இந்த பூமிப்பந்தின் அசைக்க முடியாத சக்தியாக,ஒரு அரசுக்கு நிகரான கட்டுமானங்களுடன், பலம் மிக்க அமைப்பாய் தமிழர் சேனை 40வருடங்களுக்கு மேலாக மாவீரர், போராளிகளது வியர்வையாலும், இரத்ததாலும், தியாகங்களாலும் கட்டி வளர்ந்த அமைப்பு, மூன்று ஆண்டுகளில் எப்படி அழிந்து போனது??
இதற்கு பின்னால், கண்ணுக்கு தெரியாத பெரும் சதி வலைகள் பல பின்னப் பட்டிருந்தது. முக்கியமாக இருபதற்கு மேற்பட்ட நாடுகளின் கரம், சிங்கள அரசுக்காக நீண்டிருந்தது.
இந்தச்சதி பற்றிய தெளிந்த, நேரிய பாதை எம் இளைய சந்ததிக்கு தோன்ற வேண்டும் என்பதால், எமது அழிவுக்கான காரணங்களை, எனது அனுபவத்தின் ஊடாக உங்களோடு பகிர விளைகின்றேன்.!
நாம் விட்ட தவறை சரியாக இனம் காணாதோ அல்லது கருத்தில் எடுக்காதோ போனால், மீண்டும் இது போன்ற தோல்வியை எம் அடுத்த சந்ததியும் சந்திக்க வேண்டி வரும் என்பதே உண்மை.!
இதன் ஆரம்பம் 2003இல், பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே மறுபக்கத்தில், இதே ஆண்டில் முதலாவது புலிகளின் ஆயுதக்கப்பல் எதிரியால் தாக்கி அழிக்கப் பட்டது. அதன் பின்பும் 2 கப்பல்கள் தாக்கி அழிக்க பட்டது. இதில் சிங்கள அரசின் சாதனை போல பரப்புரை செய்யப்பட்டபோதும் உண்மை அதுவல்ல.!
2002இன் பின் கனேடிய நிறுவனம் ஒன்றின் ஊடாக, புலிகளின் பாவனைக்கென்று சில சற்றலைட் அலைபேசிகள் இரகசியமாக வாங்கப்பட்டது. வாங்கிய சற்றலைட் அலைபேசிகளையே புலிகள் தமது கடல்சார் நடவடிக்கைக்கும், அதனோடு சம்பத்தப் பட்ட தேவைகளுக்கும் பயன்படுத்தினர்.
இந்தத் தொடர்பாடல் வசதி இலவுவாக இருந்தமையாலும், இதை எதிரி “ட்ரக் பண்ண, எதிரிக்கு அடி இலக்கம்” தெரியாது என்னும் துணிவில், அந்தநேரம் பரவலான பாவனையில் இருந்தது.
இதை எப்படியோ கனேடிய உளவுத்துறை மோப்பம் பிடித்து விட்டிருந்தது.(பெரும்பாலும் CIA கண்ணை காட்டி இருக்கலாம் என்பது எனது நம்பிக்கை) அலைபேசிகளை விற்ற நிறுவனத்திடமிருந்து அந்த இலக்கங்களை பெற்று, எதிரியின் உளவுத்துறையான SIS க்கு (இதன் பழைய பெயர் NIV ) 2003இல் கொடுத்து விட்டது.!
இதைத் தொடர்ந்து எதிரி எங்களை ஒசைபடாது “மொனிடர்”பண்ணிக் கொண்டிருந்தான். அதன் ஒரு அங்கமாகத் தான் “கனடாவின் துரோகத்தால்” 2003இல் முதல் கப்பலும், அதைத் தொடர்ந்து இரண்டு கப்பலும் அழிக்க பட்டது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் லண்டன் நிறுவனம் ஒன்றின் ஊடாகவும் தொலைபேசிகள் வாங்கப்பட்டது.
அவையும் MI5 மோப்பம் பிடித்து அதையும் எதிரிக்கு கொடுத்திருந்தது. தொலைபேசி கொள்முதல்கள் நடக்கும் போது பொதுவாக எந்த உளவுத்துறைகளும் தடுப்பதில்லை. காரணம், பின்னர் தேவைப்படுமிடத்து அடி இலக்கம் பெற்று மொனிட்டர் பன்னுவதற்கு இலகுவாக இருக்கும் என்பதே.!
இப்படி இருக்கும் போது 2006இல் நோர்வேயில் வைத்து பேச்சு வரத்தை முறிவுண்டபின், நோர்வேயால் புலிகள் எச்சரிக்க பட்டு எமது பேச்சு வார்த்தை குழு நாடு திரும்பியது. நோவேயின் எச்சரிக்கை அமெரிக்காவின் எச்சரிக்கையே. நோர்வேயின் பின்னால் இருந்தது அமெரிக்கா என்பது ஊர் அறிந்த ரகசியம்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலின் பின் விடுதலை அமைப்புகள் குறிப்பாக தற்கொலை தாக்குதலை மேற்கொள்ளும் அமைப்புக்களை அமெரிக்கா தடை செய்தது. அதில் புலிகளையும் இணைத்துக்கொண்டது தான் வேடிக்கை.!
