இந்திய விடுதலைப்பின் தமிழகம் நல்ல நிலையை எய்தி இருந்தது. ஒரு பக்கம் வளர்ச்சியும் முன்னேற்றமும் என போட்டி இட்டது. தமிழகத்தை சார்ந்த மூதறிஞர் இராசாசி காந்திக்கு இணையாகவும் கருமவீரர் காமராசர் நேருவுக்கு இணையாகவும் பசும்பொன் முத்துராமலிங்கம் நேதாஜிக்கு இணையாகவும் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள் முசுலீம் லீக் பெருந்தலைவராகவும் அறிஞர் அண்ணா, முத்தமிழ்க் காவலர் கி ஆ பெ வி, சிலம்புச் செல்வர் மபொசி, நாம் தமிழர் என்ற சி. பா. ஆதித்தனார், தோழர் பாலதண்டாயுதம், பி இராமமூர்த்தி என பலரும் தமிழ்நாட்டின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றிருந்தனர்.
அவர்களின் பெயருக்கென ஒரு தனியிடம் இருந்தது. அவர்களில் யாரும் கட்சியை பொருள் குவிக்க பயன்படுத்தவில்லை. அவர்கள் மக்களாட்சி முறைக்கு தோள் கொடுத்தனர். தங்களுக்கு அடுத்து தன் பிள்ளைகள் எனவோ, தன்னைத் தவிர தன்னை எதிர்த்து நின்றவர்கள் அழிந்து போக வேண்டும் என்றோ.. செயலாற்றியதில்லை.
சாதிகளை பேசி தமிழர்களை பிரித்து இலவயங்களை காட்டியோ மக்களை கூறு போட்டு அரசியல் இலாப நட்ட கணக்கு பார்க்கவில்லை. பணக்காரர்களாக பலர் இருக்க இல்லாதவர்களுக்கு எப்படி உதவுவது என திட்டம் தீட்டினர். இரண்டொரு குறைகள் இல்லாமல் இல்லை.
அவற்றில் ஒன்று இந்தியை இராசாசி அவர்கள் தமிழ்நாட்டில் ஒரு பாடமொழியாக கொண்டு வந்தது.
இரண்டாவது காமராசர் அவர்கள் ‘மேடாவது குளமாவது.. அது எங்கே இருந்தால் எனன அது இந்தியாவிற்குள்ளே தானே இருக்குது” என தமிழர் நம் நிலம் பகுதிகள் அண்டை மாநிலங்கள் பறித்துக் கொண்டு போக துணை நின்றது.
காரணம் அப்பொழுது தென்னாட்டில் தமிழர்களின் தலைமை மேலோங்கி இருந்தது. நம்மை மீறி அண்டை மாநிலங்கள் என்ன செய்துவிட முடியும்? என்ற எண்ணம்.
இதுவெல்லாம் எப்படி காலம் நெடுக நமக்கு கைகொடுக்கும் என்ற தொலை நோக்கு இல்லாமல் எடுத்த முடிவுகளாயின.
இதனூடே திராவிட குறுக்கு சால்களை ஓட்டியவர்களின் ஆட்சி அரசியல். ஒருவழியாக முன்னேறிக் கொண்டிருந்த தமிழகத்தை சாதி ஒழிப்பு உத்தமர்களால் தமிழ்நாடு ஒற்றுமை இல்லாத மாநிலமாக ஆகி திராவிட பயிர் நடவு மும்முரமாகி களை எது பயிர் எது எனத் தெரியாதவர்களால். தமிழ்நாடே களைகளால் பயிர் மூழ்கிப் போனது.
உழைப்பில்லாத பகுத்தறிவு சோறு போடுமா? சாதி இல்லையென செய்தொழிலே இல்லாமல் போனால் வாழ்வது எப்படி?
சிந்திக்காமல் போனது தமிழ்நாடு.
பேருந்துகளை எல்லாம் அரசுடமை ஆக்குகிறோம் என்று முதலாளிகளை ஒழித்தவர்களே முதலாளிகளானார்கள்.
