காவலர் அடித்ததில் அண்ணன் மரணம், புகார் அளிக்க சென்ற என்னையும் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார் ஆய்வாளர

“காவலர் அடித்ததில் அண்ணன் மரணம், புகார் அளிக்க சென்ற என்னையும் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார் ஆய்வாளர்’’ – தூத்துக்குடியில் பெண் ஆசிரியர் பரபரப்பு புகார்.

தூத்துக்குடியில் காவலர் அடித்ததில் தனது அண்ணன் மரணம் அடைந்ததாகவும், புகார் அளிக்க சென்ற என்னை ஆய்வாளர் கிருஷ்ணகுமார் காலால் வயிற்றில் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தியதாகவும், இது குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியிடம் மனு கொடுத்துள்ளதாக பெண் ஆசிரியர் ஒருவர் இன்று தூத்துக்குடி பத்திரிக்கையாளர்களிடையே அழுது கொண்டே பேட்டியளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இது குறித்து தூத்துக்குடி அண்ணா நகர் 7 ஆம் தெருவை சேர்ந்த சாந்தி என்ற பெண் ஆசிரியர் தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில்:-

‘’நான் தூத்துக்குடியில் எனது அப்பாவுடன் அண்ணாநகர் ஏழாம் தெருவில் வசித்து வருகிறேன். தனியார் பள்ளியில் ஹிந்தி, ஆங்கில ஆசிரியையாக கடந்த 10 வருடமாக பணியாற்றி வருகிறேன். எனது அண்ணன் வாசுதேவன், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தூத்துக்குடியில் கடந்த 12 வருடமாக பணியாற்றி வந்தார்.

அவருக்கும் அவர் மனைவி சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்திருந்தனர். 22 2 2020 அதிகாலை 4 மணிக்கு அவருடைய உயரதிகாரிகள் தமிழ்நாடு முதல் மந்திரி வருகையிருப்பதால் அவசரகால மின்சார பழுதை பார்ப்பதற்கு வருமாறு அழைத்தார்கள். என் அண்ணன் உடனே தன்னுடைய மோட்டார் பைக்கில் தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று விட்டார்.

காலையில் சுமார் 7.30 என் அக்காவின் மகள் பவித்ரா மற்றும் என் அண்ணன் மனைவியும் தொலைபேசி மூலம் என் அண்ணன் இறந்து விட்டதாக கூறினார்கள். நான் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அங்கு நின்ற போலீஸ் என் அண்ணன் வாகன விபத்தில் இறந்து விட்டதாக சொன்னார். என் அண்ணனின் மனைவியிடம் என் அண்ணன் வாகன விபத்தில் இறந்து விட்டதாக புகார் மனுவில் கையெழுத்து வாங்கியதாக சொன்னார்கள்.

அந்த புகார் மனுவில் யாரோ அடையாளம் தெரியாத வாகனம் என் அண்ணன் சென்ற வாகனத்தின் மீது மோதி என் அண்ணன் இறந்து விட்டதாக சொன்னார்கள். நான் அவர் இறந்த இடத்தை பார்க்க எஃப்.சி.ஐ குடோன் பக்கம் சென்றேன். அங்குள்ளவர்களிடம் விசாரித்தேன். அவர்கள் அங்கு அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்று சொன்னார்கள். என் அண்ணனை ரோந்து பணியில் முதல்-மந்திரி பாதுகாப்பில் இருந்த காவலர் அழகிய நம்பியார் அடித்து காயப்படுத்தியதாகச் சொன்னார்கள்.

முதல்-மந்திரி வருகையின் காரணமாக ஏகப்பட்ட காவலர்கள் அந்த ரோட்டில் நின்று கொண்டிருந்தார்கள். ஆகவே மோதிய வாகனம் மோதி விட்டு தப்பிக்க முடியாது. பொய்யாக புகார் மனுவை தயாரித்து என் அண்ணனின் மனைவியிடம் கையெழுத்து வாங்கி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். நான் அதிர்ச்சியடைந்து காவல்துறை அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு உள் துறை அதிகாரிகளுக்கும் நீதி வேண்டும் என்று கேட்டு புகார் மனு அளித்து அனுப்பி உள்ளேன். அந்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையத்தில் விசாரணை இருக்கிறது என்று சொல்லி காவலர் ஒருவர் என்னை தொடர்புகொண்டு அழைத்தார்.

அதற்காக காலை ஜூன் மாதம் ஒன்றாம் தேதி 11 மணி அளவில் காவல் நிலையம் சென்றேன். அப்போது விசாரணை அதிகாரியான காவல் நிலைய ஆய்வாளர் வரவில்லை அரை மணி நேரம் கழித்து வந்தார். நான் அவரிடம் என் அண்ணன் மேற்படி போலீஸ் காவலர் அடித்துதான் மரணத்தை விளைவித்திருக்கிறார்கள். பொய்யாக எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு இருக்கிறது. ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டேன்.

அதற்கு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மிகவும் கோபப்பட்டு இந்த மனுக்களை வாபஸ் வாங்கும்படி வற்புறுத்தினார். நான் முடியாது என கூறினேன். உடனே அவர் தலைமுடியை பிடித்து இழுத்து உள்ளே அறைக்குள் கொண்டுபோய் தன் கைகளினால் முதுகில் பலமுறை ஓங்கிக் குத்தினார், அடித்தார், வலியால் அழும் பொழுது அவருடைய காலால் என் வயிற்றில் பல முறை எட்டி உதைத்தார், நான் கீழே விழுந்துவிட்டேன். கெட்ட வார்த்தைகள் பேசி பலமுறை அசிங்கமாக திட்டினார் என்னை அடித்தார். அதனால் எனக்கு உடல் உடம்பு காயம் ஏற்பட்டது.

பின்னர் என்னைக் கைதுசெய்து தூத்துக்குடி முதலாம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 முன்பு என்னை இரவு 8 மணி அளவில் ஆஜர் படுத்தினார். அதுவரை என்னை காவல் நிலையத்தில் வைத்து கொடுமைப் படுத்தினார்கள் எனக்கு குடிக்க தண்ணீர் சாப்பிட சாப்பாடு கூட தரவில்லை, நான் நீதியுடன் நீதிபதியிடம் காவல் நிலையத்தில் நடந்த அத்தனை சம்பவங்களையும் கூறினேன். நீதிபதி அவர்கள் அத்தனையையும் எழுதிக்கொண்டார். என் உடம்பில் உள்ள அனைத்து காயங்களையும் கூறினேன். என் உடம்பில் உள்ள காயங்களை பார்வையிட்டார். அதனை குறித்துக் கொண்டார். அதன் பின் என்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு இருந்த டாக்டர் என் உடம்பு உள்ள அத்தனை காயங்களையும் பார்வையிட்டு குறித்துக் கொண்டார். காயங்களுக்கான சிகிச்சையும் கொடுக்கப்பட்டது.

காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா இருந்தால் நிச்சயமாக என்னை இழுத்து போனது பதிவாகி இருக்கும். ஆகையால் தயவு கூர்ந்து பெண் என்றும் பார்க்காமல் அடித்து உதைத்து அசிங்கப்படுத்தினார்கள், இதையே நான் மனுவாகவும் காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ளேன், என கூறினார்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் , இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , போலீஸ் சித்திரவதைக்கு உள்ளானதாக பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களில் பெரும்பான்மையினர்

1.நாடார் தமிழ் குடி மக்கள்

2.பள்ளர் பறையர் தமிழ்குடி மக்கள்

3.மறவர் தமிழ்குடி மக்கள்

4 பரதர் தமிழ் குடி மக்கள் ( பரதவர் பறவர் செம்படவர் மீனவர் )

5 சைவ வேளாளர்கள் இல்லத்து வேளாளர்கள் கோனார்கள் முதலியார்கள் மூப்பனார்கள் முத்தரையர்கள் ஆசாரிகள் வண்ணார்கள் மருத்துவர்கள் பண்டாரங்கள் வள்ளுவர்கள் போன்ற தமிழ் குடி மக்கள்

  1. நாயுடு நாயக்கர் ரெட்டி தெலுங்கு இன மக்கள்

தமிழ்குடி மக்கள் அதிகம் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மை சமூகமான தெலுங்கர்கள் ஆறில் இரண்டு சட்டமன்ற தொகுதி மாவட்டத்திற்கான அமைச்சர் பதவி தூத்துக்குடி மாட்டத்திற்கான மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி இவ்வளவையும் கைபற்றி கோலோச்சுகிறார்கள் !!!

ஆனால் பெரும்பான்மையில் இருக்கும் தமிழர்குடிகள் வாயில விரலை வைச்சி சூப்பிக்கிட்டு இருக்கு !!!

இதெல்லாம் என்ன கொடுமை !!!

இந்த லட்சணத்தில் பெரும்பான்மை தமிழர் குடியில் ஆண்ட பரம்பறையும் இருக்கு பேண்ட பரம்பறையும் இருக்கு !!!

கேவலம் !!!

வெட்கமில்லாமல் அதிகாரத்தை அடுத்தவன் கையில கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் தமிழ்குடியே இனிமேலாவது சிந்தித்து செயல்பட மாட்டாயா ???

ஆறுதல் சொல்ல வார்த்தையே இல்லம்மா” – உருகிய ஸ்னோலினின் தாய்

“ஒத்தப் பிள்ளையைப் பறிகொடுத்துட்டு நித்தம் அவளோட நினைவுலயே பைத்தியமாக இருக்குற என்னோட வலி, வேதனையைவிட உங்களோட வேதனை, தவிப்பு பல மடங்கு அதிகம்” என்றார்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்பினர் எனப் பல தரப்பினரும் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் ஒருவரான
17 வயது ஸ்னோலினின் தாயார் வனிதா, நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

ஜெயராஜின் வீட்டிற்குள் நுழையும்போதே கண்களில் நீர் ததும்ப நுழைந்தார்.

“நான் ஸ்னோலினோட அம்மா வனிதாம்மா… “

என தன்னை ஜெயராஜின் மனைவி செல்வராணியிடம் அறிமுகப்படுத்தினார்.

உடனே, “உங்களை எனக்குத் தெரியும்மா, துப்பாக்கிச்சூட்டுல ஒரே பெண் பிள்ளையைப் பறிகொடுத்துட்டு, இப்போ அந்தப் பாப்பா நினைவுலயே பரிதவிச்சிக்கிட்டு இருங்கீங்களேம்மா” என செல்வராணி கண்ணீருடன் சொன்னார்.

இருவரும் 13 நிமிடங்கள் கையைப் பற்றிக்கொண்டு கண்ணீருடன் கலங்கினார்கள்.

பின்னர், ஆசுவாசப்படுத்திக்கொண்டனர்.

கணவருக்கும் மகனுக்கும் நடந்த கொடூரங்களை ஒவ்வொன்றாக செல்வராணி சொல்ல, `இயேசுவே.. ஆண்டவரே..’ என காதைப் பொத்தியபடி கண்ணீடருன் கேட்டார் வனிதா.

தொடர்ந்து செல்வராணியிடம் பேசிய வனிதா,

“தூத்துக்குடியில ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100-வது நாள் போராட்டத்துல ஊர் மக்களுடன் கோஷம் எழுப்பியபடியே பதாகைகள் ஏந்தி கம்பீரமா நடந்துபோனா என் மகள்.
’காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா’ என போலீஸாருக்கு எதிராகவும் ஆலைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினா..

போலீஸாரை எதிர்த்தே அதிக கோஷங்களை எழுப்பிய காரணத்தால் குறிவைக்கப்பட்டே, வாயில் சுடப்பட்டு துடிதுடித்து இறந்துபோயிட்டா.

என் மகளாவது துப்பாக்கிக் குண்டடிபட்ட சில நிமிடங்களில் இறந்துபோயிட்டா.

அவளோட வலி, வேதனை, துடிதுடிப்பு உடனே அடங்கிப்போச்சு.

ஆனா, அப்பா மகன் ரெண்டு பேரையும் ராத்திரி முழுக்க வச்சு கொடூரமாத் தாக்கியிருக்காங்க போலீஸ்காரங்க.

ஒவ்வொரு அடியும், பூட்ஸ்கால் மிதியும் எவ்வளவு வலிகளைக் கொடுத்திருக்கும்.

நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு ஆசனவாயில லத்திக்கம்பை விட்டு குத்தித் தாக்கியதெல்லாம் கொடூரத்தின் உச்சம்.

ஒத்த பிள்ளையைப் பறிகொடுத்துட்டு நித்தம் அவளோட நினைவுலயே பைத்தியமாக இருக்குற என்னோட வலி, வேதனையைவிட உங்களோட வேதனை, தவிப்பு பல மடங்கு அதிகம்.

கட்டுன கணவரையும், பையனையும் ஒரே நேரத்துல பறிகொடுத்த உங்களுக்கு ஆறுதல் சொல்ல எங்கிட்ட வார்த்தை இல்லம்மா.

ஒரு குடும்பத்துக்கு ஆணிவேரும், பக்கவேருமா இருந்த ரெண்டு பேரின் இழப்பை ஈடுகட்ட முடியாது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையத்திடம் ஒப்படைச்சிருக்காங்க.

அதேபோல, அது சம்மந்தப்பட்ட எல்லா வழக்குகளையும் சிபிஐ-க்கு மாத்திட்டாங்க.

இதுல பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே அழைச்சு ‘என்ன நடந்துது’ன்னு விசாரணை செஞ்சிருக்காங்களே தவிர குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்கவே இல்ல.

ரெண்டு வருஷத்தைத் தாண்டியும் விசாரணை எந்த நிலையில இருக்குன்னு தெரியல..

அதேமாதிரிதான், இந்த வழக்கை அவசர அவசரமா சிபிஐ-க்கு மாற்றி, சிபிஐ கையில் எடுக்கும் வரை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டிருக்காங்க.

ஆனா, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கிட்டதுதான் மிகப்பெரிய ஆறுதல்.

