“இந்திய அரசே, காவிரி மேலாண்மை ஆணையத்தை நீராற்றல் (ஜல்சக்தி) துறையின் கீழமை அலுவலகமாக மாற்றாதே”, “காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னதிகாரத்தைப் பறிக்காதே!”, “காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தனிப் பொறுப்புள்ள முழுநேரத் தலைவர் அமர்த்து”, “காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தனி அலுவலகமாகச் செயல்பட அனுமதி!” என்ற முழக்கங்களை இந்திய அரசை நோக்கி எழுப்பி, 07.05.2020 வியாழன் மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை நடத்திய அறப்போராட்டம், நாம் எதிர்பார்த்ததைவிடவும் அதிக மக்களால், அதிக அமைப்புகளால் நடத்தப்பட்ட விவரம் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நடத்தும் போராட்டமாக காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்தாலும், அவற்றுக்கும் அப்பால் பல மாவட்டங்களில் இப்போராட்டத்தைத் தமிழ் மக்கள் நடத்தியுள்ளார்கள். அமெரிக்கா, பக்ரைன் போன்ற வெளிநாடுகளிலும் நடத்தியுள்ளார்கள்.
“காவிரி ஆணையத்தைக் காப்போம்” #Save Cauvery Authority” என்ற சுட்டுரை (Twitter) குறிச்சொல் (Hashtag) 07.06.2020 அன்று மாலை 5 மணியிலிருந்து 7 மணி வரை தமிழ்நாட்டிலேயே முதற்பெரும் போக்காக இருந்தது. இந்திய அளவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுடன் இருந்தது.
மே 7 காலை சாராயக் கடைகளைத் திறக்கப் போவதாகத் தமிழ்நாடு அரசு 05.05.2020 பிற்பகல் அறிவித்தது. கொரோனா துயர் துடைப்புப் பணிகளில் உள்ள குறைபாடுகளையும், அவசரமாக மதுக்கடைகள் திறப்பதையும் கண்டித்து, தி.மு.க. கூட்டணி 07.05.2020 காலை 10 மணிக்கு வீட்டு வாயில் போராட்டம் நடத்தப்போவதாக 06.05.2020 அன்று அறிவித்தது.
இத்தனை திடீர்க் குறுக்கீடுகளுக்கிடையே நாம் நடத்திய “காவிரி காக்க எழுவோம்” – வீட்டுவாயில் போராட்டம் பேரெழுச்சியாக நடந்தது பேருவகை அளிக்கிறது. சிற்றூரிலிருந்து பெருநகரம் வரை – உழவர்களிலிருந்து உயர்கல்வி மாணவர்கள் வரை அனைத்துப் பகுதித் தமிழர்களும் காவிரிக் காப்புப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
கொடிய கொரோனா கொள்ளை நோய்த் தடுப்பில் அனைவரும் ஊரடங்கின் கீழ் வீடடங்கி வாழும் நிலையில், காவிரி உரிமைப் பறிப்பை மோடி அரசு அறிவித்தது. நெருக்கடிச் சூழலில், காவிரிக் காப்பு வீட்டு வாயில் போராட்டத்தைக் காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்தது. ஊரடங்கு விதிகளைக் கடைபிடித்து, அவரவர் வீட்டு வாயிலில் குடும்ப உறுப்பினர்கள் – ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உரிய இடைவெளி விட்டு நின்று இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதன் அடையாளமாகக் கருப்புக் கொடி ஏந்துங்கள்; அத்துடன் நமது கோரிக்கைப் பதாகை ஏந்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
கெடுபிடிகள் – கட்டுப்பாடுகள் நிறைந்த இக்காலத்தில் இப்போராட்டம் இவ்வளவு வீச்சாக – விரிவடைந்ததற்கு இரண்டு காரணங்கள் முகாமையாக இருக்கின்றன. ஒன்று, காவிரித் தாயுடன் காலம் காலமாகத் தமிழர்களுக்குள்ள உறவும், உரிமையும்! இரண்டு, தமிழ்நாட்டு வாழ்வுரிமைக் காப்புப் போராட்டம் என்ற புரிதலில் பல்வேறு இயக்கங்களும் அமைப்புகளும் இப்போராட்டத்தில் கூட்டாகப் பங்கெடுத்துக் கொண்ட வலிமை!
