ரோஜா பூ

நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு செடியின் வேர், பட்டை, காய், கனி மட்டும் மருத்துவதிற்கு பயன்படுத்தியதோடு அதன் பூக்களையும் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ரோஜாப்பூ பாரத தேசம் எங்கும் வளர்க்கப்படுகிறது. அந்த ரோஜா பூவை கொண்டு பலவிதமான நோய்களுக்கு தீர்வு கண்டுள்ளனர் நம் முன்னோர்கள். ரோஜா பூக்களில் ஹைபிரிட் எனப்படும் கலப்பு ரோஜா பூக்களை விட பன்னீர் ரோஜா, நாட்டு ரோஜா ஆகியவற்றையே மருத்துவ மருத்துவ சிகிச்சைகளுக்கு பயன்படுத்திக் கொள்வது ஏற்றதாகும். இங்கு ரோஜா பூக்களால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரோஜா பூ பயன்கள்


தலைவலி


சிலருக்கு உடலில் பித்தம் அதிகரித்து விடுவதாலும், வேறு பல உடல் ரீதியான காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட தலைவலியால் அவதிப்படுபவர்கள் மற்ற எந்த மருத்துவ முறைகளையும் நாடுவதற்கு முன்பு புதிதாக பூத்த ரோஜா பூ ஒன்றை எடுத்து. அதன் வாசத்தை சிறிது நேரம் முகர்வதால் தலையை கடுமையான தலைவலி குறையும்.

உடல் துர்நாற்றம்

உடலில் அதிகம் வியர்வை சுரக்கும் நபர்களுக்கும், மாமிசம் உணவுகள் அதிகம் சாப்பிடும் நபர்களுக்கும் உடல் துர்நாற்றம் அதிகம் இருக்கும். அவர்களது உடல் துர்நாற்றம் போக்க சரியான தீர்வாக ரோஜா பூ இருக்கிறது. இதன் இதழ்களை சாப்பிடுபவர்களுக்கு வியர்வையினால் உண்டாகும் விஷ தன்மையை உங்கள் உடலில் இருந்து நீக்கி உங்கள் உடலை குளிர வைக்கிறது. எனவே கோடை களங்களில் காலங்களில் ரோஜா பூ இதழ்களை அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

வாய்ப்புண்

உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் போதும், காரமான உணவுகளை அதிகம் உண்பதாலும் பலருக்கு வாய்ப்புண்கள் ஏற்படுகிறன. இதற்கு மருந்தாக ரசாயனங்கள் கலந்த மருந்துகளை பயன்படுத்துவதை விட சிறிது ரோஜா இதழ்களை மென்று சாப்பிடுவது சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இது உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி, வாய் புண் உருவாவதை குறைத்து அதனால் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியை குறைக்க உதவுகிறது.

ஆண்மை குறைபாடு

உடல் உஷ்ணம் அதிகம் இருப்பவர்களுக்கும், வெப்பம் நிறைந்த இடங்களில் பணி புரிகின்ற ஆண்களுக்கும் அவர்களின் விந்தணுக்கள் குறைத்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்றன வாய்ப்புகள் அதிகமாகின்றன. ரோஜா பூவின் இதழ்களை சாப்பிடுவதால் உடலை குளிர்ச்சியடைந்து, ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்குகிறது. ரோஜா பூவை அடிக்கடி முகர்ந்துகொள்வதால் உடலுறவில் ஆர்வமில்லாத நிலை நீங்கும்.

மலச்சிக்கல்

ரோஜா இதழ்கள் வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலையை சீர் செய்கிற சக்தி அதிகம் கொண்டுள்ளது. இது செரிமானம் நடக்க மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் உங்கள் பசியை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் குறைய இது ஒரு சிறந்த மருந்து ஆகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க ரோஜா இதழ்களை மென்று சாப்பிடுவது நல்லது.

இளமை தோற்றம்

அனைவருக்குமே எப்போதும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்கிற ஆவல் இருக்கத்தான் செய்கிறது. இதற்காக விலையுர்ந்த பல அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதை விட ரோஜா பூ இதழ்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உங்களின் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது.

மயக்கம்


ஒரு சிலருக்கு வெளியில் செல்லும் போது மயக்கம் ஏற்படும், அதிலும் குறிப்பாக கோடைகாலங்களில் உடலின் உஷ்ணம் அதிகரித்து ரத்த ஓட்டம் மூளைக்கு செல்லாமல் சுணங்குவதால் இத்தகைய மயக்க நிலை ஏற்படுகிறது. இப்படிபட்டவர்கள் வெளியே செல்லும் போதும், வீட்டிற்கு திரும்பிய பின்பும் ரோஜா பூவை முகர்ந்து கொள்வதாலும், அந்த பூவின் இதழ்களை சாப்பிடுவதாலும் மயக்க நிலை ஏற்படாமல் தடுக்க முடியும். உடல் மற்றும் மனம் சுறுசுறுப்புடன் இயங்கும்.

மாதவிடாய்

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் உதிரப்போக்கு ஒரு இயற்கையான நிகழ்வாகும். ஆனால் சில பெண்களுக்கு இந்த மாதவிடாய் காலத்தில் ரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படவும் செய்கிறது. இத்தகைய காலங்களில் பெண்கள் காலையில் ரோஜா இதழ்களை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

சீதபேதி, வயிற்று போக்கு

உடல் மிகவும் உஷ்ணம் அடைவதாலும், வேறு சில காரணங்களாலும் சிலருக்கு சீதபேதி எனப்படும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இந்த சீதபேதி ஏற்பட்டவர்கள் தொடர்ந்து ஏற்படும் வயிற்று போக்கு நிற்க சிறிது ரோஜா பூக்களை சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் இப்படிப்பட்ட கடுமையான சீத பேதி நீங்குவதோடு தொடர்ந்து ஏற்படும் வயிற்று போக்கும் நிற்கும்.

இதயம்

நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தாலும், இதயத்திற்கு நலத்தை தருகின்ற உணவுகள் மற்றும் மூலிகைகளை சாப்பிட்டு வருவது நல்லது. காலையில் ரோஜா இதழ்களை மென்று சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. ரத்தம் கட்டிக்கொள்வது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும்.

வெற்றிலை

'Piper betle' என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இதற்கு தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் போன்ற பல பெயர்கள் உள்ளன. வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை போன்ற வகைகள் உள்ளன. வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவப்பலன்களைத் தரக்கூடியவை. கொடி வகையைச் சேர்ந்த இது, இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெருமளவு விளைகிறது. நம் ஊர்களில் காய்கறிகள் மற்றும் முருங்கை, அகத்தி, வாழை உள்ளிட்டவற்றை வளர்க்கும் கொடிக்கால்களிலும் அகத்தி மரங்களிலும் வெற்றிலையைப் படரவிடுவது வழக்கமாக உள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்திலோகிளுவை’ எனப்படும் மரங்களை நட்டு, அதில் இதன் கொடியைப் படரச்செய்வார்கள். சில இடங்களில் மூங்கில் கம்புகளையும் இதற்குப் பயன்படுத்துவார்கள்.