அதனால் எம்மைக் கண்காணிக்கவென புதிய இலாகா ஒன்று CIA வாள் உருவாக்க பட்டு, 24 மணி நேரமும் நாம் கண்காணிக்க பட்டு, எமது பலம், பலவீனம் ஆராயப்பட்டு கொண்டிருந்தது. அப்போது எம்மை அழிக்குமளவுக்கு CIA இன் கழுகு பார்வை எங்கள் மேல் விழுந்திருந்தது எமக்குத்தெரியாது .
இது இப்படியே இருக்கும் போது 2006இல் சண்டை ஆரம்பமானவுடன் சர்வதேசம் எமது பிரச்சனையிலிருந்து ஒதுங்குவதாக வெளியில் கூறியது. ஆனால்,அப்படிச் செய்யாது, சண்டை ஆரம்பமானவுடன் நாம் வெற்றியை தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் இருந்தோம்.
சமகாலத்தில் ஆயுதங்களுடன் சர்வதேசக்கடலில் தரித்து நின்ற எமது நான்கு “கார்கோ” கப்பல்களை இந்து சமுத்திரத்தில், இகுவேட்டர் கோட்டோடு வைத்து, சர்வதேச விதிமுறைகளை மீறித் தாக்கி அழித்தான் எதிரி.! அத்தோடு எமக்கான ஆயுத வளங்கள் இல்லாது போனது.!
இந்தத் தாக்குதல் அந்த நேரத்தில் பெரும் அதிர்வலைகளை புலிகளுக்கு ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. இது எதிரிக்கு சாத்தியமில்லாத ஒரு தாக்குதல் என்பதால், இந்தத் தாக்குதல் பற்றியும், சிங்கள அரசின் “வெளி தொடர்புகள்” பற்றியும் தகவல் திரட்டும் படி அண்ணையாள் பணிக்கபட்டு, தமிழர் உளவமைப்புகள் களத்தில் இறக்கிவிடப்பட்டது. சரியான உளவுத்தகவல்கள் எமக்கு கிடைக்கும் போது, எல்லாம் எம் கையை விட்டு போயிருந்தது.
புலிகளின் முன்னைய செயல்பாடுகள் அனைத்தும், இறுதி யுத்தத்தின் பின், அந்தத் துறைகளுடன் சம்பந்தப்பட்ட போராளிகளின் கைதின் மூலம், எதிரிக்கும் இந்தச் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் தெரிந்த பின், எதுவும் ரகசியம் என்று இங்கு இல்லை.! அத்தோடு இதே முறையில், அல்லது இதே பாதையில் “மீண்டும் முயற்சிக்க” முடியாது.! அப்படி யாராவது முயற்சிப்பதனால் வேறு பாதை தான் தேடவேண்டும்.!
சரி இனி வரலாற்றுக்கு திரும்புவோம்.!
இத்தோடு புலிகளின் ஆயுத வளங்கள் வலையமைப்பும் முற்றாக அழிக்கப் பட்டு விட்டது.!
எதிரிக்கு இது எப்படி சாத்தியமாச்சு? என்ற ஒரு குழப்பம் எமக்கு இருந்தது, உங்களுக்கும் இருக்கும் என்றே நம்புகின்றேன்.?
இதை தெரிந்து கொள்ள புலிகளின் ஆயுத “நெட்வொர்க்” எப்படி இயங்கியதென்று நீங்கள் அறிய வேண்டும்.!
அந்த நேரத்தில் ஆயுத வழங்களுக்காக புலிகளால், இந்தோனேசிய, தாய்லாந்து போன்ற நாடுகளே தளமாகப் பயன் படுத்தப் பட்டது. இதில் இந்தோனேசியாவில் தான் ஆயுதம் தவிர்ந்த ஏனைய பொருட்கள் களஞ்சிய படுத்த பட்டது. மற்றும் கப்பல் மாலுமிகள் தங்குவதும் அங்கு தான். ஆயுதங்கள் அங்கு வைத்து ஏற்றபடுவதில்லை. அதனால் இந்தோனேசிய அரசாங்கமும் இதை கண்டுகொள்வதில்லை.
அதனால் மருந்து பொருட்கள், இயந்திர உதிரிப்பாகங்கள் போன்ற பொருட்கள் அங்கேயும், தொலைத் தொடர்புக் கருவிகள் மலேசியாவிலும், கடற்புலிகலுக்கான வெளியிணைப்பு இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள், கதுவிகள் (radar) போன்றவை ஜப்பானிலும் வாங்கி இங்கு கொண்டுவந்து களஞ்சியப் படுத்தப் படும்.
