1996ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம்தேதியை இலங்கைப்படையின் உயர் அலுவலர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாள் அது.
அன்று தலைநகர் கொழும்பில் இருந்து விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டர் ஒன்று மணலாறு (வெளிஓயா) நோக்கிப் புறப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் இலங்கையைப் பொறுத்தவரை மிக முக்கியமான புள்ளி ராஜாக்கள்.
ஆம். அந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அனுருத்த ரத் வத்தை, ராணுவத் தளபதி ரோகன் தலுவத்தே, மேஜர் ஜெனரல் அசோகா ஜெய வர்த்தனே, காவல்துறை ஐ.ஜி. டபிள்யூ பி. ராஜகுரு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பிரேமரத்ன சுமதிபால உள்பட 11 பேர் இருந்தனர்.
சனிக்கிழமை காலை எட்டரை மணியளவில் இந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. ஹெலிகாப்டரை சாகர கொட்டேகடேனியா என்பவர் ஓட்டிச் சென்றார். கூட துணை வலவராக பெரேரா என்பவர்.
இதன் பின்னர் சற்றுநேரம் கழித்து கொழும்பில் இருந்து பெல் 412 ஹெலிகாப்டர் ஒன்று மணலாறுக்குப் புறப்பட்டது. அதில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திஸரா, விமானப்படை ஏர்வைஸ் மார்ஷல் ஆன்சலம் பெய்ரிஸ் போன்றவர்கள் இருந்தார்கள்.
இரண்டாவதாகப் புறப்பட்ட பெல் 412, காலை 10 மணியளவில் மணலாறு போய்ச் சேர்ந்தது. ஆனால் முதலில் புறப்பட்ட பெல் 212 அங்கு இன்னும் வந்து சேரவில்லை.
மணி 10.55! அமெரிக்க பெல் 212 ஹெலிகாப்டர்களில் உள்ள எரிபொருள் மூலம் இரண்டரை மணிநேரம் மட்டுமே பறக்க முடியும். பெல் 212 புறப்பட்டுச் சென்று 2 மணி நேரம் ஆகிவிட்டது. இதனால் பதற்றம் உருவாகத் தொடங்கியது.
உடனே அநுராதபுரம், வவுனியா விமானப்படைத் தளங்களுக்குத் தகவல் பறந்தது. வவுனியா விமானதளம், ஒரு பெல் 212 ஹெலிகாப்டர் குறைந்த எரிபொருளுடன் பறந்தபடி தங்களுக்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறியது.
வவுனியா பகுதியில் இருந்து மணலாறு பகுதிக்கு 10 நிமிடத்தில் பறந்து வந்து விடலாம். ஆனால் 212 ஏன் வரவில்லை?
இப்போது பெல் 212ல் என்ன நடந்தது என்று பார்க்கலாம். அதன் விமானியான ஸ்குவாட்ரான் லீடர்(!) சாகர கொட்டேகடேனியா வவுனியாவைக் கடந்ததும் வடகிழக்கு நோக்கி பறப்பதற்குப் பதிலாக வடமேற்கு(!) நோக்கிப் பறந்திருக்கிறார். இதனால் நடு வழியில் பாதை தவறி ஹெலிகாப்டர் தடுமாறத் தொடங்கியது.
180 டிகிரியில் ஹெலிகாப்டரைத் திருப்பி பறக்கவிட்டபோது பூநகரி(!) தென்பட்டது. கூப்பிடு தொலைவில் மன்னார் கடல் வேறு கண்ணில் படத் தொடங்கியது.