இதில், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளன. வீரியம் மிக்க நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பினைல்புரோபின் (Phenylpropene) பொருள் உள்ளது. இது,உடலுக்கு உஷ்ணம் தரக்கூடியது.

வெற்றிலை, உமிழ்நீரைப் பெருக்கும்; பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; நாடி நரம்புகளை உரமாக்குவதுடன், காமத்தையும் தூண்டும். இது இயற்கை தந்த அற்புதம். ஆகவே அளவோடு வெற்றிலை சாப்பிட்டுவந்தால், ஆண்மைக்குறைபாடு நீங்கும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

இலைச் சாற்றுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகிவந்தால், சிறுநீர் நன்றாகப் பிரியும்.

கடுகு எண்ணெயில் வெற்றிலையைப் போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும். இதன் இலைச் சாற்றுடன் கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்து, தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு உண்டான சளி, இருமல் போன்றவை குணமாகும்.

வெற்றிலையை தீயில் வாட்டி, அதனுள் ஐந்து துளசி இலைகளை வைத்து, கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, 10 மாதக் குழந்தைக்கு காலையும் மாலையும் 10 சொட்டுகள் வீதம் கொடுத்துவந்தால் சளி, இருமல் குணமாகும். வெறும் இலையை தீயில் வாட்டி, மார்பில் பற்றுப் போட்டுவந்தால் சளி குறையும். விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் கீல்வாதக் கோளாறுகளுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டிவந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி எடுத்து அதனுடன் வெந்நீர் கலந்து குடித்து வந்தால், வயிற்று உப்புசம், மந்தம், தலைவலி, நீரேற்றம், வயிற்றுவலி போன்றவை குணமாகும்.

இலையில் ஆமணக்கு எண்ணெயைத் தடவி வாட்டி, கட்டிகளின் மேல் வைத்துக் கட்டினால் கட்டிகள் உடைந்து சீழ் வெளியாகும். இதை இரவில் கட்டுவது நல்லது.

கொழுந்து வெற்றிலையுடன் (ஒன்று) ஐந்து மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இதை தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 8 வாரம் சாப்பிட்டு வந்தால், இரைப்பை குடல்வலி, அசிடிட்டி, செரிமானம், மலச்சிக்கல் போன்றவை குணமாவதோடு மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி உடல் சுத்தமாகும். பழுத்தநிலையில் உள்ள அதாவது மஞ்சள் நிறத்தில் உள்ள அழுகிய வெற்றிலையைச் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. அது வயிற்றுப்போக்குப் பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

மலச்சிக்கல் பிரச்னை தீர இதன் சாறு பலன் தரும். 30 மி.லி சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது வெற்றிலையை இடித்து இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை தீரும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் அதிகமாகச் சுரக்கவும், மார்பில் பால் கட்டுவதால் வரக்கூடிய வீக்கத்தைக் கரைக்கவும் வெறும் இலையை தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்து மார்பகத்தில் கட்டினால் பலன் கிடைக்கும்.

தேள் கடிப்பதால் ஏற்படக்கூடிய விஷத்தை முறிக்க இரண்டு இலையுடன் ஒன்பது மிளகு சேர்த்து நன்றாக மென்று விழுங்க வேண்டும். அத்துடன் தேங்காய்த்துண்டுகள் சிலவற்றையும் மென்று சாப்பிட்டால், கைமேல் பலன் கிடைக்கும். தேள் கடி மட்டுமல்ல, விஷப்பூச்சிகள் எதுவும் கடித்தால் இதேபோலச் செய்து, நோய் பாதிப்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம்.

வெற்றிலை 4, வேப்பிலை ஒரு கைப்பிடி, அறுகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து 150 மி.லி ஆக வற்றியதும் வடிகட்டி, தினமும் மூன்று வேளையும் உணவுக்கு முன்னர் 50 மி.லி குடித்துவந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

வெற்றிலை போடுவதை, `தாம்பூலம் தரித்தல்’ என்பார்கள். பொதுவாக தாம்பூலம் தரிப்பது நல்ல பழக்கமே. ஆனால், அதை தவறாகச் செய்வதால் அது பற்றி ஒரு தவறான புரிதல் இருக்கிறது. அதாவது அதற்கென ஒரு அளவு முறை உள்ளது. மேலும், வெற்றிலையுடன் புகையிலை சேர்த்துப் போடுவதால்தான் அது வேறு சில நோய்களுக்கு வழிவகுக்கும். காலை சிற்றுண்டிக்குப் பிறகு தாம்பூலம் தரிப்பதாக இருந்தால், பாக்கு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது மதிய வேளையில் வெப்பம் அதிகரிக்கும்போது ஏற்படக்கூடிய பித்தம் கூடாமல் பாதுகாக்கும். மதிய உணவுக்குப் பிறகு தாம்பூலம் போடுவதாக இருந்தால் சுண்ணாம்பு அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உணவில் உள்ள வாயுவைக் கட்டுப்படுத்தும். இரவில் வெற்றிலையை அதிகம் சேர்த்துக்கொண்டால் நெஞ்சில் கபம் தங்காமல் இருக்கச் செய்யும். ஆக, தாம்பூலம் தரிப்பதால் நோய்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம்.

கொன்றை

1) மூலிகையின் பெயர் -கொன்றை.

2) தாவரப்பெயர் -: CASSIA FISTULA.

3) தாவரக்குடும்பம் -: CAESALPINIACEAE.

4) வகைகள் – புலிநகக்கொன்றை, மயில்க்கொன்றை, சரக்கொன்றை, செங்கொன்றை, கருங்கொன்றை, சிறுகொன்றை, மந்தாரக் கொன்றை மற்றும் முட்கொன்றை,

5) வேறு பெயர்கள்- பெருங்கொன்றை,சிறுகொன்றை.

6) பயன் தரும் பாகங்கள் -: பட்டை, வேர், பூ, மற்றும் காய்.

7) வளரியல்பு – : கொன்றை தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் காணப் படும் சிறு மர வகையைச் சேர்ந்தது. பல கிளைகள் விடும், ஒவ்வொரு கிளையிலும் பல சிறு கிளைகள் தோன்றி அதில் கொத்துக் கொத்தாக இலைக் கொத்துக்கள் தோன்றும், இதன் இலை நெல்லி இலை போல இருக்கும். ஒரே காம்பில் பல இலைகள் ஒன்றுக்கொன்று எதிர் வரிசையாகத் தோன்றும் ஒவ்வொரு இணுக்கு சேருமிடத்திலும் ஒரு சிறு கிளை தோன்றி, அதில் பல நரம்புகள் தோன்றி அந்த நரம்புகளில் கொத்துக் கொத்தாக மொட்டுக்கள் விட்டு சிகப்பு நிறப் பூக்கள் மலரும். இந்த பூ ஆவரம்பூவின் வடிவத்திலிருக்கும். இடையிடையே இலேசான மஞ்சள் நிறமும் கலந்திருக்கும். பூவின் நடுவில் 5-6 மகரந்த நரம்புகள் வெளியே நீண்டிருக்கும். நீண்ட உரிளைவடிவக் காய்களையும், உடைய இலையுதிர் மரம். இது விதை மூலம் இனப் பெருக்கம் ஆகின்றது.