இந்தப் பொருட்களை “கார்க்கோ” கப்பலில் ஏற்றிய பின் கப்பலை வெளியில் கொண்டு செல்வதற்கு இந்தோனேசிய கஸ்டம் அதிகாரிகலாள் கிளியரன்ஸ் கொடுக்கப்படும். அங்கிருந்து வடகொரியா சென்று ஏற்றும்.(இறுதி நேரத்தில் கொரியர்களே ஆயுதங்களை எமக்கு சப்ளை செய்தார்கள்)
ஆயுதங்களுடன் “கார்கோ கப்பல்” புறப்படும். (இதற்கான பணம் தாய்லாந்தில் வைத்து கொரியர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றபடும்) சிலவேளைகளில் சர்வதேச உளவமைப்புகளின் கெடுபிடியான நேரத்தில் கொரியர்கள் கடலில் வைத்து ஆயுதங்களை மாற்றிய சம்பவங்களும் நடந்துள்ளது. இது நிலைமைக்கு ஏற்றால் போல மாறுபடும்.
இந்த ஆயுத வழங்கல் நடைமுறையைத் தான், உலகம் முழுவதும் தனது முகவர்களை பரப்பியுள்ள CIA கண்டு பிடித்திருந்தது. (சில வேளை இந்தோனேசியா அரசாலும் சொல்ல பட்டிருக்கலாம்) அதன் பின்பு எமது கப்பல் நடமாட்டங்களை சற்றலைட் கண்காணிப்பில் கொண்டு வந்தது CIA.!
சரி இதன் பின் இந்த பொருட்கள் எப்படி ஊர் போய் சேர்ந்தது?
புலிகளின் ஆயுத வளங்கள் மூன்று பிரிவாக நடக்கும். முதலாவது பிரிவு “கார்கோ” கப்பல்களில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டு இந்து “சமுத்திரத்தில் இகுவேட்டர் கோட்டோடு” வந்து நிக்கும்.
இரண்டாவதாக பிரிவு, “கார்கோ” கப்பல்களிலிருந்து, சர்வதேசக்கடலில் வைத்து “டேங்கர் கப்பலளுக்கு” மாற்றப்படும் (ஒரு கார்க்கோ கப்பலில் வரும் பொருட்கள்,7இல் இருந்து 10 டேங்கர் கப்பல்களில் ஏற்றப்படும்) இந்த கப்பல்கள் கிழக்கு கரைகளில் இருந்து (மட்டக்களப்பு) 300கடல் மைல்களுக்கு அப்பால் தரித்து நிக்கும்.
மூன்றாவதாக கடற்புலிகளின் வினியோக படகுகள் மற்றும் பெரிய மீன் பிடி றோலர்களின் அவை ஏற்றபட்டு கரையை அடையும். இதுவே நடை முறையாக இருந்தது.!
பதிவைப்பார்க்கும் போது எதோ கடையில் போய் பொருட்கள் வாங்குவது போல, உங்களுக்கு இலவுவாக தெரியும், நிச்சயமாக அது அப்படி இருக்காது. இதற்கு பின்னால் பல நூறு போராளிகள், மக்களின் தியாகங்கள் நிறைந்துள்ளது. (கீழே “கார்கோ” மற்றும் “டேங்கர்” ரக கப்பல்களின் படங்களை பார்க்கவும்)
இதற்கு முன்னரான காலங்களில், எதிரியின் தாக்குதல்களில் புலிகளின் கப்பல்கள் சிக்கியுள்ளன. ஆனால், அவை சிறிய ரக “டேங்கர் “ரக கப்பல்களே தாக்குதல்களில் சிக்கியிருந்தது. அதாவது ஒரு மரத்தின் கிளையை வெட்டுவது போன்றது. அது வெட்டப்பட்டாலும் உடனேயே அந்த இடத்திற்கு புதிதாக இன்னொன்று வந்து விடும். அதனால் புலிகளுக்கும் பெரும் பாதிப்பை இந்தத்தாக்குதல்கள் ஏற்படுத்தவில்லை.!
இந்தத் தாக்குதல்களுக்கு முன், ஒரு பெண் அதிகாரியின் தலைமயில் நான்கு பேர் கொண்ட CIA அதிகாரிகள் ஸ்ரீலங்கா வந்தடைந்தனர். வந்த அன்றே, சிங்களக் கடற்படைத் தளபதி வசந்த கர்னகொடவை சந்தித்து, எதிரிக்கு அதுவரை தெரியாத, புலிகளின் ஆயுத வளங்களின் பின்னணி பற்றியும், நடைமுறைகள் பற்றியும் விளக்கி கூறியுள்ளார்.