ஆனா, அந்த விசாரணையிலயும் நீதிபதிக்கு சரியா போலீஸ் தரப்பு ஒத்துழைப்பு கொடுக்காததிலேயே, போலீஸ்காரங்க மேலதான் முழுத்தவறும் இருக்குறது நமக்கே தெரியவருது.

இருந்தாலும், ‘உங்களுக்கு உரிய நீதி கிடைக்கும்’னு நீதிபதி ஆறுதல் சொன்னதை டி.வி-யில பார்த்தேன்.

அதுல எனக்கும் நம்பிக்கை வந்துச்சு.

ரெண்டு பேரும் சிந்திய ரத்தத்துளிகளுக்கு நிச்சயம் நீதி கிடைச்சே தீரும். கவலைப்படாதீங்கம்மா” என்று சொன்னார்.

இறுதியில், ஸ்னோலின் எழுதிய கவிதைப் புத்தகத்தை செல்வராணியின் மகள்களிடம் கொடுத்துவிட்டு கிளம்பினார் வனிதா.

நன்றி – விகடன்

justiceforjayaraj_bennix🔥🔥🔥

சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் – மாவட்ட ஆட்சியாளராக இருந்த கடந்த மூன்று வருட காலத்தில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள்

2017-ஆம் ஆண்டு இவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக பதவியில் இருந்த போது… கந்து வட்டி கொடுமை பற்றி காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரின் பல குறை தீர்ப்பு நிகழ்விலுகளிலும் மனுக்கள் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்காதபடியால், இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் முன்பே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்டனர் ! இன்று வரை அவர்கள் இறப்புக்கும் கந்துவட்டி கொடுமைக்கும் நீதி கிடைத்தபாடு இல்லை… 😦

2018-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக மக்கள் போராடியபோது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பதினைந்து பேருக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். அந்த சமயத்தில் இவரை தூத்துக்குடிக்கு அவசர அவசரமாக மாவட்ட ஆட்சியாளராக பணிமாற்றம் செய்தார்கள். இவர் வந்தவுடன் ஒரு வாரம் தூத்துக்குடியில் இருந்து எந்தவிதமான செய்தியும் வெளியே கசிந்துவிடாமல் இருக்க, உடனடியாக இணையதள சேவை மற்றும் அலைபேசி சேவைகளை முடக்கி பல்வேறு உண்மைத்தன்மைகளை ஊடகத்திற்கும் மக்களுக்கும் தெரியவிடாமல் அமுக்கிவைக்க மிக முக்கிய காரணமாக இருந்தார். இன்று வரை அவர்களுக்கான நீதி கிடைத்தபாடு இல்லை… 😦

தற்போது 2020-ஆம் ஆண்டு இவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளராக பதவியில் இருக்கும் போது… சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறிய கடைதிறப்பு என்ற சாதாரண வழக்குக்காக காவல்நிலையத்தில் வைத்து தந்தை மகன் என்று இரண்டு அப்பாவி வியாபாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் ! இவர்களுக்கான நீதியை மட்டும் இந்த மாவட்ட ஆட்சியர் எப்படி வாங்கி கொடுப்பார் என்று நம்புவது ???

தமிழக அரசு இதுபோன்ற மாவட்ட ஆட்சியாளர்களின் பதவி காலங்களில் நடைபெறும் அதிகார அத்துமீறல்கள் பற்றிய செய்திகள் வந்தவுடன், அவர்களை வேறு ஊருக்கு மாற்றாமல் வேறு துறைக்கே மாற்றிவிட்டு ஐயா சகாயம் போன்ற திறன்மிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை மாவட்ட ஆட்சியாளர்களாக நியமிக்க உடனடி அரசாணை ஏற்படுத்த இனியாவது வழிவகை செய்ய வேண்டும் !!!

குல தெய்வங்களுக்கு புரட்சிகரமான வீர வணக்கம

நச்சு ஆலை தந்த நச்சுக்காற்றை விரட்டியடித்து, நல்ல காற்றை சுவாசிக்கத் தன்னுயிரை தந்ததால், – இவர்களும் எங்கள் குல தெய்வங்கள்தான்.

நாங்கள் நல்ல காற்றை சுவாசிக்க,
தமது மூச்சுக்காற்றை நிறுத்திகொண்ட இவர்களும் எங்கள் குலசாமிகள் தான்.

ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தெரியும், நச்சு ஆலை தடை செய்யப்பட்ட பின் தான் – கடந்த வருடங்களில் நல்ல மழை பொழிந்தது என்று.

ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தெரியும், நச்சு ஆலை தடை செய்யப்பட்ட பின் தான் – நிலத்தடி நீர் உறிஞ்சி விற்கப்படுவது நிறுத்தப்பட்டது என்று.

ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தெரியும், நச்சு ஆலை தடை செய்யப்பட்ட பின் தான் – நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்று.

ஒவ்வொரு தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கும் தெரியும்,
நச்சு ஆலை தடை செய்யப்பட்ட பின் தான் – காற்றின் மாசு குறைந்துள்ளது என்று.

அந்த நச்சு ஆலையை மூடிட, போராடி தன்னுயிரை தியாகம் செய்த
மாவீரர்களுக்கு வீர வணக்கம்,
வீரவணக்கம். வீரவணக்கம்.

நாம் தமிழர்.

தூத்துக்குடி மாவட்ட வீரத்தமிழர் முன்னணி,
தூத்துக்குடி மாவட்டம்.
நாம் தமிழர் கட்சி.

திராவிட கட்சிகள் நிகழ்த்திய தமிழின படுகொலைகள்

ராஜபக்சேவுடன் கைக்கோர்த்து ஈழப்படுகொலையை நடத்திய திமுக – காங்கிரஸ் கூட்டணியும்.

ஸ்டெர்லைட் அனில் அகர்வாலோடு கைக்கோர்த்து தூத்துக்குடி படுகொலையை நடத்திய அதிமுக – பாஜக கூட்டணியும்.

8 கோடி தமிழர்களால் வேரோடு வேரடி மண்ணாக ஒருநாள் வீழ்த்தப்படுவார்கள்..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

மே 22 ல் தூத்துக்குடியில் நடந்ததை
ஒரு கனம் நினைவுபடுத்தி பாருங்கள். குடிநீர், பால், உணவு எடுத்துக்கொண்டு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள்

குடும்பத்துடன் திருவிழாவிற்கு செல்வது போல் இந்த அரசை
நம்பி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்றார்கள்.

அந்த மக்களைத்தான் வேனில்
ஏறி நின்று எதிரிகளைச் சுடுவது போல் சொந்த மக்களை சுட்டுக்கொன்றிருக்கிறது. அந்தக் கொலைகாரர்கள் அனைவரும் கொலைக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும், நடந்தது கூட்டத்தைக் கலைப்பதற்கான துப்பாக்கிச்சூடு அல்ல என்பதை

பிரேத பரிசோதனை அறிக்கை நிரூபித்திருக்கிறது.