மருத்துவப் பயன்கள்- மரம், நோய்நீக்கி உடல் தேற்றும். காய்ச்சல் தணிக்கும் மலமிளக்கும் வாந்தியுண்டாக்கும் உடல் தாதுக்களை அழுகாமல் தடுக்கும். பூ வயிற்று வாய்வகற்றும் நுண்புழுக் கொல்லும் மலமிளக்கும். காயிலுள்ள சதை (சரக்கொன்றைப் புளி) மலமிளக்கும்.

வேர்ப் பட்டை 20 கிராம் பஞ்சு போல் நசுக்கி 1 லிட்டர் நீரில் இட்டு கால் விட்டராகக் காய்ச்சி 5 கிராம் திரிகடுகு சூரணம் சேர்த்து காலையில் பாதியும் மாலையில் பாதியும் சாப்பிட காய்ச்சல் தணியும் இதய நோய் குணமாகும். நீண்ட நாள் சாப்பிட மேக நோய் புண்கள், கணுச்சூலை தீரும். ஒரு முறை மலம் கழியுமாறு அளவை திட்டப் படுத்திக் கொள்ள வேண்டும்.

10 கிரைம் சரக்கொன்றைப் பூவை அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. ஆகக் காய்ச்சி வடிகட்டிச் சாப்பிட வயிற்ற்றுப் புழிக்கள் கழிந்து நோயகலும். நீடித்துச் சாபிட மது மேகம் தீரும்.

பூவை வதக்கித்துவையலாக்கி உணவுடன் சாப்பிட மலச்சிக்கல் அகலும். காயின் மேலுள்ள ஓட்டைப் பொடித்துக் குங்கமப்பூ சர்க்கரை சமன் கலந்து பன்னீரில் அரைத்து பெரிய பட்டாணி அளவாய் மாத்திரை செய்து உலர்த்திக் கொண்டு மகப் பேற்றின் போது வயிற்றினுள் குழந்தை இறந்த நிலையில் 10 நிமிடத்திற்கு 1 மாத்திரை கொடுக்க இறந்த குழந்தையை வெளித்தள்ளும்.
சரக்கொன்றைப் புளியை உணவுக்குப் பயன்படுத்தும் புளியுடன் சமன் கலந்து உணவுப் பாகங்களில் பயன்படுத்த மலர்ச்சிக்கல் அறும்.

கொன்றைப் புளியை நீரில் அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போட கணுச் சூலை, வீக்கம் ஆகியவை தீரும்.

சரக்கொன்றைப் பூவையும் கொழுந்தையும் சமனளவு அரைத்துக் கொட்டைப் பாக்களவு பாலில் கலக்கி உண்டு வந்தால் வெட்டை, காமாலை, பாண்டு ஆகியவை தீரும்.

கொழுந்தை அவித்துப் பிழிந்த சாற்றில் சர்க்கரை கலந்து 200 மி.லி. கொடுக்க வயிற்றிலுள்ள நுண்புழுக்கள், திமிர் பூச்சிகள் அகலும்.
பூவை எலுமிச்சைச்சாறு விட்டரைத்து உடலில் பூசி வைத்திருந்து குளிக்கச் சொறி, கரப்பான், தேமல் ஆகியவை தீரும்.

கொன்றை மரத்தின் வேர்ப்பட்டையைக் கொண்டு வந்து கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, ஒரு கை பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகாக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலையாகக் கொடுத்து வந்தால் வாய்வு சம்பந்த மான வலிகள், வாத சம்பந்தமான வலிகள் உடலில் தோன்றும் அரிப்பு, சிறு சிரங்குகள், மேக கிரணம் இவைகள் படிப்படியாக மறைந்து விடும்.

கொன்றை மரத்தின் பட்டையை நறுக்கி, அதில் ஒரு கைப் படியளவும், தூது வேளைக் கொடியின் இலை,பூ, காய்,வேர் இவைகளில் வகைக்கு 5 கிராம் வீதமும் எடுத்து அதையும் பொடியாக நறுக்கி, வெய்யிலில் காயவைத்து இடித்து சலித்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு. மொச்சைக் கொட்டையளவு தூளைஎடுத்து, ஒரு டம்ளர் காச்சிய பசும் பாலில் போட்டுக் கலந்து, காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் சுவாசகாசம் படிப்படியாக் குறைந்து அறவே நீங்கி விடும்.

கொன்றைப் பூக்களில் கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு 100 கிராம் நல்லெண்ணையை விட்டு நன்றாகக் காயவைத்து பூக்கள் சிவந்து வரும் சமயம் இறக்கி, எண்ணணெய் ஆறியபின் வடிகட்டி ஒரு சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு காது சம்பந்தமான ஏற்படும் கோளாறுகளுக்கு, காலை மாலை ஒரு காதுக்கு இரண்டு துளி வீதம் விட்டு பஞ்சடைத்து வந்தால் , காது சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.இலைகளை கண் இமைகளின் மேல் இரவு படுக்குமுன் வைத்துக் கட்டி காலையில் அவிழ்த்துவிட வேண்டும் இந்த விதமாக ஐந்து நாட்கள் கட்டி வந்தால் கண் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும்.

பூனைக்காலி

  1. தாவரப் பெயர் -: MUCUNA PRURIENS.
  2. தாவரக்குடும்பம் -: PAPILIONACEAE.
  3. வகைகள் -: இது கொடி வகையைச் சேர்ந்தது, இதில் கருமை, வெண்மை என இரு வகையுண்டு. சிறு பூனைக்காலியும் உண்டு.
  4. பயன் தரும் பாகங்கள் -: விதை, வேர், சுனை முதலியன.
  1. வளரியல்பு -: பூனைக்காலி வெப்பநாடுகளில் சாதாரணமாக வளரும். இதன் தாயகம் ஆப்பிரிக்காவும் இந்தியாவும். இதற்கு கரிசல் மண் மற்றும் செம்மண்ணும் ஏற்றது. இது ஆறு மாதத்தில் பூத்துக் காய்விடும். காயில் சுமார் ஏழு விதைகள் இருக்கும். காய்களின் மேல் மிருதுவான வெல்வெட் போன்ற சுனை இருக்கும். இது உடம்பில் பட்டால் நமச்சல் ஏற்படும். இது விதை மூலம் இன விருத்திசெய்யப் படுகிறது.

மருத்துவப்பயன்கள் -: பூனைக்காலி பூவும் விதையும், வேரும் ஆண்மையைப் பெருக்கி, நரம்புகளை உரமாக்குகிறது.