இதற்குள் 2 மணி 20 நிமிடம் ஆகிவிட்டது. இன்னும் 10 நிமிடம்தான் ஹெலிகாப்டர் பறக்க முடியும். இல்லாவிட்டால் எரிபொருள் தீர்ந்து விழவேண்டிய நிலை. இதனால் விமானி பதற்றத்துடன் ஹெலிகாப்டரை தமிழர் ஒருவரின் காய்கறி தோட்டம் மீது இறக்கினார். (‘சாகிற நேரத்தில கூட அடுத்தவனுக்குத் தொல்லை குடுக்காம சாக மாட்டானுங்க’ என்று கவுண்டமணி ஒரு படத்தில் வசனம் பேசுவாரே, அதைப்போல, ஆபத்து, விபத்து நேரப்போகும் நேரத்தில் கூட, தமிழர்களின் உடைமையை நாசம் செய்ய சிங்களம் தவறாது)
அந்த காய்கறி தோட்டம் அருகே தமிழர்களின் 3 வீடுகள் இருந்தன. அதில் 2 வீடுகள் காலி. ஒரு வீட்டில் கே. திருச்செல்வம் என்பவர் இருந்தார். தமிழ்தெரிந்த ராஜகுரு, திருச்செல்வத்திடம் விசாரித்தபோது, அது வவுனியா-மன்னார் சாலையில் பம்பைமடு பகுதிக்கு வடகிழக்கே உள்ள கிடச்சுரி என்ற பகுதி என்பது தெரிய வந்தது. அங்கிருந்து 6 கி.மீ. கிழக்கே தவசியான்குளம். தாண்டிகுளம் தாண்டி வவுனியா நகரம் 9 மைல் தூரம். தாங்கள் முழுக்க முழுக்க புலிகளின் பகுதிக்குள் இறங்கி வந்து நிற்கிறோம் என்பது ஹெலிகாப்டரில் வந்தவர்களுக்குப் புரிந்து போனது.
ஹெலிகாப்டர் தரையிறங்கிய இடத்துக்கு ஏறத்தாழ 10 கி.மீ. தொலைவில் பம்பைமடு பகுதியில் ராணுவத்தின் முன்னரங்க பாதுகாப்பரண் இருந்தது. திருச்செல்வத்திடம் ஒரு போத்தல் மண்ணெண்ணெய் வாங்கி அதன்மூலம் பெல் 212ஐ கிளப்ப முயற்சி நடைபெற்றது. ஹெலிகாப்டர் சிலஅடி உயரம் மட்டுமே மேலெழும்பியது. அதற்கு மேல் அதனால் பறக்க முடியவில்லை.
இதற்குள் ஹெலிகாப்டர் ஒன்று தங்கள் பகுதியில் தாழ்வாகத் தடுமாறிப் பறந்ததை புலிகள் பார்த்துவிட்டனர். அவர்கள் வாகனங்களில் ஏறி ஹெலிகாப்டர் இருந்த பகுதிக்கு விரைந்து வந்து கொண்டிருந்தனர்.
ஹெலிகாப்டரின் காக்பிட்டில் உள்ள தொலைதொடர்புக்கருவி முற்றிலும் செயலிழந்து போனதால் அதில் இருந்தவர்களால் வவுனியா நகரத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. வாக்கி டாக்கிகளும் செயல்படவில்லை.
இதனால், ஹெலிகாப்டரை கைவிட்டுவிட்டுவிட்ட அவர்கள் பம்பைமடு நோக்கி நடந்து செல்ல முடிவு செய்தனர். ஹெலிகாப்டரை இனி யாரும் இயக்க முடியாத வண்ணம் அதன் ஒயர்கள், கேபிள்களை அறுத்துப்போட்டனர். பின்னர் கைக்கடிகாரத் தில் உள்ள திசைகாட்டிக் கருவியைப் பயன்படுத்திக் கொண்டு, திருச்செல்வத்தின் இரு ஆண்குழந்தைகளை பிணைக்கைதிகள் போல தங்களுடன் கூட்டிக் கொண்டு அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள்.
ரத்வத்தை சாலைவிபத்து ஒன்றில் அண்மையில் காலில் அடிபட்டிருந்தார். ஆகவே தடி ஒன்றை ஊன்றியபடி அவர் நடந்து வந்தார். வழியில் ஏரி ஒன்றைப் பார்த்த அவர், ‘இதில் கொஞ்சநேரம் நீந்திவிட்டுப் போகலாமா?’ என்று கேட்டிருக்கிறார். (இருட்டு வழியில் பயத்தை மறைத்துக் கொள்ள சிலர் சீழ்க்கை அடிப்பதில்லையா அதைப் போல).
காட்டுக்குள் இந்த கும்பல் ஒருமணிநேரம் நடந்த போது, அவர்களுக்குப் பின்னால் மூன்று முறை அடுத்தடுத்து வெடிச்சத்தங்கள் கேட்டன. வானத்தில் புகை வளையங் கள் எழுந்தன. புலிகள் ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்து அதை வெடிவைத்து தகர்த்து விட்டார்கள் என்பது தெரிந்து விட்டது. இதனால் நடைவேகத்தை அவர்கள் விறுவிறுவென மேலும் கூட்டினார்கள்.