மக்கள் மிக அருகிலிருந்து தலையிலும், வாயிலும் கழுத்திலும் குறிபார்த்து சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். கலைந்து ஓடிய மக்கள் பின்புறத்திலிருந்து சுடப்பட்டிருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய படுபாதகர்கள் மீது விசாரணை நடத்த உயர் நீதிமன்றம்

உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், இதுவரை எந்தக் கொலைகாரர்களும்

சி.பி.ஐ யால் விசாரிக்கப்படவில்லை.

மாறாக, மக்களை ஃபோனில் அழைத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஏன் போராடினீர்கள்? எப்படி போராடினீர்கள்? என்று துருவித் துருவி விசாரித்து வருகிறது சி.பி.ஐ.

இந்த கொடூர சம்பவம் உயர்அதிகாரிகளுக்கு முன்பே தெரியும் என்பது முகிலன் அவர்கள் வெளியிட்ட சிசிடிவி படக்காட்சிகள்
மூலம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது. தூத்துக்குடி மக்கள் மீது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமல்படுத்தபட்டு வருகிறது.

நாசகார ஸ்டெர்லைட்டை, மண்ணின் மைந்தர்கள் யாரும் எங்கும் சென்று எதையும் பேசக் கூடாது, வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாறக்கூடாது, வீட்டில் கருப்பு கொடி ஏற்றக்கூடாது, துண்டறிக்கை விநியோ கிக்கக் கூடாது, போஸ்டர் ஒட்டக்கூடாது. எதைச்செய்தாலும், தீவிரவாதிகளை காண்காணிப்பது போல் கண்காணித்து போலீசார் உடனே அழைத்து எச்சரிக்கிறார்கள், பொய் வழக்கு போடுகிறார்கள்.

போராட்டத்தில் முன்னணியாக உள்ள இளைஞர்களை கைது செய்து அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் போலீசாரால் எந்த நேரமும் பின்தொடரப்பட்டு, அச்சத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு எந்த விதத்தடையும் இல்லை. இதனை ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது. வேதாந்தா என்பது பல நாடுகளின் அரசுகளையே விலை பேசுகின்ற பன்னாட்டு நிறுவனம். அரசாங்கத்தை தனது கைப்பாவையாக வைத்திருக்கும் நிறுவனம்.

அத்தகையதொரு நிறுவனத்தை தமது வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம் மூட வைத்திருக்கிறார்கள் எம் தூத்துக்குடி மக்கள். பல நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் கொலைக்கார நிறுவனத்தை மண்டியிட வைத்த இந்தப் போராட்டத்தை உலகெங்கிலும் உள்ள மக்கள் வியந்து பாராட்டுகிறார்கள்.

தங்கள் இன்னுயிரை ஈந்து தமிழகத்தையே தலை நிமிர வைத்திருக்கிறார்கள் தூத்துக்குடி தியாகிகள். அந்தத் தியாகிகளை கவுரவிக்க, ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக வெளியேற்றுவதற்கு

தூத்துக்குடி மக்களுக்கு உலகில் வாழும் அத்தனை தமிழர்களும்
துணை நிற்பார்கள் என்பதை உணர்த்த நாளை மே 22 அன்று உலகம் முழுவதும் தமிழர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளின் படங்களை வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துமாறு அனைவரையும்

மண்ணின் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை பகுதியின் மறைக்கப்பட்ட அறிவியல் ரகசியங்கள் !

1850 ம் ஆண்டைய டேவிட் ஹோவர் ஆராய்ச்சி குறிப்புகள் !

உடன்குடி , பரமன் குறிச்சி ,செட்டியாபத்து , தண்டுபத்து , அத்தியடி தட்டு , வெள்ளாளன் விளை ,செட்டிவிளை ,மானாடு, குதிரை மொழி ,வாத்தியார் குடியிருப்பு, தைக்காவூர் ,கூழையன் குண்டு , நைனா பத்து ,சீர் காட்சி , அம்மன்புரம் , பிச்சி விளை பகுதியில் வசிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து இருக்க வேண்டிய அவசியமான பதிவு !

தண்டுபத்து அருகில் உள்ள செட்டிவிளையில் இருந்து படகு போக்குவரத்து செட்டியாப் பத்துக்கும் ,தண்டுபத்துக்கும் நடந்து உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா??? ஆனால் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் உண்மையில் அப்படி ஒரு படகு போக்குவரத்து நம் பகுதி கூலையாறு என்னும் வழித்தடத்தில் நடந்து உள்ளது .

அதே போல நம் பகுதியில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மழை பெய்து நம் பகுதி மெஞ்ஞானபுரம் படுகை ,சடையநேரி குளம் ,கல்லா நேரி குளம் ,புல்லா நேரி ,தாங்கை குளம் போன்றவை நிரம்பி கருமேனி ஆற்றில் வெள்ளம் வந்து சிறுநாடார் குடியிருப்பு தாண்டி தண்ணிர் மணப்பாடு கடலில் கலக்கும் சூழ்நிலை உள்ளது . மேலும் நம் பகுதி கிழக்கில் உள்ள எல்லப்ப நாயக்கன் குளம் , குலசை தருவை குளம் போன்றவைகளும் முற்றிலும் நிரம்பி விடுகின்றன . அதே போல சாத்தான் குளம் பகுதி குளங்கள் ,புத்தன் தருவை பகுதி , திசையன்விளை பகுதி குளங்களும் நிரம்பி வழிகின்றன .ஆனாலும் நம் பகுதி நிலத்தடி நீர் மட்டம் மாறாமல் உப்பு நீராக உள்ளதே என்கிற எண்ணம் நம் எல்லாருடைய மனதிலும் தோன்றுவது உண்டு .

அதற்கான விடையை தேடி நான் அலைந்த போது தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் வகையில் தற்செயலாக நான் டேவிட் ஹோவர் என்பவரை பற்றி வாசிக்க நேர்ந்தது. யார் இந்த டேவிட் ஹோவர் அவருக்கும் நம் பகுதிக்கும் என்ன தொடர்பு, இவரை படித்தால் நம் பகுதி நிலத்தடி நீரை நாம் எப்படி மாற்றலாம் என்பதே எனது பதிவின் நோக்கம் .

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் நான் டெல்லி சென்று இருந்த போது உயர் படிப்பு ஆராய்ச்சி மாணவரான எனது நண்பர் என்னை அங்குள்ள புது டெல்லி பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்துக்கு அழைத்து சென்று இருந்தார் .எனது நண்பர் அவரது படிப்புக்காக சில நூல்களை தேடி எடுத்து வாசித்து கொண்டு இருந்தவர் ,திடிரென என்னிடம் ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்து இது உங்கள் பகுதியை பற்றிய புத்தகம் இதை படியுங்கள் என தந்தார் . 1850 கால கட்டத்தில் நம் பகுதி திருநெல்வேலி மாவட்டமாக இருந்த போது அப்போது நம் பகுதியில் நீரியல் துறை நிபுணராகவும் , இயற்கை வழி தண்ணிர் மேலாண்மை ஆராய்ச்சியாளராக இருந்த பிரிட்டிஷ் அதிகாரி டேவிட் ஹேவர் என்பவர் எழுதிய சர்வே குறிப்புகள் அது .அந்த குறிப்புகளை நான் வாசிக்க வாசிக்க டேவிட் ஹோவர் நம் பகுதியை பற்றி குறிப்பிடப்பட்ட விஷயங்கள் எனக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது .

நம் பகுதியை சர்வே செய்த டேவிட் ஹோவர் தனது குறிப்புகளில் அப்போதைய கால கட்டத்தில் இப்போது உள்ளது போல் மெஞ்ஞானபுரம் படுகை பகுதி நிரம்பி சடையநேரி நிரம்பி அதன் பின்னர் பத்தாங்கரை பகுதி நிரம்பாது .அந்த காலகட்டத்தில் மெஞ்ஞானபுரம் படுவை பகுதி முதலில் தண்ணீரால் நிரம்புமாம் அதன் பின்னர் தண்ணிர் நேராக பத்தாங்கரை பகுதிக்கு வந்து விடுமாம் ,பத்தாங்கரை நிரம்பிய பிறகு தான் இந்த தண்ணிர் மெல்ல மெல்ல சடையநேரிக்கு வருமாம் ,அதன் பின்னர் சடையநேரி குளம் நிரம்பிய பிறகு அந்த தண்ணிர் உடன்குடி அருகில் உள்ள தாங்கை குளத்துக்கு வருமாம் .

இவ்வாறு நம் பகுதி முழுக்க வெள்ளநீர் சூழ்ந்து இருக்கும் நிலையில் செட்டி விளை பகுதி மக்கள் படகு ( பரிசல் போல சிறிய படகு ) மூலம் செட்டியப் பத்து , வாத்தியார் குடியிருப்பு , தண்டுபத்து மற்றும் மானாடு பகுதிகளுக்கு சென்று வந்து உள்ளனர் .அந்த படகு பயணிக்கும் வழித்தடத்தை கூலையாறு வழி தடம் என டேவிட் ஹோவர் தன் குறிப்புகளில் குறிப்பிடுகிறார் .

இதே போல நம் பகுதியில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் உள்ள பெயர்கள் கண்டிப்பாக காரண பெயர்களாக தான் இருக்கும் ,குறிப்பாக பத்து என்று ஊர் பெயர் அமைய காரணம் உயரமான பகுதி ஆகும் .அதாவது மேட்டு பகுதியை தான் நம் முன்னோர் பத்து என அழைத்தனர் . பத்தாங்கரை என்றால் உயரமான இடத்தில் உள்ள கரை என்றும் தண்டுபத்து ,செட்டியா பத்து , போன்றவை இது போன்ற காரண பெயர்கள் அமைய காரணம் என நினைக்கிறேன்.கூலையாறு இருந்தததால் கூழையன் குண்டு என பெயர் வந்து இருக்கும் என்றும் வெள்ளாளன் விளை என்பது வெள்ளம் ஆளும் விளை என்பது ஆகும் .நம் பகுதியை இந்த வெள்ள நீர் சூழ்ந்து இருந்ததால் தான் நம் பகுதியின் பெரும்பான்மை ஊர்களுக்கு இப்படி காரண பெயர்கள் வந்து இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

டேவிட் ஹோவர் தனது குறிப்புகளில் நரிக்குளம் , இடக்குளம் ,சிறு குளம் ,மானாட்சி குளம் , அர தோட்டம் , குண்டாங்கரை போன்ற குளங்கள் இங்கு இருப்பதாக குறிப்பிடுகிறார் .நரிக்குளம் என்பது இப்போது தண்டுபத்து அய்யன் கோவிலுக்கும் அத்தியடி தட்டு பகுதிக்கு மேற்கே உள்ள குளம் , இடக்குளம் என்பது இப்போதுள்ள வட்ட விளை பகுதிக்கு மேற்கே , சிறு குளம் என்பது குதிரை மொழி தேரி அருகில் உள்ள சுந்தர புரம் தாண்டி உள்ள பகுதி .அதே போல மானாட்சி என்பது வெள்ளாளன் விளைக்கும் ,மானாடு பகுதிக்கும் இடைபட்ட இடத்தில் உள்ளது .இவை அனைத்தும் நிரம்பிய பிறகு தான் தண்ணிர் சடைய நெரி குளத்துக்கு தண்ணிர் நிரம்பும் என்று குறிப்பிடுகிறார். சில சமயங்களில் கருமேனி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு வரும் போது அந்த வெள்ளம் சடையநேரி வழியாக வந்து பத்தாங்கரை பகுதியை மூழ்கடித்து அதன் பின்னர் வெள்ளாளன் விளை வரை வெள்ளம் சூழ்ந்து விடும் என்றும் வெள்ளாளன் விளை மக்கள் சீயோன் நகருக்கு தங்கள் குடியேற்றங்களை இதனால் தான் மாற்றி அமைத்து உள்ளனர் டேவிட் ஹோவேர் தனது குறிப்புகளில் குறிப்பிடுகிறார்.

மேலும் டேவிட் ஹோவர் நம் மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை பகுதியை பற்றி குறிப்பிடும் போது இந்த பகுதி தான் நம் பகுதியின் நிலத்தடி தண்ணிரை மாற்றும் இடம் என தெளிவாக குறிபிடுகிறார் . மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை பகுதி தான் நம் உடன்குடி வட்டாரத்தின் நிலத்தடியில் நீர் வழி தடம் செல்லும் பாதை என குறிபிடுகிறார் .இந்த பகுதியில் நீர் நிறைந்து இருந்தால் தான் அது உடன்குடி வட்டார பகுதிகள் முழுக்க செல்லும் என்றும் அதன் நிலத்துக்கு கீழ் தண்ணிர் செல்லும் வழி என்றும் அதன் நீரோட்டம் மணல் பகுதியான ஆதியாக் குறிச்சி ,மாதவன் குறிச்சி , சிறுநாடர் குடியிருப்பு மற்றும் பரமன் குறிச்சி , பிச்சி விளை ,சீர் காட்சி , உடன்குடி வட்டார பகுதிகள் வரை பரவி உள்ளது என்றும் குறிப்பிடுகிறார் .மேலும் இங்குள்ள நிலத்தடி நீரோட்டம் ஒரு புனல் போல அமைப்பாக உள்ளதாகவும் அது கிழக்கு நோக்கி செல்ல செல்ல விரிந்து செல்வதாகவும் கூறுகிறார் .

ஒரு முறை மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை பகுதி தண்ணீரால் நிரம்பினால் அது 10 ஆண்டுகள் வரை நம் உடன்குடி வட்டார பகுதிக்கு நல்ல தண்ணிரை சேமித்து கொடுக்கும் எனவும் சொல்கிறார் .இந்த நிலத்தடி நீர் வழி தடத்தில் நீர் நிரம்பி இருந்தால் இயற்கையாக நம் பகுதியில் பெய்யும் மழை பொழிவு அதிகமாகும் என ஒரு மிக பெரிய உண்மையை தனது சர்வே அறிக்கையில் டேவிட் ஹோவேர் குறிப்பிடுகிறார் .இவர் சொல்வதை பார்க்கும் போது அந்த காலங்களில் நம் பகுதியில் அதிகமாக மழை பெய்யும் என நம் பெரியவர்கள் சொல்வதை ஒப்பிடு செய்து பார்த்தால் டேவிட் ஹோவேர் ஆராய்ச்சி உண்மை என்பது நமக்கு நன்கு புலப்படும் .