காவிரி உரிமை மீட்புக்குழு 2012ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. பல்வேறு வடிவங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியிருக்கிறது. குறிப்பிட்ட நிபந்தனையின் பேரில் கர்நாடகம் காவிரியில் மேக்கேத்தாட்டு அணை கட்டிக் கொள்ள தமிழ்நாடு அரசு ஒப்புதல் தெரிவித்த நிலையில், திருவாரூர் வந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார்க்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தி, அவ்வொப்புதலைக் கைவிடச் செய்தோம். காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டு, அனைத்திந்திய ஒற்றைத் தீர்ப்பாயத்தில் புதிதாகக் காவிரி வழக்கைக் கொண்டு போக பா.ச.க. ஆட்சி புதிய சட்டம் இயற்ற சட்ட முன்வடிவை மக்களவையில் முன்வைத்த நிலையில், அதை எதிர்த்துத் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 19 நாள் காத்திருப்புப் போராட்டம் இரவு பகலாகத் தொடர்ந்து நடத்தி அப்போது அச்சட்டம் வாக்கெடுப்பிற்கு வராமல் தடுத்தோம்! இன்னும் பல போராட்டங்கள்..
காவிரி உரிமை மீட்புக் குழுவில் உழவர் சங்கங்களும் இருக்கின்றன. அரசியல் அமைப்புகளும் இருக்கின்றன. பேராசிரியர் சின்னச்சாமி அவர்கள் தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திரு. த. மணிமொழியன் (கா.உ.மீ.குழு – பொருளாளர்), திரு. க. செகதீசன் (தஞ்சை மாவட்டத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்), திரு. ம.பா. சின்னத்துரை (திருச்சி மாவட்டத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்), தமிழர் தேசிய முன்னணி சார்பில் அதன் பொதுச்செயலாளர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன், அதன் மற்றொரு பொதுச் செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், அதன் திருவாரூர் மாவட்டத் தலைவர் திரு. ச. கலைச்செல்வன், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் திரு. பெ. மணியரசன் (கா.உ.மீ.குழு – ஒருங்கிணைப்பாளர்), அதன் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு. பழ. இராசேந்திரன், தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. நா. வைகறை, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், இந்திய சனநாயகக் கட்சித் தலைவர் திரு. ச. சிமியோன் சேவியர்ராசு, அ.ம.மு.க. வழக்கறிஞர் அ. நல்லதுரை, மனித நேய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், இந்திய யூனியன் முசுலிம் லீக் சார்பில் அதன் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. செய்னூலாப்தீன், தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழகம் சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன், தமிழக உழவர் முன்னணி சார்பில் சிதம்பரம் திரு. சி. ஆறுமுகம் மற்றும் இலால்குடி வட்டம் நகர் ஊராட்சி முன்னாள் தலைவர் திரு. செல்லையா, தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த திரு. க. அருணபாரதி, திரு. தனசேகர், திரு. பார்த்திபன் மற்றும் களச் செயல்பாட்டாளர்கள் வெள்ளாம்பெரம்பூர் துரை. இரமேசு உள்ளிட்ட அந்தந்த வட்டார மற்றும் கிராமப் பொறுப்பாளர்கள் அனைவரும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் இப்போராட்டத்தை வெகுமக்கள் போராட்டமாக நடத்தக் கடுமையாக உழைத்தார்கள்.
குறிப்பாக, மனித நேய சனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் – சட்டப்பேரவை உறுப்பினர் திரு. மு. தமிமுன் அன்சாரி அவர்கள், இப்போராட்டத்திற்காக தன் கட்சியினரை முடுக்கி விட்டதும், தோழமை அமைப்புகளின் தலைவர்களைத் தொடர்பு கொண்டு இணைத்ததும் பாராட்டிற்குரியது. மனித நேய சனநாயகக் கட்சியினர் பல மாவட்டங்களில் சிறப்பாகப் போராட்டம் நடத்தினர்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் திரு. சீமான் அவர்கள், இப்போராட்டத்தை ஆதரித்தும் இதில் கலந்து கொள்ள தன் கட்சியினர்க்கும் மக்களுக்கும் வேண்டுகோள் வைத்தும் முன்கூட்டியே அறிக்கை வெளியிட்டார். வீட்டு வாயில் போராட்டத்தைத் தம் இல்லத்தின் வாயிலில் நடத்திக் காணொலி வெளியிட்டார். பல்வேறு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் அவர்கள், இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு தம் கட்சியினர்க்கு வேண்டுகோள் வைத்து, முன்கூட்டியே அறிக்கை வெளியிட்டார். தன் வீட்டிலிருந்தவாறு குடும்பத்தினருடன் போராட்டத்தில் பங்கேற்றார். த.வா.க.வினர் பல ஊர்களில் போராட்டத்தை நடத்தினர்.
