரித்து, பயமுறுத்தி, மண்விடுதலை
போராளிகள் என்பவர்கள் ஆயுதம் தரித்து, இரும்பு இதயத்தோடு, கந்தகத்தை உண்ணும் எந்திர மனிதர்கள் என்ற வெகுசன மனபிம்பத்தை மாற்றி அவர்களும் இரத்தமும், சதையும் கொண்டு அன்பும், பரிவும் , பாசமும் , நேசமும் கொண்ட உணர்வுள்ள மனிதர்கள் என்று உரைத்தவன் அவன்.. அங்கேயும் சிரிப்பு உண்டு,
அங்கேயும் விருந்து உண்டு,
அங்கேயும் ஏக்கம் உண்டு,
அங்கேயும் கனவு உண்டு,
அங்கேயும் ஒரு வாழ்க்கை உண்டு..

சிதைந்தது ஒரு கடுமையான போராட்டம் மட்டுமல்ல.. ஒரு அற்புதமான கனவும், தன்னலமற்ற வாழ்வும் சிதைந்து போனதை நம் சிந்தைக்குள் ஏற்றியவன் அவன்..

“தன் இனத்திற்கு ஒரு தேசம் வேண்டும் என்று பேசுவதை விட உயர்ந்த அரசியல் உலகில் ஏதடா என்ற ஒற்றை கேள்வியால்
ஈழம் பத்தி தமிழக அரசியல் களத்தில் பேசக்கூடாது என்ற வறட்டு வாதத்தை,
உடைத்து எறிந்தவன் அவன்…

ஈழம் எனக்கு அரசியல் அல்ல அவசியம் என அறிவித்த திருமகன் அவன்..

ஈழ விடுதலை என் தேசத்தின் விடுதலை என் இனத்தின் விடுதலை என எங்களுக்கு உணர்த்திய பெருமகன்…

எம் இனத்தை திட்டமிட்டு இனப்படுகொலை செய்து அழித்த சிங்களன் உனக்கு நண்பன் என்றால் நான் யார் என்ற கேள்வியால் இந்திய ஏகாதிபத்தியத்தின் இன துவேசத்தை வெளிச்சமிட்டவன் எம் அண்ணன் சீமான்.

எல்லோருமே ஈழ அரசியல் என்று பேச அவன் மட்டுமே ஈழம் அரசியல் அல்ல அவசியம் என்று பேசியவன்..

எல்லோருமே ஈழ விடுதலை, ஈழ தமிழர்களின் விடுதலை என பேச அவன் ஒருவன் மட்டும்தான்
நம் விடுதலை, நம் இனத்தின் விடுதலை என்று பேசியவன்..

எல்லோரு அதுவரை போராடும் விடுதலை புலிகளுக்கு ஆதரவு என்று பேசிக்கொண்டிருக்க அவன் ஒருவன்தானே போராடும் நம் அக்காள், நம் அண்ணன் என்று பேசியவன்…

எண்ணிடலாங்க தமிழக இளைஞர்கள் தங்களில் உடலில் சினிமா நடிகரின் உருவத்தை பச்சை குத்திய காலத்தை மாற்றி..
அவர்களின் பெருவாரியான தமிழக இளம் தலைமுறையினர இதயங்களில் தமிழ்த்தேசிய தலைவரை தமிழ்சொல் எனும் முள் கொண்டு பச்சை குத்தியவன் அவன்..

பிரபாகரனை தலைவர் என்று அறிவித்து செயல்படும் தமிழகத்தின் ஒரு அரசியல் கட்சியை முன்னெடுத்தவன் அவன்..

பிரபாகரனை பெரியப்பா என்று தலைமுறைகள் தாண்டி அழைக்கும் மழலையர் பாசறை என்ற பெயரில் அடுத்த சந்ததியை உருவாக்கியவன் அவன்..