நம் பகுதி உவர்ப்பு நீரை நாம் மாற்ற வேண்டும் என நாமும் ,அரசும் பல கட்ட முயற்சிகள் செய்யும் இந்த நேரத்தில் இதற்கான முக்கிய தீர்வு இந்த மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை பகுதிக்கு தண்ணிர் கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என்ற டேவிட் ஹோவேர் சர்வே குறிப்பு நமக்கு உதவும் என நான் நினைக்கிறேன்.

அதே போல பத்தாங்கரை பகுதியின் மணல் அமைப்பு தண்ணிரை பஞ்சு போல் சேமித்து வைக்க கூடிய அமைப்பாக உள்ளது என்றும் நம் தாங்கை குளம் கீழ் பகுதியில் கல் பாறையாக உள்ளது என்றும் அதில் நீர் சேமிக்க முடியாது என்றும் அது குளத்தை சுற்றி 1 கிலோ மீட்டர் தூரம் அளவுக்கே தண்ணிரை மாற்றும் என்றும் குறிப்பிடுகிறார் . மேலும் மெஞ்ஞானபுரம் படுகை பகுதி நிரம்பினால் அது வீரப்ப நாடார் குடியிருப்பு ,எள்ளு விளை , காயாமொழி போன்ற இடங்களுக்கு தண்ணிரை சேமித்து கொடுக்கும் என்றும் நாசரேத் மூக்குபீறி அருகில் உள்ள ரயில் நிலையம் பக்கம் ஒரு மணல்பாங்கான குளத்தில்(தற்போது அப்படி ஒரு குளம் அங்கு இல்லை என நினைக்கிறேன் ,ஏற்கனவே ஊளை விட்டான் குளம் என்ற ஒரு குளம் அங்கு இருந்ததாக நண்பர்கள் சொல்கிறார்கள் ) நீர் நிறைந்து இருந்தால் அதன் மணல் முழுக்க தண்ணிரை உறிஞ்சி வைத்து மெஞ்ஞானபுரம் படுகை வரை நிலத்தடி நீரை சேமிக்க உதவும் எனவும் குறிப்பிடுகிறார் .

மேலும் டேவிட் ஹோவர் மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை பகுதி 6 மாத காலம் நீரால் நிரம்பி போய் இருக்கும் என்றும் மீதம் உள்ள 6 மாத காலத்தில் இந்த பகுதி விவசாயிகள் நெல் விளைவித்து அமோக விளைச்சலை பெற்று உள்ளதாகவும் குறிப்பிடுகிறார் .

இப்போது உள்ள நிலைமை !!!

இவ்வாறு பல ஆண்டுகளாக உடன்குடி வட்டார பகுதியின் நிலத்தடி நீரை சேமித்து கொடுக்கும் பத்தாங்கரை பகுதியின் நிலை இன்று முற்றிலும் மாறி விட்டது .உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் சாலையில் மருதூர் கரை தாண்டி மெஞ்ஞானபுரம் வரை நஞ்சை நெல் விளைந்த பூமி இன்று மழை பொழிவு குறைவாலும் , நீர் வரத்து இல்லாததாலும் தென்னை விவசாயமே பிரதானமாக உள்ளது . அந்த காலத்தில் செட்டிவிளை ஊரில் இருந்து மேற்கே பார்த்தால் மெஞ்ஞானபுரம் ஊர் தெளிவாக தெரியுமாம் . இந்த பகுதி 1980 ல் நம் பகுதியில் வந்த பெரும் வெள்ளத்துக்கு பிறகு நிரம்பாமல் உள்ளது .அதே போல அந்த கால கட்டத்தில் இந்த பகுதியில் தண்ணிர் பாசன பங்கிடு தொடர்பாக விவசாயிகளிடையே ஒரு மிக பெரிய பிரச்சனை நடந்ததாகவும் சொல்கிறார்கள் .

நேற்று உடன்குடியில் உள்ள பெரியவர் ஒருவரிடம் நான் பேசி கொண்டு இருந்த போது அவர் கூறிய ஒரு விடயம் என்னவெனில் நம் உடன்குடி வட்டாரத்தின் நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறியது 1994 ம் ஆண்டைய கால கட்டம் என சொன்னார் , இதை ஏன் சொல்கிறேன் என்றால் 1980ல் நிரம்பிய பத்தாங்கரை கிட்ட தட்ட 14 ஆண்டுகள் மழை பொழிவு குறைந்து வறட்சி நிலவினாலும் நம் பகுதி நிலத்தடி நீரை காத்து உள்ளது .ஆனால் அதன் பிறகும் இந்த பகுதிக்கு தண்ணிர் வராததால் தான் நம் நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறி உள்ளது .

மேலும் இப்போது சடையநேரி குளத்தில் இருந்து பத்தாங்கரை பகுதிக்கு இரு பாசன மடைகள் உள்ளது .இந்த மடைகளில் குளத்தின் தெற்கு பகுதியில் உள்ள மடை மருதூர் கரை ,சித்தவிளை வழியாகவும் , மற்றொரு மடை மாணிக்க புரம் வழியாகவும் செல்கிறது . இரு பாசன மடைகளும் மிகவும் சிறிய அளவில் உள்ளதுடன் ,பாசன மடைகளில் இருந்து தண்ணிர் செல்லும் வாய்க்கால்கள் மிகவும் குறுகலாகவும் ,அதில் முறையாக பராமரிக்க படாததால் ஓலைகள் ,செடிகள் விழுந்தும் கிடக்கிறது . இந்த பாசன மடைகள் மூலம் தண்ணிர் செல்லும் போது அது பத்தாங்கரை மேல் பகுதி விவசாயிகளின் விளை நிலங்களுக்குள் சென்று சேதம் ஏற்படுத்துகிறது.மேலும் கால்வாய் குறிப்பிட்ட சில இடங்களில் இல்லாமலும் உள்ளது . .மேலும் அரசின் வருவாய் துறை ஆவணங்கள் அடிப்படையில் சுமார் 250 ஏக்கர் மட்டுமே பாசன நிலமாக காட்ட பட்டு உள்ளது ஆனால் உண்மையில் இந்த பகுதியில் சுமார் 900 ஏக்கர் பாசன நிலம் உள்ளது .

இனி என்ன செய்யலாம் !!!

பிரிட்டிஷ் அதிகாரி டேவிட் ஹோவர் சர்வே அறிக்கையின் படியும் கால காலமாக நம் முன்னோர்கள் நமக்கு சொன்ன செவிவழி செய்திகள் அடிப்படையிலும் மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை பகுதிக்கு தண்ணிர் வந்தால் தான் நம் உடன்குடி பகுதி நிலத்தடி நீர் வளம் பெறும் என்பது உண்மை என நாம் அறிந்துள்ள நிலையில் இப்போதுள்ள நிலையில் நம் உடன்குடி வட்டார பகுதி நிலத்தடி நீரை மாற்ற உடனடியாக நாம் சில ஆக்கபூர்வமான விஷயங்களை செய்தாக வேண்டும் .