பூனைக்காலி விதையை நன்றாக உலர வைத்து சூரணம் செய்து கொண்டு ஐநூறு மி.கிராம் ஆயிரம் மி.கிராம் அளவு வரை திணந்தோறும் காலை, மாலை இருவேளை பாலில் அருந்தி வர, மேக நோய்கள் நீங்குவதோடு ஆண்மை பெருகும்.

பூனைக் காலி விதை, சுக்கு, திப்பிலி மூலம், கிராம்பு, கருவாப்பட்டை, வெண் சித்திர மூலம் வேர்ப்பட்டை, பூனைக்கண் குங்கிலியம் இவைகளை குறிப்பிட்ட அளவு எடுத்து சூரணம் செய்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து, மிளகளவு மாத்திரைகளாக உருட்டிக் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் காலை, மாலை இரு வேளை ஒருமாத்திரை வீதம் உண்டு வர வயிற்றுப்புழு, குன்மம், மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும்.

உடல் வன்மை குறைந்தவர்கள் பூனைக்காலி விதை, சாதி பத்திரி, சமுத்திரப்பச்சை, சூடம், வசம்பு இவற்றை குறிப்பிட்ட அளவு எடுத்து உலர வைத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு, ஐநூறு மி.கிராம் முதல் ஒரு கிராம் வரை கால், மாலை இரு வேளை பாலுடன் அருந்தி வர ஆண்மை உண்டாகும்.

ஒரு லிட்டர் பசும் பாலில் முந்நாற்று இருபது கிராம் பூனைக் காலி விதையைப் போட்டு, பால் வற்றும் வரை நன்கு காய்ச்ச வேண்டும். விதையை எடுத்து நன்கு உலர வைத்துப் பொடி செய்து கொண்டு, தேவையான அளவு நெய் விட்டு இளவருப்பாக வறுத்து, சீனிப்பாகு இரண்டு பங்கு கலந்து நன்கு கிளறி சுண்டைக்காய் அளவு உருட்டி தேனில் ஊறவைக்க வேண்டும். காலை, மாலை இரு வேளை ஒரு உரண்டை வீதம் வெள்ளை, வெட்டை, பெண்களுக்கு மாத விலக்கின் போது இரத்தம் அதிகமாகப் பெருகுதல் முதலியவைகளிக்கு கொடுத்து வர, இவை குணமாகும்.

பூனைக்காலி விதை, சிறு நெருஞ்சில் விதை இவற்றுடன் தண்ணீர் விட்டான் கிழங்கு, முள் இலவு, நெல்லி இவைகளின் வேரையும் எடுத்து, உலர்த்தி, பொடி செய்து கொள்ள வேண்டும். சீந்தில் சர்கரை, கற்கண்டு, மேற்கண்ட பொடி இவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு ஒன்றாக க்கலந்து அதிலிருந்து ஐநூறு மி.கிராம் முதல் ஒரு கிராம் வீதம் நெய்யுடன் கலந்து காலை, மாலை இருவேளை உண்டு வர ஆண்மை பெருகும்.

பூனைக்காலி விதை நீக்கிய ஓட்டை சுனையுடன் தேனில் நன்றாக ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை எடுத்து அதன் சுனையை மெதுவாகச் சுரண்டி தேனுடன் நன்கு குழகுழப்பு பதம் வரும் வரை கல்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதனை தினந்தோறும் காலையில் சிறுவர்களுக்கு ஒரு மேஜைக்கரண்டியும், பெரியவர்களிக்கு இரண்டு மேஜைக் கரண்டியும் நான்கு நாட்கள் தொடர்ந்து கொடுத்து வர, கழிசல் உண்டாக்கி, வயிற்றிலுள்ள புழுக்களும் சாகும்.பூனைக்காலி காயை இதன் விதைகளை நீக்கி விட்டு நன்றாக உலர்த்தி, இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. இதனை முறைப்படி கஷாயம் இட்டு, வடிகட்டிக் கொண்டு அதில் சிறிது காட்டத்திப்பூ சேர்த்து நாற்பது நாட்கள் வரை மண்ணில் புதைத்து வைத்து, தக்க அளவு எடுத்து அருந்தி வர, ரத்தசோகை நோய் குணமாகும். கை கால் வீக்கமும் வடியும்.

பூனைக்காலி வேரை முறைப்படி கஷாயமிட்டு முப்பது மி.லி.முதல் அறுபது மி.லி. வீதம் கலந்து அருந்தி வர ஊழி நோய், சுரம் முதலியவைகளில் காணப்படும் வாதம், பித்தம், கப நோய் நீங்கும்.

பூனைக்காலி வேரை அரைத்து யானைக்கால் நோயால் ஏற்பட்ட வீக்கத்திற்கும் இதர வீக்கங்களிக்கும் பற்றிடலாம்.

பூனைக்காலி விதை தேள் கடிக்கு, சிறந்த மருந்தாக்ப் பயன்படுகிறது.

சித்த மருத்துவத்தில் பூனைக்காலியானது பல சூரணங்களிலும் லேகியங்களிலும் சேர்க்கப்படுகிறது.

பிரண்டை

சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை என பல வகைப்படும். இதற்கு, வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு.Cissus quadrangularis’ என்ற தாவரவியல் பெயர்கொண்ட இது, கொடி வகையைச் சேர்ந்தது.

இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது. இதன் சாறு உடலில்பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது.

அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.

எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.

மனஅழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும். மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். மேலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்; இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து.

எலும்பு முறிவு ஏற்பட்டால், இதன் துவையலைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம். இளம் தண்டுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்து, நன்றாகக் காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப் போடுவதன் (பாதிக்கப்பட்ட இடத்தில் பூசுவது) மூலம் பலன் கிடைக்கும். எலும்பு முறிவு மட்டுமல்லாமல், அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வலி உள்ள இடங்களிலும் இதைப் பூசிவர நிவாரணம் கிடைக்கும்.

துவையல்
பிரண்டைத் தண்டுகளின் மேல் தோலை அகற்ற்றி, அதில் உள்ள நாரையும் அகற்றிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்க வேண்டும். அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். சுவைக்காக தேங்காய், உளுந்து சேர்த்துக்கொள்ளலாம். பிறகு, கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்த துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

இலைத் துவையல்
பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும்.


இலை 100 கிராம், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு – 3 பல், மிளகு – 5, காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் மஞ்சள், உப்பு ஆகியவை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும். முதலில் இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்றவற்றை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு பிரண்டை இலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு வதக்கி, ஏற்கெனவே அரைத்து வைத்த கலவையுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்தால் துவையல் தயார்.

வற்றல்
நன்கு முற்றிய இதன் தண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி, மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊறவைத்து உலர்த்தி வற்றலாக்க வேண்டும். அந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் பசியின்மை, நாக்குச் சுவையின்மை போன்றவை குணமாகும்.