தான் தீவிரவாதி என்று சட்டமன்றத்தில் குறிப்பிட்ட பிரபாகரனை எங்கள் இனத்தின் தலைவர் என்றும், தன்னை ஊழல் செய்த திருடி என்றும் விமர்சிக்க ஒரு பத்து, பனிரெண்டு வயது தாண்டாத பெண் குழந்தை தமிழக வீதிகளில் வலம்வருவாள் என்று ஜெயலலிதா தனது கனவிலும் நினைத்திருக்க மாட்டார், அந்த வரலாற்றை உருவாக்கியவன் சீமான்..

அவனுக்கு முன்பும் தமிழக அரசியல்வாதிகள் பலரும் புலிகளை ஆதரித்தோம் என்று கூறுகின்றனர்..

ஆம் அவர்கள் புலிகளை ஆதரிக்கிறார்கள் தான்.. எங்களுக்கு முன்னர் இருந்து ஆதரிக்கிறார்கள் தான்..

ஆனால்,
அவர்களுக்கு தலைவராக பெரியார் இருக்கிறார்..
அவர்களுக்கு தலைவராக அண்ணா இருக்கிறார்..
அவர்களுக்கு தலைவராக கருணாநிதி இருக்கிறார்..
அவர்களுக்கு தலைவராக ராமதாஸ் இருக்கிறார்..
அவர்களுக்கு தலைவராக வைகோ இருக்கிறார்..
அவர்களுக்கு தலைவராக திருமா இருக்கிறார்..
அவர்களுக்கு தலைவராக வேல்முருகன் இருக்கிறார்..
ஆனால்,

நாங்களோ தத்துவமாகவும் தலைவராகவும் அவர் ஒருவரைத்தான் ஏற்றிருக்கிறோம்.. அது ஒன்று தான் வித்தியாசம்!

இன்றைய நாளில் இந்த பொழுதில் இந்த மண்ணில் அந்த மகோன்னத தலைவனின் பிறந்தநாளை மாபெரும் விழாவாக கொண்டாடும் உலகிலேயே ஓரே ஒரு அரசியல் கட்சி உண்டென்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே!

அவனை நம்பி நிற்கும் தம்பிகள் நாங்கள்!
அவனை விட அவன் கற்பித்த தலைவனை, தத்துவத்தை அதிகம் நம்புகிறோம்!!

எல்லாம் சரி.. சிலவற்றை தவிர்க்கலாமே என்று நீங்கள் கேட்பது என் காதிலும் விழுகிறது. எனது தூரத்திலிருந்து நான் கேள்விபட்ட வரையில்

எதிரிகள் விமர்சிக்கிறார்கள் என்பதற்கா எந்த உண்மையையும் மறைக்க அவர் விரும்பவில்லை. மாறாக அதையே அழுத்தமாக பதிவு செய்யவே நினைக்கிறார்.

உங்களைப் போல் தவிர்க்கலாம் , கடக்கலாம் , என்ற எண்ணங்கள் அவருக்கு எழாமலோ, அவரிடம் சொல்லப்படாமலோ இருக்கப்போவதில்லை. எல்லாவற்றையும் யோசித்த பிறகே அவர் தொடர்ந்து அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறார்.

வெறும் வாயை மெள்பவர்களுக்கு அவர் அவல் வீசுவதாக தோன்றலாம். அவை தூண்டில் மீன்களுக்கான பொறியாகவே நான் கருதுகிறேன்.

தன்னுடைய எந்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு அனைவரையும் சென்று சேர வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போதெல்லாம் தன் கையில் உள்ள அவலை வீசி எறிகிறார்.

ஒரு சீரான இடைவெளியில் எதிரிகள் மெள்ளுவதற்கு இதை பயன்படுத்தலாம். ஆனால் அவைதான் கொண்டு சேர்ப்பதற்கான வைரல் குரல்களாக திகழ்கின்றன.

தலைமுறை மீன்கள் தமிழ்தேசிய தொட்டிலுக்கு வர வேண்டுமென்றால் அத்தகைய அவல்கள் அவசியமே!

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றாலும் எதிர்த்தாலும் தன் கையில் உள்ள அவலை அவர் பயன்படுத்ததான் செய்வார்!

பதிவாளர்:தமிழ வேள்