இப்போது ஐ.ஜி. ராஜகுரு வைத்திருந்த சிறிய காவல்துறை ரேடியோ உயிர்ப்பெற்றது. வவுனியா நகரத்தை தொடர்புகொண்ட அவர், தாங்கள் நடுக்காட்டில் வழிதெரியாமல் தவிப்பதாக செய்தி அனுப்பினார். பம்பைமடு முன்னரங்க நிலையில் இருந்து ராணு வத்தினரை உடனே உதவிக்கு அனுப்புமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து காணாமல் போனவர்களை மீட்க விமானப்படை தளபதி ஒலிவர் ரண சிங்கே, ராணுவ மேஜர் ஜெனரல் லால் வீரசூரிய ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுக்க, காட்டில் சிக்கியவர்களை மீட்க 2 ஹெலிகாப்டர்கள் விரைந்தன.
5 கி.மீ. தொலைவு வரை 2 மணிநேரம் வரை நடந்த அவர்கள், ஒருவழியாக ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஹெலிகாப்டர் ஒன்று அவர்களை வழியில் கண்டு ஏற்றி வவுனியாவுக்குக் கூட்டிச் சென்றது. மாமா அனுருத்த ரத்வத்தை காணாமல் போனதால் பதறிப்போன அதிபர் சந்திரிகா தொலைபேசி மூலம் பேசி, மாமாவின் நலத்தை விசாரித்தார். (என்ன மாமா நல்லா இருக்கீங்களா?)
இதனிடையே இலங்கை ராணுவம் அதன் வழக்கமான சவடாலை விடவில்லை. ‘காட்டுக்குள் கைவிடப்பட்ட பெல் 212 ஹெலிகாப்டரை புலிகள் தகர்க்கவில்லை, புலிகள் கையில் அது சிக்கிவிடக்கூடாது என்பதற்காக ராணுவம்தான் தகர்த்தது‘ என்று ராணுவம் அறிவித்தது.
ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது அந்தப் பகுதியில் புலிகள் யாருமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஹெலிகாப்டரை புலிகள் தகர்த்தால் என்ன? ராணுவம் தகர்த்தால் என்ன? மூன்றாம் ஈழப் போரில் இலங்கை விமானப்படை 8ஆவது வான் ஊர்தியை இழந்தது என்பது மட்டும் உண்மை.
பொதுவாக பெல் 212 ஹெலிகாப்டர்களில் ஜி.பி.எஸ். கருவி இருக்கும். ஆனால், குறிப்பிட்ட அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஜி.பி.எஸ். கருவி என்ன ஆனது என்று தெரியவில்லை. வன்னிப்பகுதியில் வழி தெரியாமல் போயிருந்தால் கூட யானை யிறவு-வவுனியா இடையே ஒடும் ஏ9 நெடுஞ்சாலையைப் பிடித்து தெற்கே பறந்துகூட வவுனியாவுக்கு வந்து சேர்ந்திருக்கலாம். ஆனால் ஹெலிகாப்டரின் வலவர் இதை ஏன் செய்யவில்லை என்பது தெரியவில்லை. மொத்தத்தில் மர்மங்கள் நிறைந்த ஒரு திரைக்கதை போல இருந்தது இந்த நிகழ்வு.
அனுருத்த ரத்வத்தை தப்பிப்பிழைத்த பரபரப்பான அந்த ஹெலிகாப்டர் நிகழ்வின் போது புலிகளின் தங்களுக்குள் நடத்திய தொலைத்தொடர்பு உரையாடல் முக்கிய மானது. ‘என்ன ஆயிற்று?’ என்று புலி ஒருவர் கேட்க, மற்றொருவர், ‘கைக்கு எட்டி யது வாய்க்கு எட்டவில்லை’ என்று பதில் அளித்தார்.
உண்மைதான். அனுருத்த ரத்வத்தை, ராணுவத் தளபதி ரோகன் தலுவத்தே, மேஜர் ஜெனரல் அசோகா ஜெயவர்த்தனே, காவல்துறை ஐ.ஜி. டபிள்யூ பி. ராஜகுரு, வன்னி மாவட்ட எம்.பி.யான பிரேமரத்ன சுமதிபால போன்றோர் புலிகளின் கையில் பிணைக்கைதிகளாக சிக்கியிருந்தால் 13 ஆண்டு ஈழப்போர் வரலாற்றில் ஒருவேளை முக்கியத் திருப்பம் ஏற்பட்டிருக்கலாம்.
மோகன ரூபன்