உடனடியாக மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை பகுதி பாசன விவசாயிகளை ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும் , பாசன பரப்பு சுமார் 900 ஏக்கர் இருக்கும் நிலையில் அரசு ஆவணங்களில் அது 250 ஏக்கர் என உள்ளதை மாற்ற மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு செய்து பாசன பரப்பு அதிகம் உள்ளதை முறையாக பதிவு செய்ய வேண்டும் .பத்தாங்கரை விவசாய சங்கம் மற்றும் உடன்குடி நிலத்தடி நீரை பாதுகாக்கும் அமைப்பு என இரண்டு சங்கம் அல்லது அமைப்பை உருவாக்கம் செய்ய வேண்டும் .அந்த சங்கத்துக்கு தலைவர் ,செயலர் ,உறுப்பினர்களை சேர்த்து அதனை முறையாக பதிவு செய்ய வேண்டும் . இதன் மூலம் அரசிடம் கோரிக்கை வைத்து பத்தாங்கரை மடைகளை அகலமாக்கி அதன் கால்வாயின் அகலத்தை அதிகரிக்க வேண்டும் , அதே போல கால்வாய் உடையாமல் இருக்க அதன் கரைகளை கான்கிரிட் சுவர் கொண்டு கட்ட பட வேண்டும் . மேலும் தண்ணிர் வரும் சமயம் எந்த விவசாயிக்கும் பாதிப்பு இல்லாமல் நீர் மேலாண்மை செய்வது ,பங்கிடு செய்வது தொடர்பாக விவசாயிகளுக்குள் பேசி தீர்வு காண வேண்டும் .அதே போல நீர் வழி தடம் இல்லாத இடங்களில் அந்த இடத்தின் உரிமையாளர்களிடம் பேசி அவர்களிடம் அனுமதி பெற்று தண்ணிரை குளங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் .பத்தாங்கரை விவசாய சங்கம் விவசாயிகளை ஒருங்கிணைப்பதிலும் , உடன்குடி நிலத்தடி நீர் பாதுகாப்பு அமைப்பு உடன்குடி முதல் பரமன்குறிச்சி வரை உள்ள இந்த பகுதி மக்களுக்கு நிலத்தடி நீரை காக்க விழிப்புணர்வு செய்யவும் ,இது தொடர்பாக தேவையெனில் மக்கள் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கவும் செய்ய வேண்டும் . பத்தாங்கரை பகுதியில் உள்ள நரி குளம் ,இடக் குளம் , மானாச்சி , சிறு குளம் போன்ற நீராதார பகுதிகளை முறையாக தூர் வாரி பராமரிப்பு செய்ய வேண்டும் . இந்த பத்தாங்கரை இனி உடன்குடி வட்டாரத்தின் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாகவும் , நிலத்தடி நீர் ஆதார பகுதியாகவும் ,ஆண்டு தோறும் அங்குள்ள குளங்களுக்கு தண்ணீர் வர வழிவகை செய்ய வேண்டும்.

மனிதர்களாகிய நம் எல்லாருக்கும் சின்ன சின்ன கனவுகள் இருக்கும் .கனவுகள் இல்லாத மனிதர்களே இல்லன்னு கூட சொல்லலாம் ,சில கனவுகள் வெறுமனே கனவுகளாக மட்டும் அல்லாமல் ….சிலரின் வாழ்க்கை லட்சியமாக கூட இருக்கலாம் அதே போல எனது பத்தாங்கரை கனவும் தனிப்பட்ட எனது கனவாக மட்டுமல்லாமல் நம் பகுதி இளைய தலைமுறையின் கனவாக மாறி பத்தாங்கரைக்கு தண்ணிர் கொண்டு வந்து நம் உடன்குடி வட்டார பகுதி நீராதார பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விவசாயம் வளம் பெற்று செல்வ செழிப்போடு நம் மக்கள் வாழவேண்டும் என்பதே !

எனது பத்தாங்கரை கனவுகள் மெய்ப்படும் எனும் நம்பிக்கையில் .
அன்புடன் ,
வே. குணசீலன் ,
உடன்குடி .
06/12/2019

தாமிரபரணி புஷ்கரம் எனும் வைதீக அரசியல்.

கிபி 1426 ல் எழுதப்பட்ட ஒரு நூல் ஜாதக பாரி ஜாதா. இந்த நூலில் உள்ள ஒரு கதையில் வரும் ஒரு பார்ப்பனர் பெயர் தான் புஷ்கரா.அந்த பார்ப்பனர் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாராம். சிவன் அவருக்கு ஒரு வரம் கொடுத்தாராம்.

அந்த வரத்தின்படி அவரால் தண்ணீரில் வாழவும் நீரை புனிதமாக்கவும் முடியுமாம். அந்த பார்ப்பனர் ஒவ்வொரு ஆற்றிற்கும் ஒரு ராசியை தீர்மானித்தாராம். அதன்படி 12 ஆறுகளில் 12 ராசிப்படி இருப்பாராம்.

அதன்படி ஒவ்வொரு ராசிக்கும் குரு இடம் பெயரும் போது அந்த ஆற்றில் அந்த பார்ப்பனர் இருப்பதாக ஐதீகம். அவர் இருப்பதாக நம்பப்படும் 12 ஆறுகள்-ராசிகள் பட்டியல் இதுதான்.

  1. கங்கை-மேஷம்
  2. நர்மதை-ரிஷபம்
  3. சரஸ்வதி-மிதுனம்
  4. யமுனை-கடகம்
  5. கோதாவரி-சிம்மம்
  6. கிருஷ்ணா-கன்னி
  7. காவிரி-துலாம்
  8. பீமா-விருச்சிகம்
  9. பிரம்மபுத்திரா-தனுஸ்
  10. துங்கபத்ரா-மகரம்
  11. சிந்து-கும்பம்
  12. பிராணஹிதா-மீனம்.

இப்போது கேள்வி இதுதான்.

  1. புஷ்கர் ஐயர் இல்லாத ஆறான தாமிரபரணியில் புஷ்கரா நடத்துவது ஏன்?
  2. அவர் தாமிரபரணியில் இருக்கிறார் என்றால் விருச்சிக ராசிப்படி அவர் பீமா ஆற்றில் தானே இருக்க வேண்டும்?
  3. பீமா ஆற்றில் இருந்தால் ஒரே நேரத்தில் ஒருவர் இரண்டு ஆறுகளில் எப்படி இருக்க முடியும்?
  4. தண்ணீர் ஓடும் ஆறுகளில் மட்டும் தான் இருப்பாரா? தண்ணீர் இல்லாத வைகை உள்ளிட்ட ஆறுகளில் புஷ்கர் இருப்பாரா?
  5. மனிதர்களுக்கும்-பறவைகளுக்கும்-விலங்கினங்களுக்கும் பொதுவாக இயற்கை உருவாக்கிய நதியை புஷ்கர் மட்டும் உரிமை கொண்டாடுவது நியாயமா?
  6. நம்பிக்கை என்ற பெயரில் நதியை மாசுபடுத்துவது ஏன்?
  7. இத்தனை ஆண்டுகளாக தாமிரபரணிக்கு வராத புஷ்கர் ஐயர் திடீரென வந்தது எப்படி?