அதுவரை 30வருடங்களாக சிங்கள உளவுத்துறையின் கண்ணுக்கு தெரியாது, சிங்கள உளவுத்துறையின் கண்ணில் விரலை விட்டாட்டிய புலிகளின் சாணக்கியத்திற்கு இதுவும் ஒரு உதாரணம்.! அதுவரை மர்மமாகவே இருந்த, புலிகளின் ஆயுத வழங்கல் முடிசுகள், CIA வின் புண்ணியத்தில் சிங்கள அரசுக்கு அவிழ்ந்து.! (இது தங்களின் சாதனை போல சிங்களம் இன்றுவரை பீத்துவது வெருவிடையம்.)
இதன் போது, புலிகளின் ஆயுத வழங்களின் ஆணிவேரான “கார்க்கோ கப்பல்கள்” தரித்து நிற்கும் இடத்துக்கான “சற்றலைட்” படங்களை கொடுத்து, நான்கு கப்பல்களையும் இனம் காட்டி கொடுத்திருந்தது.(இந்த படங்களின் பிரதிகள் புலிகளின் உச்ச புலனாய்வின் ஊடாக பெறப்பட்டு தலைவருக்கு கொடுக்கப்பட்டது)
அத்தோடு தமது செய்மதியில் தொடந்து கப்பல்களை கண்காணித்து வருவதையும் கூறி, அதை அழிப்பதற்கான பொறிமுறையையும் உருவாக்கி கொடுத்தது CIA. சர்வதேச கடலில் ஒரு கப்பலை தேடுவது என்பது “வைக்கோல்போரில் குண்டூசியை” தேடுவது போன்றது.
ஒரு கப்பல் புறப்படும் இடத்தில் இருந்து 24 மணி நேரமும் கண்கானித்தால் மட்டுமே, அதை இனம் காண முடியும். சர்வதேச கடலில் ஆயிரகணக்கில் கப்பல்கள் நடமாடும், அதனால் இந்த தாக்குதலுக்கு, சிங்கள அரசால் உத்தியோக பூவமாக CIA இன் உதவி கோரப்பட்டது.
அதன் படி CIA வின் சற்றலைட் உதவியுடன், எதிரியின் நான்கு சண்டை கப்பல்கள் புறப்பட்டது. (சயூரா-p 714,சமுதுரா p-621,சக்தி- L880,சுரனிமாலா-P702) இந்த தாக்குதலுக்கு வழிநடத்தி சென்றது மட்டுமல்லாது, இந்த தாக்குதலுக்கான கட்டளை அதிகாரியும், D.L.சின்னையா என்ற ஒரு தமிழன்.(இப்போதைய சிங்கள கடற்படைத் தளபதி)
இந்த இனத்துரோகியால் மூன்று கப்பல்கள் அழிக்க பட்டது. ஒன்று தப்பி சென்றது. மீண்டும் முன்று வாரங்களின் பின் CIA இன் இன்னுமொரு ஒரு வழிகாட்டலில் அந்த கப்பலும் மூழ்கடிக்கப்பட்டது. அத்தோடு கடல் ஆயுத வளங்கள் “நெட்வொர்க்” முற்று முழுதாக உடைந்து போனது.
இந்தக்கப்பல்களின், போர்க்கப்பல்களை எதிர்கொள்ளும் ஆயுதங்கள் இல்லாமையும், வேகமின்மை இல்லாமையும், எதிரியின் தாக்குதல் இலக்கிற்கு வழிவகுத்தது. இப்படி சர்வதேசத்தின் யுத்தத்தை தான் சிங்களம் முடித்து விட்டு மார் தட்டுகின்றது.!
இதில் வேடிக்கை என்னவென்றால் எம்மை அழித்தவர்களிடமே, எமக்கான நீதியை வழங்கும் படி நாம் இன்று ஜெனிவாவில் கையேந்தி நிக்கின்றோம்.! இப்போதைய எமது தலைமைகளும் சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் தான் சுழல்கின்றார்கள் என்பது கூடத்தெரியாத அரசியல் வறட்சி எமது இளையோர் மத்தியில் விதைக்கப்பட்டு, அதன் படி வழிநடத்தப்படுகின்றனர் என்பது தான் வேதனைக்குரிய விடையம்.!
என் அன்புக்கினிய இளையோரே.! எங்கள் வாழ்நாட்கள் எண்ணப்படுகின்றன. ஒரு அண்ணனாய், தம்பியாய், சகோதரனாய் உங்களிடம் கேட்கின்றேன். எம் அடுத்த சந்ததியான நீங்கள் அரசியல் தெளிவு பெறவேண்டும். எல்லோரையும் நம்பாதீர்கள்.! “நம்ப நட, நம்பி நடவாதே” இன்றைய நேரத்தில் நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.!
மனச்சுமையுடன், துரோணர்.