பிரண்டை உப்பு
பிரண்டையை உலர்த்தி எடுத்து தீயில் எரித்துச் சாம்பலாக்க வேண்டும். அப்படிக் கிடைக்கும் ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து, வடிகட்டி, அரை நாள் தெளியவைக்க வேண்டும். அப்படி தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 முதல் 10 நாள்கள் வெயிலில் உலரவைக்க வேண்டும். நீர் முழுவதும் வற்றி உலர்ந்த பிறகு கீழே படிந்திருக்கும் உப்பைச் சேகரித்து வைக்கவும்.

பிரண்டை உப்பில் 2 முதல் 3 கிராம் எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்துச் சாப்பிட 2 மாதத்தில் உடல்பருமன் குறைந்து, ஊளைச் சதையும் குறையும்.

2 கிராம் பிரண்டை உப்புடன் ஜாதிக்காய்த்தூள் 5 கிராம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், ஆண்மைக்கோளாறு பிரச்னை தீரும். வீரியம் பெருகும்; உடல் வலிமை பெறும்.

வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு வெடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு 2 கிராம் வெண்ணெயுடன் இந்த உப்பைக் கலந்து இரண்டு தடவை கொடுத்தால், மூன்று நாளில் குணமாகும்.

செம்பருத்தி பூ

செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும்.
மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும். செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் இது மருந்தாகின்றது.

செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.

உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.

செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.

செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாகும். செம்பருத்தி பூவின் இதழ்களை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.

செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.

நெல்லி

நெல்லிக்கனியில் உள்ள மருத்துவக் குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்று கூறுவதுண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது.
பச்சை நெல்லிக்காய், துளசி, கொட்டை நீக்கிய முற்றின கடுக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சமவிகிதத்தில் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டி, அதைவிட மூன்று மடங்கு அதிகமான அளவுக்கு தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும். இதை தினமும் கேசத்தில் தடவிவந்தால், முடி உதிர்வை தடுக்கும்.

நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது.

நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம்.

நெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். கொட்டை நீக்கப்பட்ட நெல்லிகனிகளை தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாற்றுடன் தேன் மற்றும் இளநீர் சேர்த்துப் பருகலாம்.

நரை முடி இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு பெரும் தொல்லை தரும் விஷயமாக ஆகிவிட்டது. உடல்ரீதியாக பிரச்னை எதையும் இது தராது என்றாலும், மனதளவில் சிறு சங்கடத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு ஒரு வழி உண்டு. நெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்த கலவையை இரவில் கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவிவிடலாம். விரைவில் கூந்தல் கறுப்பாக மாறும்.

தினமும் ஓர் நெல்லிக்கனி எனச் சாப்பிட்டு எளிதாக சத்துகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றுள்ளனர். நாமும் நெல்லிக்கனியை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.

நெல்லிக்காய் நன்மைகள்


இளமை தோற்றம்
நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது. இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சத்து சருமத்திற்கு இலகுவான தன்மையை தருவதோடு தோல் புற்று நோய்கள் ஏற்படாமலும் காக்கிறது. குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளபளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம்.

இதயம்

உடலில் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் உறுப்பு இதயம். இதயத்தின் செயல்பாடுகள் எப்போதும் சீராக இருக்கின்ற வகையில் உதவக்கூடிய இயற்கை உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். நெல்லிக்கனிகளை அடிக்கடி சாப்பிடும் போது அதிலுள்ள புளிப்பு தன்மை கொண்ட ரசாயனங்கள், இதயத்தில் ரத்தம் உறைதல், அடைப்பு போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் நெல்லிக்காயில் இருக்கின்ற குரோமியம் சத்து ஆர்த்திராஸ்கிலேரோசிஸ் எனப்படும் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் உண்டாகாமல் தடுக்கிறது.

சிறுநீரகம்

உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றுவது சிறுநீரகங்கள். ஒரு சிலருக்கு சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நீர்ச்சத்து அதிகம் நிறைந்த நெல்லிக்கனி இயற்கையிலேயே ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கியாக இருக்கிறது. மேலும் நெல்லிக்கனியில் இருக்கின்ற சாற்றிற்க்கு சிறுநீரகங்களில் படிகின்ற சிட்ரேட் மற்றும் கால்சியம் படிமங்கள் கற்களாக மாறுவதை தடுத்து, அவைகளை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. எனவே சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க நினைப்பவர்கள் நெல்லியை அதிகம் உண்ண சிறுநீர் நன்கு பிரியும்.

கண்கள்

நம்முடைய உடலில் முக்கியமான உறுப்பு கண்கள். நெல்லிக்காய்களில் பல வகையான வைட்டமின் சத்துகள் உள்ளன. குறிப்பாக நெல்லிக்காயில் வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் ஏ சத்து நமது கண்களில் விழி படலங்களில் ஏற்படும் அழுத்தங்களை குறைத்து எதிர்காலங்களில் கண்புரை, கண் அழுத்தம் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் காக்கிறது. இதை அடிக்கடி உண்பவர்களுக்கு வயதாவதால் ஏற்படும் கண்பார்வை குறைபாடுகள் போன்றவையும் நீங்கும். கண்பார்வை தெளிவும் ஏற்படுகிறது.

எலும்புகள்

நம் வாழ்நாளின் இறுதிவரை நமது உடலில் வலுவாக இருக்க வேண்டியது எலும்புகள். நெல்லிக்கனியில் எலும்பின் வளர்ச்சிக்கும், வலுவிற்கும் தேவையான வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், கால்சியம் சத்துகளும் அதிகம் இருக்கின்றன. எனவே வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நெல்லிக்காய்களை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் வலிமையடைகிறது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நெல்லிக்காய்களை உண்பது அவர்களின் எலும்புகளின் ஆரோக்கியமான நிலைக்கு நல்லதாகும்.

முடிகொட்டுதல்

தலைமுடி உடலின் ஆரோக்கியத்தை மட்டும் குறிப்பதில்லை, தலையை வெளிப்புற சூழல்களிலிருந்தும் பாதுகாக்கவும் செய்கிறது. முகத்திற்கு அழகையும் கொடுக்கிறது. முடிவளர்ச்சிக்கு தேவையான சத்துக்களும், வேதிப்பொருட்களும் நெல்லிக்கனிகளில் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துகள் தலைமுடி வேர்களை வலுப்படுத்தி முடி கொட்டுவதை குறைக்கிறது. மேலும் ஏற்கனவே முடி உதிர்ந்த இடங்களில் மீண்டும் தலைமுடியின் வளர்ச்சியை தூண்டும் பணியையும் செய்கிறது. எனவே நெல்லிக்காய்களை தொடர்ந்து உண்பவர்களுக்கு முடிகொட்டும் பிரச்சனை குறைகிறது.