அனைத்திற்கும் ஒரே விடை தான்.
ஆண்டாண்டு காலமாக கொலைகளைச் செய்து கொண்டு, கொல்லாமை பேசுவதே வைதீக அரசியல். அந்த அரசியலை நிலைநிறுத்த தமிழகச் சூழலைத் தயார்படுத்தும் அடுத்த கட்ட நகர்வே தாமிரபரணி புஷ்கரம்.

உச்ச நீதிமன்றத்தில் கங்கை மாசு குறித்து அரசு கொடுத்த அறிக்கை இது. கங்கையில் ஒரு லிட்டர் நீரில் உயிரியில் கழிவுகளின் அளவு 7.4 மில்லி கிராம். அனுமதிக்கப்பட்ட அளவு எவ்வளவு தெரியுமா?

2 மில்லி கிராம்.

மணல் எனும் மேலாடையை ஏற்கனவே இழந்து நிற்கும் தாமிரபரணி மீது,
ஆலைக் கழிவுகள்,செங்கல் சூளை ஆக்கிரமிப்புகளால் அலறி நிற்கும் தாமிரபரணி மீது அடுத்த தாக்குதல் புஷ்கர் விழாவா?

இது தாமிரபரணி நதி மீதான தாக்குதல் மட்டுமல்ல தாமிரபரணி வளர்த்த புதல்வர்கள் அனைவரின் மீதான தாக்குதலே.

தாமிரபரணியர்களின் தாகம் தீருமா?

தமிழகத்தில் டிரண்டாகி வரும் ‘பாசிசம்’ என்ற வார்த்தை

தமிழக்தில் கடந்த 3 நாட்களாகப் பாசிசம் என்ற வார்த்தை சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சியிலும், நாளேடுகளிலும் பரபரப்பான பேச்சுபொருளாக மாறி இருக்கிறது.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு கடந்த இரு நாட்களுக்கு முன் விமானத்தில் சென்றார். அவர் சென்ற விமானத்தில் பயணத்தில் சக பயணியும் தூத்துக்குடியைச் சேர்ந்தவரும், கனடாவில் டாக்டர் படிப்பு படித்து வருபவருமான லூயிஸ் சோபியா என்ற இளம் பெண் தமிழிசையை நோக்கி பாஜக ஒழிக, பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்டார்.

அதன்பின் தமிழிசைக்கும், சோபியாவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து பாஜக தலைவர் தமிழிசை போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் சோபியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மறுநாள் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து தற்போது சோபியா விடுவிக்கப்பட்டுள்ளார்.

இப்போது மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வரும் பாசிசம் என்ற வார்த்தைக்குப் பெரும்பாலானோருக்கு ஆழமான அர்த்தம், தீவிரத் தன்மை, ஏன் அந்த வார்த்தை குறிப்பிட்ட அரசு மீது பயன்படுத்துகிறார்கள் என்பது பலருக்கும் புரியாததாக இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தீவிர அரசியல் சித்தாந்தங்களுக்குள் பாசிசமும் ஒன்றாகும். பாசிச சித்தாந்தத்தின் தந்தையாக இத்தாலியின் சர்வாதிகாரியாகிய பெனிடோ முசோலினி கருதப்படுகிறார். அதன்பின் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனியில் பதவிக்கு வரும் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் முசோலினியை பின்பற்றி நாஜிசம் என்ற பெயரில் பாசிசக் கோட்பாட்டை உருவாக்கினார். இதுதான் சுருக்கமான வரலாறாகும்.

இத்தாலியின் முசோலினி, ஜெர்மனியின் அடால்ப் ஹிட்லர் ஆகியோரே பாசிசத்துக்கு வரலாற்றில் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

பாசிசம் என்பது என்ன?

பாசிசம் என்பது சர்வாதிகாரியின் தலைமையில், சமூக நிறுவனங்கள், பண்பாட்டு நிறுவனங்கள், பொருளாதார கொள்கைகள் ஆகியவற்றை கட்டுக்குள் வைத்துக் கொண்டு ஆட்சி அதிகார வர்க்கத்தால்(போலீஸார், ராணுவம், ஆட்சிநிர்வாகம்) ஒற்றைக் கருத்தியலை சமூகத்தின் மீது திணித்து அடக்குமுறை செய்வதாகும்.

தனிமனித உரிமைகளை மதிக்காமல், நாட்டு நலனுக்காக, வளர்ச்சிக்காக எனக்கூறி அரசுக்குச் செயல்பாடுகளை, நடவடிக்கைகளைக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் அதிகார எந்திரங்கள் மூலம் நசுக்குகிற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்.

எங்கிருந்து சொல் உருவானது?

பாசிசம் என்ற சொல் பாஸ்சியோ (Fascio) அல்லது பாஸ்சி (Fasci) என்ற இத்தாலிய சொல்லிலிருந்து உருவானது. இத்தாலிய சொல்லாகிய Fascio என்பதற்கான பொருள் இறுக்கமாகக் கட்டப்பட்ட குச்சிகளின் கட்டு என்பதாகும். கோடாரிச் சின்னமே பாசிச ராணுவத்தின் சின்னமாக பயன்படுத்தப்பட்டது. ஹிட்லர் தன் நாஜிக் கட்சியின் சின்னமாக ஸ்வஸ்திக்கைப் பயன்படுத்தினார்.

வரம்பற்ற அதிகாரம் கொண்ட அரசின் மகத்துவத்துக்காக தன்னுடைய அனைத்து உரிமைகளையும் எல்லோரும் அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற அடிப்படையிலே தான் பாசிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

பாசிசத்தின் இயல்புகள்

பாசிசத்தில் தலைவனை மக்கள் கண்மூடித்தனமாக பின்பற்றுவார்கள். அந்த வகையிலான மக்கள் கூட்டத்தை கொண்ட அரசாங்க முறைதான் பாசிச அரங்கமாகும். பாசிசம் நிலவும் அரசில் அஹிம்சை, சமத்துவம், ஜனநாயகம், தனிமனித உரிமை ஆகியவை நசுக்கப்படும். தலைவனைக் கண்மூடித்தனமாக மக்கள் பின்பற்ற கட்டாயப்படுத்தப்படுவார்கள். அனைத்தும் நாட்டின் நலனுக்காக என்று மக்களின் மூளையில் ஏற்றப்படும். பாசிச அரசில் பள்ளி, குடிமக்களின் கல்வி, பணி, குடும்ப வாழ்க்கை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தலையீடு இருக்கும்.

இன்றைய இளைய தலைமுறை மத்தியில் பாசிசம் என்ற வார்த்தை அதன் ஆழமான வரலாற்றுப் பின்னணி தெரியாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எந்த ஒரு வார்த்தையின் வரலாறும் காலப்போக்கில் விரிவடைவதும், பரவலாவதும் இயல்புதான். அந்த வகையில் இன்றைய சூழலில் பாசிசம் என்ற வார்த்தை பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.