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. கருணாஸ் அவர்கள், இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எழுச்சி உரை ஆற்றிக் காணொலி வெளியிட்டார். தன் குடும்பத்தினருடன் இப்போராட்டத்தை நடத்தினார். இக்கட்சியினர் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தினர்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக் கட்சித தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. உ. தனியரசு அவர்கள், இப்போராட்டத்தில் பங்கேற்று பதாகையுடன் படமெடுத்துப் பகிர்ந்தார்.
திரு. ஜான் பாண்டியன் அவர்கள் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. ஜெய. விவேகானந்தன் தலைமையில் அவ்வமைப்பினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் முனைவர் சுப. உதயகுமார் அவர்கள், இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டார். போராட்டத்திலும் பங்கேற்றார்.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன் அவர்கள், போராட்டத்தில் பங்கேற்க மக்களுக்கு வேண்டுகோள் காணொலி வெளியிட்டார். போராட்டத்திலும் தம் இணையர் மற்றும் தோழர்களுடன் பங்கேற்றார்.
தமிழக மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மக்கள் அரசுக் கட்சித் தலைவருமான வழக்கறிஞர் அருள்மொழிவர்மன் (இரசினிகாந்த்) அவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டார். போராட்டத்தில் இக் கூட்டியக்கத்தின் தோழர்கள் சதா. சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று நேரலை செய்தனர்.
புதுச்சேரியில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வேல்சாமி தலைமையில், வாயில் போராட்டம் நடைபெற்றது. இதில், உலகத் தமிழ்க் கழக புதுச்சேரி செயலாளர் திரு. கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி தொழிலாளர் நலச்சங்கத் தலைவர் திரு. து. இரமேசு, இலக்கியப் பொழில் மன்ற அமைப்பாளர் திரு. பராங்குசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு தம் இயக்கத்தவர்களுக்கும் மக்களுக்கும் வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டார். மே17 இயக்கத்தினர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுப் படம் வெளியிட்டார்.
தமிழ்ப் பேரரசுக் கட்சித் தலைவர் இயக்குநர் வ. கௌதமன் அவர்கள், தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன் அவர்கள் ஆகியோர் இப்போராட்டத்தில் மக்கள் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டனர்.
தோழர் தியாகு அவர்கள் தலைமையிலான உழவர் அரண் அமைப்பின் தஞ்சை மாவட்டப் பொறுப்பாளர் தோழர் அருண் மாசிலாமணி அவர்கள் பூதலூர் ஒன்றியப் பகுதிகளில் தம் அணியினரை இப்போராட்டத்தில் பங்கேற்கச் செய்தார்; தாமும் போராட்டத்தில் பங்கேற்றார்.
காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெளியே – சேலம் மேச்சேரியில் “சத்தியபாமா அறக்கட்டளை” நிறுவனர் மருத்துவர் சத்தியபாமா அம்மையார் அவர்களும், காரைக்குடி பதிணென் சித்தர் பீடத்தினரும், சென்னை, நாமக்கல், ஈரோடு, கூடலூர், ஓசூர், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டம், புளியங்குடி, திருச்செந்தூர் எனப் பல்வேறு பகுதிகளிலும் இப்போராட்டங்கள் நடந்துள்ளன. இவற்றில் பலரும் பங்கேற்றுள்ளனர்.
என் நினைவாற்றல் குறைவால் இன்னும் சில அமைப்புகள் – அவற்றின் பொறுப்பாளர்கள் ஆகியோரின் பங்களிப்புகள் விடுபட்டுப் போயிருக்கும். பொருத்தருள்க!
ஊரடங்கு காலத்திலும் நம் உணர்ச்சியைத் தட்டி எழுப்பி நம்மைக் களம் காண வைத்தது காவிரிக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள காலங்கணிக்க இயலா வரலாற்று உறவு! காவிரி ஆணையத்தின் தன்னதிகாரம் மீட்க, வீட்டு வாயில் போராட்டத்தில் கலந்து கொண்டோர், போராட்டங்களை ஒருங்கிணைத்தோர் அனைவர்க்கும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நெஞ்சு நிறைந்த பாராட்டை – நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போராட்டத்தை 01.05.2020 அன்று முடிவு செய்ததிலிருந்து – இச்செய்தியைப் பல வடிவங்களில் மக்களிடம் கொண்டு செல்ல இரவு பகலாக உழைத்த இணையதளச் செயல்வீரர்கள், பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அனைவர்க்கும் நம் பாராட்டும், நன்றியும்!
காவிரி இல்லாமல் வாழ்வில்லை!
களம் காணாமல் காவிரி இல்லை!
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழுபேச: 90251 62216, 94432 74002
Fb.com/KaveriUrimai
SaveMotherCauverywww.kaveriurimai.com