மஞ்சள் காமாலை

நாம் தினமும் சாப்பிடும் அனைத்து வகையான உணவுகளிலும் ஏதாவது ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த பொருளின் கலப்படம் சிறிது உள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை. அத்தகைய நச்சுக்கள் நிறைந்த உணவை நாம் சாப்பிட்டாலும் அவற்றை நீக்கி உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் ஒரு உறுப்பாக கல்லீரல் செயல்படுகிறது. கல்லீரல் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அந்த கல்லீரலில் ஹெப்பாடிட்டீஸ் வைரஸ் கிருமிகளால் பாதிப்பு ஏற்படும் போது மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகின்றது. கல்லீரலில் ஏற்படும் கிருமி தொற்றால் ஏற்படும் ஒரு நோய் மஞ்சள் காமாலை. இந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் தொடர்ந்து நெல்லிக்கனிகளை உண்பதால் ஈரலில் இருக்கும் கிருமிகள் அழிந்து மஞ்சள் காமாலை குணமாகும்.

பித்தப்பை

மனித உடலில் மற்ற உறுப்புகளை போலவே பித்தப்பையும் ஒரு முக்கிய உறுப்பாக இருக்கிறது. இந்த பித்தப்பையில் சுரக்கப்படும் பித்த நீர் நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானம் ஆவதற்கும், அந்த செரிமானம் செய்யப்பட்ட உணவுகளிலிருந்து பெறப்படும் ஊட்டச்சத்து உடலுக்கு தரும் அரும்பணியையும் பித்த நீர் செய்கிறது. அத்தகைய பித்த பை ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகும். நெல்லிக்கனிகளில் இருக்கும் ரசாயனம் பித்தப்பைகளில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. மேலும் பித்த பை சிறப்பாக செயல்படவும் உதவுகிறது.

இரத்தம்

நமது உடலில் உயிர் இருப்பதற்கு அடிப்படை விடயமாக ரத்தம் இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்று, நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் சத்துகள் ஆகியவற்றை உடலின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்லும் அரும்பணியை ரத்தம் மேற்கொள்கிறது. எனினும் உணவு மற்றும் காற்றில் இருக்கும் நச்சுக்கள் ரத்தத்தில் கலப்பதை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. நெல்லிக்கனியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் கழிவு பொருட்கள் வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறி, ரத்தத்தை தூய்மை செய்து உடலில் சுறுசுறுப்பை அதிகரிக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

வயிற்று புண்

நாம் அன்றாட இயங்குவதற்கு சக்தி நாம் உண்ணும் உணவில் இருந்தே கிடைக்கிறது. அப்படி உண்ணும் உணவில் இருந்து முழுமையான சக்தியை பெற நமது வயிறு மற்றும் செரிமான உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஒரு சிலர் கண்ட, கண்ட உணவு வகைகளை உண்பதால் வயிற்றில் புண்கள் அஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன. நெல்லிக்காய்களை தினமும் சாப்பிட்டு வருவதால் வயிற்று புண்கள் மற்றும் வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகளும் நீங்கும்.

புற்று நோய்

இன்று உலகில் பலரையும் அச்சுறுத்தும் நோயாக புற்று நோய் உருவெடுத்திருக்கிறது. இந்தப் புற்று நோய்க்கான சிகிச்சைக்கு ரசாயனம் கலந்த நவீன மருந்துகளை சாப்பிட்டாலும் புற்றுநோயின் பாதிப்பு குறைகிறதே தவிர முழுமையாக யாருக்கும் குணம் கிடைப்பதில்லை. ஆனால் புற்றுநோயை வராமல் தடுக்கவும், புற்று நோய் பாதிப்புகளை நீக்கும் மருத்துவ சக்தி இயற்கையான உணவுகள் கொண்டிருப்பதாக பலர் கருதுகின்றனர். அப்படியான உணவுகளில் ஒன்றாக நெல்லிக்கனி கருதப்படுகிறது. நெல்லிக்கனியில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் பல ரசாயனங்களும், வேதிப்பொருட்களும் உள்ளன. இந்த நெல்லிக்காய்களை தொடர்ந்து சாப்பிடும் நபர்களுக்கு புற்று நோய் வராமல் தடுக்கிறது.

திப்பிலி

நவீன மருத்துவம் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் முன்பாகவே, பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை முறைகளை கண்டுபிடித்தது நமது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் ஆகும். இந்த இரண்டிலும் பெரும்பாலும் நமது நாட்டில் விளைகின்ற மூலிகை பொருட்களை கொண்டே மருத்துவம் பார்க்கப்பட்டன. அப்படியான மூலிகைகளில் ஒன்று தான் “திப்பிலி”. இந்த திப்பிலி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

திப்பிலி பயன்கள்
தொண்டை, குரல் வளம்
சளி, ஜலதோஷம் போன்றவற்றால் தொண்டை கட்டிக்கொண்டு கரகரப்பான குரல் ஏற்படுகிறது. இதனால் சரியாக பேச முடியாமல் போகிறது. திப்பிலி பொடியை சிறிதளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கட்டு நீங்குவதோடு குரல் வளமும் மேம்பட செய்கிறது திப்பிலி

மூலம்

மலச்சிக்கல், ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மூலம், பவித்திரம் போன்றவை ஏற்பதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. மூலம் ஏற்பட்டவர்கள் அது குணமாக திப்பிலி பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். திப்பிலியை நன்கு பொடி செய்து, அதனுடன் குப்பைமேனி செடியை நிழலில் உலர்த்தி பொடி செய்து திப்பிலி பொடியுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலம் சீக்கிரம் குணமாகும்.

காய்ச்சல்

உடலின் நோய் எதிர்ப்பு திறன் குறையும் போது ஜுரம், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. இச்சமயங்களில்
உடலுக்கு பலம் தரக்கூடியதும், நோய்களை போக்க கூடியதுமான பத்திய மருந்துகளை சாப்பிடுவதால் நோய் பாதிப்பிலிருந்து நீங்க முடியும். திப்பிலி, சுக்கு, மிளகு போன்றவற்றை சேர்த்து கஷாயம் வைத்து சாப்பிடுவதால் எப்படிப்பட்ட ஜுரம், காய்ச்சல் போன்றவையும் நீங்கும்.

மாதவிடாய்

மாதவிடாய் காலங்களில் பல பெண்களுக்கு ரத்த போக்கு அதிகரித்து அவர்களை உடலளவில் மிகுந்த பலவீனமானவர்கள் ஆக்குகிறது. இதற்கு தீர்வாக திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் விதை மூன்று பங்கு சேர்த்து பொடி செய்து, அரிசி கழுவிய தண்ணீரில் கலந்து மூன்று தினங்களுக்கு தினமும் இருவேளை குடித்து வந்தால் அதிகப்படியான மாதவிடாய் காலங்களில் ரத்த போக்கை கட்டுப்படுத்த முடியும்.

