ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் மக்களின் மொழியே அந்த மாநிலத்தின் ஆட்சிமொழியாக அமையும். அவ்வகையில் தமிழகத்தில் பேசப்படும் தமிழ்மொழியே தமிழகத்தின் ஆட்சி மொழியாக அமைய வேண்டுமென்று 27.12.1956இல் சட்டம் நிறைவேற்றப்பட்டு,
23.01.1957இல் புனித ஜார்ஜ் கோட்டை அரசிதழில் வெளியிடப்பட்டு, “தமிழ்மொழி” தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக அரசுக் கட்டிலில் ஏறியது. இச்சட்டமே “தமிழ்மொழி”க்காக தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட முதல் சட்டமாகும். இன்றைய சூழலில் கழகங்கள், வாரியங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், வங்கிகள், அலுவலகங்கள், விளம்பரங்கள், செய்தித்தாள்கள், கடைகள், நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் ஏனைய இடங்களில் தமிழ்மொழி புறக்கணிப்படுவதைக் கண்டு உள்ளம் வெதும்பும் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் மாணவர்கள், தமிழ் அறிஞர்கள் மட்டுமல்லாது எல்லாத் தமிழர்களும் கட்டாயம் அறிந்துவைத்திருக்க வேண்டியது "தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டம்". இச்சட்டத்தை அமல்படுத்த சென்னையில் தமிழ்வளர்ச்சி இயக்கம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தமிழ் வளர்ச்சித் துறை என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருப்பதை நாம் இன்னும் அறியாமலிருக்கிறோம். இனி அறிந்து கொள்வோம். வங்கிப்படிவங்கள் ஏன்? தமிழில் இல்லையென்று பலர் வங்கிகளில் சண்டையிட்ட காணொளிகளை இணையதளங்களில் பார்த்திருப்போம்.
இச்சட்டத்தை அறிவதன் மூலம் சத்தமில்லாமல், சண்டையில்லாமல் அந்தப் படிவங்களில் தமிழ் முத்திரையைப் பதிக்கவைக்க முடியும். ஆட்சி மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. இன்றியமையாத சில ஆணைகள் மட்டும் இப்பகுதியில் சுட்டிக்காட்டப் பெறுகிறது.
👉 1956ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் (தமிழ்நாடு சட்ட எண் XXXIX / 1956). இச்சட்டத்தின்படி தமிழகத்தின் ஆட்சி மொழியாகத் தமிழ் இருத்தல் வேண்டும். இது தமிழகம் முழுவதையும் அளாவி நிற்கும்.
👉 அரசு அலுவலகங்களுக்கு இடையே கடிதப் போக்குவரத்து தமிழில் மட்டுமே இருத்தல் வேண்டும் அரசாணை எண் 1076 நாள் 27.09.1969.
👉 தமிழில் மட்டுமே தமிழக அரசு ஊழியர்கள் கையொப்பம் செய்ய வேண்டும். பெயர்க்கு முன்எழுத்தும்(Initial) தமிழிலேயே இருக்க வேண்டும். அரசாணை எண் 431 நாள் 16.09.1998 தமிழ்வளர்ச்சி பண்பாடு மற்றும் அறநிலைய (த.வ) துறை
👉 அரசு அலுவலகப் பெயர்ப்பலகை, அரசால் வெளியிடப்படும் அறிவிப்புகள், அறிக்கைகள், ஏல அறிவிப்பு விளம்பரங்கள், இதர விளம்பரங்கள் வெளியிடும் அலுவலரின் பெயருக்கு முன் எழுத்து, ஆங்கில எழுத்தாக (எஸ்.முத்து) எழுதப் படுகிறது. இதைத்தவிர்த்து சரியான தமிழில் (சு.முத்து) பயன்படுத்த வேண்டும். கையொப்பம் செய்யும் போதும் அவ்வாறே பயன்படுத்த வேண்டும். தமிழ்வளர்ச்சித் துறை கடிதம் எண் 3911 நாள் 15.04.1999.
👉 அரசு அலுவலர்களும் பணியாளர்களும் தமிழில் மட்டுமே ஒப்பமிட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசு ஆணை எண். 1134, நாள்.26.01.1978.
👉 தமிழ் – ஆட்சிமொழிச் சட்டம், 1956 – ஆட்சிமொழிச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தாத அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்தல். அரசாணை எண் 24.
👉 தமிழ் வளர்ச்சி-கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் முதலியவற்றில் பெயர்ப்பலகைகளைச் சரியாகத் தமிழ்ச் சொற்களில் எழுதிவைத்தல். அரசாணை 291.
👉 அலுவலகப் பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பதிவேடுகளும் தமிழில் மட்டுமே பேணப்பட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசு ஆணை எண்.2618, நாள்.30.01.1981.
👉 பணிப்பதிவேடுகளில் அனைத்துப் பதிவுகளும் தமிழில் இருத்தல் வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. பொதுத்துறை நிலையாணை எண்.1993, நாள்.28.06.1971
👉 உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், மைய, மற்றும் பிற மாநில அரசுகள், தூதரகங்கள், ஆங்கிலத்தி்ல் மட்டுமே தொடர்புகள் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே ஆட்சிமொழித் திட்டத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளன. விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த இனங்கள் தவிர பிற அனைத்திலும் கடிதப் போக்குவரத்துகள் தமிழிலேயே அமைதல் வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசு கல்வித்துறை நிலையாணை எண்.432, நாள்.31.10.1986.