மக்களுக்கான கல்வியை அரசும் வசதி படைத்தவர்களும் தங்களுக்கு பெருமை வர வேண்டும் என்பதற்காகவே மக்களுக்கு நடத்திய கல்வியை பிறர் பலரிடம் தந்து வணிக பொருளாக்கி ஏழைகள் இயலாதவர்களின் துன்பத்தில் மகிழ்ந்தார்கள்.
மன்னரை ஒழித்தவர்கள் அவர்களின் உதவித்தொகையையும் ஒழித்தோம் என்றவர்கள் தங்களே மன்னர்களாகி தன் உறவுகளுக்கு முடி சூட்டி மகிழ்கிறார்கள்.
இப்பொழுதெல்லாம் மக்களட்சி மக்களை ஏமாற்றவும் வாக்குகளை காசுக்கு விற்கவும் கூப்பிட்ட போதெல்லாம் கூட்டமாக வரவும் பழக்கப்படுத்தி விட்டனர்.
அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மும்மொழி திட்டத்தில் இந்தி இருக்கின்றதே எனச் சொன்னவர், இருமொழி திட்டம் என சொல்லி முதயல் மொழி தாய்மொழி (தமிழ்மொழி என உறுதி படுத்தாமல்) எனவும் இரண்டாம் மொழி ஆங்கிலம் எனவும் சட்டமிட்டதால் தமிழ் நாட்டில் உள்ளவர்களின் தாய்மொழிகளில் ஒன்றாக தமிழை வரிசையில் நிற்க வைத்து, ஆங்கிலம் மட்டும் அசைக்க முடியாத இடத்தில் நிற்க வைத்தார்.
அவருக்கு பின்னால் வந்தவர்களால் தமிழ் நாடு பல சிக்கல்களில் இருந்து மீளாத நாடாக இருக்கிறது. போதை மயக்கத்தை தந்து சிந்தனை அற்றவர்களாக ஆக்கினர். ஏற்கென காற்றுக்கும் மழைக்கும் தாங்காதவர்களான நம் தமிழ்க்குடிகள் புயலுக்கும் துயருக்கும் அழ.. ஒன்றுமே தெரியாதது போல் பேசியவர்களே மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்.. தேறுமா தமிழ்நாடு?
இப்பொழுது, கர்நாடகம் மீண்டும் ஒரு அணைக்கட்டு ஆணை பெற்றுள்ளது. இதுவரை கட்டிய அணைகள் போதாது என்று!
தமிழ் நாட்டின் சார்பில் பதினெட்டு பாராளுமன்ற மேலவை உறுப்பினர்களும் கீழவையில் முப்பத்தொன்பது உறுப்பினர்களும் இருக்கின்றார்களே.. அவர்கள் எல்லாம் என்ன வேலை செய்கிறார்கள்? நமக்கு மாநில அமைச்சரவை இருக்கின்றதே அது என்ன செய்கிறது?
ஏற்கெனவே நமக்கு செய்த இடையூறுகளை தான் திராவிட கட்சிகள் பொது சண்டையாங்குவது வழக்கம். அதே மேடை. அதே நாடகம். அதே ஒத்திகை தொடங்கிவிட்டது. தங்களுக்குள்ளான திறமை இன்மையை பேச்சு போட்டி பட்டிமன்றமாக்கி தோல்வியை தரப்போகின்றன.
சிந்தித்து செயல்பட வேண்டும். இல்லையேல் இதுவரை விடாத ஏதாவது ஒன்று இருக்கும் என நாம் நினைத்தால் அதையும் விற்றுவிட்டு, தங்களின் அரசியல் பேச்சுகளை தொடருவார்கள் என்பதை உணர்ந்து தமிழர் நாம் செயல்பட ஒன்றுபடுவது நல்லதாக்கும்!
வணக்கம்.
பாவலர்
மு. இராமச்சந்திரன்
தலைவர்
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.