கல்லீரல், மண்ணீரல்

நமது உடலில் நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் நச்சுகளை நீக்குவதும், தேவையான பித்த நீரை உற்பத்தி செய்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற காரியங்களை கல்லீரல், மண்ணீரல் ஆகியவை செய்கின்றன. உடலில் அடிபடும் போதும், அதிக அழற்சியாலும் இந்த இரண்டு உறுப்புகளும் பாதிக்கப்பட்டு வீக்கம் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட உள்ளுருப்புகளின் வீக்கம் தீர தீப்பிலி பொடியை சாப்பிட்டு வருவதால் தீர்க்க முடியும்.

சுவாச நோய்கள்

ஆஸ்துமா, ப்ராங்கைட்டிஸ், மார்பு சளி போன்ற வியாதிகள் நமது நுரையீரலை பாதிப்பதாகும். இந்நோய்கள் வந்தால் சராசரியாக சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை தருகிறது. இத்தகைய நோய்கள் தீர திப்பிலி பொடியை சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சீக்கிரத்திலேயே மார்பு நுரையீரலை பாதிக்கும் அனைத்து சுவாச சம்பந்தமான நோய்களை தீர்க்க முடியும்

செரிமானமின்மை

சிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை உண்டாகிறது. இத்தகைய செரிமானக் கோளாறுகளை திப்பிலி அற்புதமாக குணப்படுத்துகிறது. மலச்சிக்கல் தீரவும், குடல்சுத்திகரிப்பானாகவும் திப்பிலி சிறப்பாக செயல்படுகிறது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பது திப்பிலி ஆகும்.

இரத்தசோகை

நமக்கு ரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம். திப்பிலி பொடியை வாரம் ஒரு முறை சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது.

சர்க்கரை நோய்

உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது “இன்சுலின்” ஆகும். திப்பிலி பொடி சாப்பிடுபவர்களுக்கு கணையத்தினைத் தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு பெருமளவு நிவாரணம் அளிக்கிறது.

தலைவலி

சிலருக்கு உடலில் இருக்கும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளாலும், வேறு பல காரணங்களாலும் அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. பல விதமான தலைவலி பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக திப்பிலி பொடி பயன்படுகிறது. மிகுந்த காட்டமான தன்மை கொண்ட திப்பிலி போடி சாப்பிட சிறிது நேரத்திலேயே தலைவலி முற்றிலும் நீங்குகிறது.

சங்குப்பூ

உடல் பருமன், நீரிழிவு, சோர்வு, மறதி, ரத்த ஓட்ட குறைபாடு, மன உளைச்சல், மன அழுத்தம், படபடப்பு, தூக்கமின்மை, கருப்பை கோளாறுகள், மலச்சிக்கல், கண்பார்வை கோளாறு, இளநரை, முகப்பொலிவின்மை, அறிவாற்றல் குறைபாடு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு போன்ற தொந்தரவுகளில் சிக்கியுள்ளீர்களா? இதோ உங்களுக்கான நமது பாரம்பரிய உணவு சங்கு புஷ்பம்.


Clitoria ternatea L, சங்கு பூ, சங்கு புஷ்பம், கருவிளை, காக்கரட்டான், காக்கணம், மாமூலி, கன்னிக் கொடி, சங்கங்குப்பி, சங்க புஷ்பி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது இந்த கொடி வகை செடி. இவற்றின் பூ, இலை, வேர், விதை என அனைத்துமே மருத்துவகுணங்கள் நிறைந்தது.
வெள்ளை நிற பூக்கள் கொண்ட சங்குப்பூ செடிகள் வேரை கொண்டு கஷாயமாக உட்கொள்ள வெட்டை, தலை நோய், சுரம், பேதி, புண்கள் ஆகியவற்றை போக்கலாம்.
ஊதாநிற பூக்கள் உள்ள சங்குப்பூ வேர்களைக் கொண்டு கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய், மூட்டு வலி முடக்குவாதம், தலை பாரம், மலச்சிக்கல் ஆகியவற்றை போக்கலாம்.


மருத்துவகுணங்கள் கொண்ட இவற்றின் விதைகள் நல்ல மணமுடையதாகவும், புளிப்பு சுவையையும் கொண்டவை. விதைகளுக்கு சிறுநீரை பெருக்கும் ஆற்றல் உண்டு. மேலும் குடலில் உள்ள பூச்சிகளையும் போக்கும். இலைகள் துவர்ப்பு சுவையை அளிக்கிறது.
ஆங்கிலத்தில் இந்த சங்குப்பூ மலர்களை Butterfly Blue Pea என்று அழைக்கின்றனர். இந்த மலர்கள் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கோளாறுகள், குழந்தையின்மை தொந்தரவுகள், மலட்டு தன்மை, மாதவிடாய் கோளாறுகள், சிறுநீர் தொற்றுகள் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது. பால்வினை, வெள்ளைப்படுதல் பிரச்னைகளுக்கும் மருந்தாகிறது. ஒற்றை தலைவலிக்கும் இது மருந்தாக பயன்படுகிறது.
படபடப்பு, ரத்தக்கொதிப்பை கட்டுக்குள் வைக்க உதவும் இந்த சங்குப் பூக்கள் புற்றுநோய்க்கு மருந்தாகிறது.
உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க கூடிய இவை இதயத்திற்கு பலத்தை அளிப்பதோடு, ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குணமாக்கும். சமீபத்திய ஆய்வுகள் மாவுச்சத்து உணவுகளை ஜீரணிக்க இந்த சங்குப் பூக்கள் உதவுகிறது என வெளியிட்டுள்ளது.


பொலிவான முகமும், கருகருவென்று கூந்தலும் பெற வேண்டுமானால் அதற்கும் உதவுகிறது சங்குப் பூக்கள். அதுமட்டுமல்ல என்றுமே இளமையாக உற்சாகமாகவும் இருக்க சங்குப்பூக்கள் உணவுகள் உதவுகிறது.
உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் அபார சத்துக்கள் இந்த சங்குப்பூக்களில் உள்ளது. இன்சுலின் சுரப்பையும் சீராக வைக்க உதவுகிறது.
மன அழுத்தம், மன உளைச்சல், சோர்வு ஆகியவற்றை போக்கும் மாமருந்தாக பூக்கள் உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் மன ரீதியான பதிப்புகளில் இருந்து நம்மை காக்கிறது.