👉 அலுவலக நடைமுறையில் திருவள்ளுவராண்டினைக் குறிப்பிட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. பணியாளர் நிருவாகச் சீர்திருத்தத்துறை அரசாணை நிலை எண்.91, நாள்.03.02.1981.
👉 அலுவலக வரைவுகள், கோப்புகள், செயல்முறை ஆணைகள் அனைத்திலும் சீர்திருத்த எழுத்துக்களையே பயன்படுத்த வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. கல்வித்துறை நிலையாணை எண். 1875, நாள்.19.10.1978.
👉 அலுவலகப் பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துக்களின் அளவு இடம் பெற வேண்டுவது தொடர்பாகவும் ஆணையிட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றம் பண்பாட்டுத்துறை அரசாணை நிலை எண். 349, நாள்,14.10.1987.
👉 அரசாணைகள் அனைத்தும் கட்டாயம் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் அரசாணை எண் 41, நாள் 20.02.2008. அமைச்சர் தனி அனுமதி பெறாமல் ஆங்கிலத்தில் வெளியிடக் கூடாது. ஆங்கிலத்தில் வெளியிட்டால் உடனடியாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட வேண்டும். (இம்முயற்சியில் வழக்கறிஞர் நல்வினை விசுவராசு அவர்களது பங்கும் உண்டு). ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இவை போன்று பல அரசாணைகளை அரசு பிறப்பித்துள்ளது.
"தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் -- வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ்" என்ற முகநூல் பக்கத்தில், தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தையும், அரசாணைகளையும் மீறி தமிழ் அல்லாத மொழிகளில் விளம்பரம் வெளியிட்ட அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி வழக்கறிஞர் நல்வினை விசுவராசு அனுப்பிய கடிதமும், அதற்கு வழங்கப்பட்ட பதில்களும் இடம்பெற்றுள்ளது.
மேலும் தகவல்களுக்கு அப்பக்கத்தை அணுகலாம். (
https://m.facebook.com/1418264355081602/photos/a.1418546725053365/1418549781719726/?type=3
)
அனைத்து வங்கிகளிலும் புதிய கணக்கு தொடங்கும் விண்ணப்பம், பணம் செலுத்தும் மற்றும் பணம் எடுக்கும் விண்ணப்பங்கள், அறிவிப்புப் பலகைகள் என வங்கியின் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழைப் பயன்படுத்த வேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை நகலுக்கான இணைய இணைப்பு (
https://m.facebook.com/story.php?story_fbid=1603674366443108&id=100004016814910
). தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தின்படி தமிழை பயன்படுத்தாத வங்கிகள், அரசு அலுவலகங்கள், அறிக்கைகள், அறிவிப்புகள், ஏல அறிவிப்பு விளம்பரங்கள் மற்றும் இதர இடங்களில் தமிழ் நீக்கப்படும்போது, மேற்கண்ட சட்டத்தைப் பயன்படுத்தி, அந்த மாவட்டத்தில் பணிபுரியும் "தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர்" அவர்களுக்குக் கடிதம் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கவைப்போம். தமிழ் காப்போம்.
தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம்
(மாதிரிக்கடிதம்)
அனுப்புநர்: தங்கள் பெயர் முகவரி.
பெறுவர்: தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியரகம், _____________ மாவட்டம்.
பொருள்: தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டத்தை அமல்படுத்துதல் சார்பு.
ஐயா/அம்மையீர் வணக்கம், _____________ மாவட்டம், _____________ வட்டம், ______________________ ஒன்றியம் ஊராட்சிக்கு உட்பட்ட கடைவீதியின் மேற்கு சாலையில் __________________________ என்ற பெயர் கொண்ட கடையின்/ தொழிற்சாலையின்/ வங்கியின்/ உணவகத்தின்/ நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்ட அரசாணை எண் 291இல் கூறப்பட்டுள்ள, "கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் முதலியவற்றில் பெயர்ப்பலகைகளைச் சரியாகத் தமிழ்ச் சொற்களில் எழுதிவைத்த"லுக்கு எதிராக அல்லது அவ்வரசாணையை மீறி ஆங்கிலத்தில் (அல்லது பிறமொழியில்) குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநராகிய தாங்கள் உடனடியாக இதில் தலையிட்டு தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தை மீறிய அக்கடையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், பெயர்ப்பலகையைத் தமிழில் மாற்ற சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இப்பகுதியில் தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தை முறையாக அமல்படுத்தாத அல்லது அமல்படுத்துவதில் அலட்சியம் செய்த அதிகாரிகள் மீது "தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்ட அரசாணை எண் 24"இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். நன்றி. தமிழ் வாழ்க.
இடம்
நாள் இப்படிக்கு
(வங்கிகளில் பெயர்ப்பலகை, அறிவிப்புப்பலகை, புதிய கணக்கு தொடங்கும் விண்ணப்பம், பணம் எடுத்தல் மற்றும் செலுத்தல் விண்ணப்பம் ஆகியவை தமிழில் இல்லாதபோது இதே முறையில் அம்மாவட்டத் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் அவர்களுக்கு கடிதம் எழுதி த.ஆ.சட்டத்தை அமல்படுத்த வைக்கலாம்)
— ஏறன் சிவா
சேலம் மாவட்டம்
பத்து ரூபாய் இயக்கம்
இராசிபுரம் மாவட்டம், நாமக்கல்.