உடலில் ஏற்படும் நெறி கட்டிகள், மூட்டுவலிக்கு, வாத நோய் வீக்கங்களை சங்கு பூ இலை போக்கும் தன்மை கொண்டது.
மலச்சிக்கல், மூலம் உள்ளவர்கள் தொடர்ந்து சங்குப்பூக்களை பயன்படுத்த சிறந்த நிவாரணம் பெறலாம். விளக் கெண்ணெய்யுடன் சங்குப் பூ இலைகளை அரைத்து விழுதை காய்ச்சி தைலமாக தயாரித்துக் கொண்டு மூலத்திற்கு மேல்பூச்சாகவும் பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளில் சங்குப்பூக்களை அவ்வப்பொழுது சேர்ப்பதால் குழந்தைகளுக்கு நல்ல நினைவாற்றலும், அறிவாற்றலும் அதிகரிக்கும். அதிலும் தேர்வு நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சோர்வினையும் போக்கும் சிறந்த Memory Plus மருந்து. அதே சமயம், குழந்தைகளுக்கு மாதம் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே இந்த சங்குப்பூக்களில் தயாரிக்கப்படும் உணவுகளை அளிப்பது போதுமானது.
சுவாச சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல நிவாரணத்தை சங்குப்பூக்களின் தேநீர் அளிக்கும். இதனை வீட்டில் வளர்க்க சுவாச ரீதியான தொந்தரவுகள், மன ரீதியான தொந்தரவுகள் அகலும். இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் கட்ட வீக்கம் கட்டுப்படும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் இருமலுக்கு சங்குப்பூ, இலை கஷாயம் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
அதிகமாக சங்கு பூக்கள் கிடைக்கும் காலங்களில் அவற்றை நிழலில் உலர்த்தி காயவைத்து எடுத்துவைத்துக் கொள்ளலாம். தேவைக்கேற்ப நீரிழிவு, இருதய தொந்தரவுகள் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
யானைக்கால் நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது இந்த சங்குப் பூ செடிகள். சங்குப்பூ செடியின் மூலம் அதாவது பூ, இலை, வேர், கொடி, விதை ஆகியவற்றை அரைத்து பூசிவர யானைக்கால் வீக்கம் குறையும், அதனுடன் இதன் தேநீரை அருந்த விரைவில் நல்ல பலனை அடையலாம். சங்குப் பூ செடியின் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி காலில் கட்டி வைத்தால் யானைக்கால் நோயினால் ஏற்படும் வீக்கம் குறையும்.

தேநீர் தயாரிக்க: சங்குப் பூ செடியின், பூ, இலை ஆகியவற்றை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதனுடன் இஞ்சி சாறு சேர்த்து பருகலாம். இதில் சுவைக்காக பனை வெல்லம், பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.
சங்குப்பூக்களின் வேர்கள் குடல், வயிறு ஆகியவற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கவல்லது. வேர்களை கஷாயமாக வைத்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அருந்த பூச்சிகள் வெளியேறும்.
நெய்யில் வறுத்த விதைகளை தேநீராக வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க இரப்பை நோய் குணமாகும்.
வெள்ளைப்படுதல் உள்ளவர்கள் இதன் இலைகளை நீரில் காய்ச்சி அதனைக்கொண்டு உள்ளுறுப்புகளை நாளொன்றிற்கு இரண்டு முறை கழுவ விரைவில் சரியாகும்.


நீண்ட நாட்களாக இருக்கும் கபநோய்கள், சிறுநீர் பாதையில் வரும் நோய்களுக்கு இந்த சங்குப் பூ செடியின் பட்டையை நன்கு இடித்து சாறு எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்து அருந்த விரைவில் நிவாரணம் பெறலாம்.
கருவுற்றிருக்கும் பெண்களை தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சங்குப் பூ தேநீரை அவ்வப்பொழுது பருகலாம்.

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த விஷ்ணு கரந்தை

விஷ்ணு கிராந்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு டீஸ் பூன் அளவு நெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் இருமல், இரைப்பு குணமாகும். விஷ்ணு கிராந்தி சமூலத்தை சுண்டடைக்காய் அளவு அரைத்து சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் மலத்துடன் வெளியாகும்.
விஷ்ணு கிராந்தி செடியை காயவைத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட்டு வர இருமல், சளி, உட் சூடு, காய்ச்சல், முதலியவை குணமாகும். விஷ்ணு கிராந்தி சமூலம் (வேர், இலை, தண்டு, பூ அனைத்தும்) அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு தயிரில் கொடுக்க இரத்த பேதி சீதபேதி குணமாகும். காரம் புளி நீக்க வேண்டும்.

கபவாதசுரம் என்ற வகையைச் சேர்ந்த டெய்கு காய்ச்சலுக்கு, ஆரம்ப நிலையில் நிலவேம்புக் கசாயம் சிறந்தது. டெங்கு காய்ச்சலுக்கான வைரஸை அழிக்கும் தன்மை நிலவேம்புக்கு உண்டு. அதே நேரம் டெங்கு முழுமையாக தாக்கும் போது விஷ்ணுகிராந்தி வேர்-6, கீழாநெல்லி வேர்-6, ஆடாதொடை இலை-8 ஆகிய மூலிகைனளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்கு மூலம், சித்தரத்தை, தானிப்பச்சரிசி, கோஸ்டம், அதிமதுரம், அக்கரா பரங்கிப்பட்டை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், சீந்தில்கொடி, நிலவேம்பு, பேய்குடல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நாட்டுமருந்துக்கடைகளில் கிடைக்கின்றன.

விஷ்ணுகிராந்தியை வேரோடு பறித்து, தினமும் பாக்கு அளவு எடுத்து, பசும்பால் அல்லது ஆட்டுபாலில் அரைத்து உண்டால், மறந்து போன நினைவுகள் திரும்பும். அஸ்தி சுரம் எனும் எலும்பைத் தாக்கும் கொடுமையான சுரம் போகும். இளத்த தேகம் தேறும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். கண்பார்வை சீராகும். சுவாசம் சீராக்கும் என்பது தான் இந்தப் பாடலின் சுருக்கமான பொருள்.

காய்ச்சல் காணாமல் போகும்!

அந்தக்காலத்தில் கொடும் காய்ச்சலைக் குணப்படுத்த விஷ்ணுகிராந்தி அதிகம் பயன்படுத்தினார்கள் என்கிறது சித்த மருத்துவ நூல்கள். மனிதனை தாக்கும் காய்ச்சல் 64 வகையானவை எனக் குறிப்பிடும் சித்தர்கள் வாதம் பித்தம், கபம் (சளி) என்ற மூன்று நாடிகள்தான் காய்ச்சலுக்கு அடிபடையானவை என்கிறார்கள். குறிப்பாக, விஷக்காய்ச்சலுக்கு விஷ்ணுகிராந்தி இலையைப் பயன்பத்தி இருக்கிறார்கள். விஷ்ணுகிராந்தி, நிலவேம்பு, பற்பாடகம், சீந்தில் கொடி ஆடாதொடை ஆகிய மூலிகைகளை ஒரு கைப்பிடி அளவு சேர்த்து, இரண்டு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி மிளகு கிராம்புத்தூள் கலந்து வயிறு காலியாக இருக்கும் போது மூன்று வேளை குடித்தால், 5 நாட்களில் காய்ச்சல் சரியாகும். பெரியவர்கள் 150 மில்லியும், குழந்தைகள் 75 மில்லியும் குடிக்கலாம். பக்கவிளைவு எதுவும் கிடையாது என்கிறது, சித்தமருத்துவம்.