தேசபக்தி, தேசபக்தி என்று மார்தட்டிக் கொண்டு, சமூக வலைத்தளங்களில் ஜெய்ஹிந்த் சொல்லும் நமக்கு போரின் வலி தெரியாது. தங்கள் உற்றாரையும், சுற்றாரையும் விட்டு, உயிர்துறக்கும், ராணுவ வீரர்களும் அதிகாரிகளும்தான் போரின் வலியை அனுபவிப்பார்கள். எல்லையில் குடியிருக்கும் சாதாரண மக்களும் இதில் அடக்கம்.
இந்த வலியும், இதன் பாதிப்பும் ஒரு நாட்டை விட்டு விலக பல ஆண்டுகள் ஆகும். ஒரு போரின் இறுதியில், வெற்றி அல்லது தோல்வி என்று ஒரு நாடு மார்தட்டிக் கொண்டாலும், வெற்றி பெற்ற நாடு அனுபவித்த வேதனைகளும் இருக்கத்தான் செய்யும், உயிர்ச்சேதம் இல்லாத போர்கள் வரலாறில் இல்லை.
இதனால்தான், சமயோசிதம் மிகுந்த, மனிதநேயம் கொண்ட தலைவர்கள், போர்களை தவிர்க்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வந்துள்ளார்கள். 2008ம் ஆண்டில், பாகிஸ்தான் தீவிரவாதிகள், மும்பையில் 3 நாட்கள் தாக்குதல் நடத்தியபோது, இந்தியாவின் ராணுவ தலைமை, மன்மோகன் சிங்கிடம், பாகிஸ்தான் மீது போர் தொடுக்கலாம் என்றே ஆலோசனை சொன்னது. ஆனால், மன்மோகன் உறுதியாக மறுத்தார். அந்தத் , தாக்குதல் நடந்து கொண்டிருந்த சமயத்தில், குஜராத் முதல்வராக இருந்த மோடி, தாஜ் ஹோட்டல் அருகே, மத்திய அரசை குறை கூறி பத்திரிக்கையாளர் சந்திப்பினை நடத்திக் கொண்டிருந்தார்.
இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற தீவு அல்ல. இந்தியா, எல்லையில், பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா, நேபாள், பூட்டான் ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு பிரதேசம். இத்தகைய நிலப்பரப்பில் இருக்கும் ஒரு நாடு. சுற்றுப்புறம் உள்ள நாடுகளோடு நல்ல நட்புறவை பேணுவதும், அதை செழுமைப்படுத்துவதும் அவசியம். அது மட்டுமே அறிவார்ந்த நடவடிக்கையும் கூட. ஏனெனில் போர்க்காலத்தில் எந்த ஒரு சிறிய நாடும், நமக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும். அந்த சிறிய நாட்டில், எதிரி நாடு தங்களது விமானங்களுக்கு எரிபொருள் போடலாம். தன் துருப்புக்களை தங்க வைக்கலாம். ஆயுதங்களை சேமித்து வைக்கலாம்.
இது போல நீண்டகால ஆபத்துக்களை கருத்தில் கொண்டே, இந்தியா, ஈழப் போரில், சிங்களர்களுக்கு ஆதரவாக நின்றது. இது நம் மனதுக்கு ஒவ்வாத ஒன்றாக இருந்தாலும், இதுதான் யதார்த்தம். இந்தியா போன்ற ஒரு நாடு, தன் நீண்டகால நலனை கருத்தில் கொண்டே முடிவெடுக்கும். உணர்ச்சிப்பூர்வமாக அல்ல.
இந்த விஷயங்களையெல்லாம் அலசி ஆராய்ந்தே, இந்தியாவின் இது நாள் வரை இருந்த பிரதமர்கள், நமது அண்டை நாடுகளுடன் சிறந்த நட்புறவை பேணி வந்தார்கள். 2003ம் ஆண்டு, அமெரிக்கா இதர நாடுகளோடு இணைந்து, ஈராக் மீது போர் தொடுத்தபோது, இந்திய துருப்புகளை அனுப்புமாறு, சீனியர் புஷ், அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் கோரிக்கை வைத்தார். வாஜ்பாய் என்ன செய்தார் தெரியுமா ? எதிர்க்கட்சித் தலைவர் சோனியா மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஆலோசித்தார். இறுதியாக, ஈராக் போரில், இந்தியா தன் துருப்புகளை அனுப்பாது என்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
மோடியாக இருந்தால், அமெரிக்க அதிபர் கேட்பதற்கு முன்னதாகவே இந்திய துருப்புகளை அனுப்பியிருப்பார். இதுதான் ஒரு உண்மையான தலைவனுக்கும், தன்னை ஒப்பற்ற தலைவனாக நினைத்துக் கொள்பவனுக்கும் உள்ள வேறுபாடு. \
https://thewire.in/…/india-nearly-gave-us-pressure-join-ira…
ஆனால், ஜவஹர்லால் நேருவைப்போல தன்னை ஒரு பெரும் தலைவராக நிரூபிக்க முயலும் மோடிதான், இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்தையும் எதிரியாக்கி உள்ளார். ஒரு கட்டத்தில், இந்தியாதான், நேபாளத்தின் வெளியுறவு கொள்கையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இன்று அந்த நாட்டின் வீரர்கள், இந்தியர்களை சுட்டுக் கொல்லும் அளவுக்கு எதிரியாகி உள்ளார்கள்.
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு மேஜர் ஒருவர் முன்பு ஒரு முறை என்னிடம் பேசுகையில் இந்திய ராணுவம், பூட்டான் நாட்டின் உள்ளே சர்வ சாதாரணமாக நுழைந்து, உல்பா தீவிரவாதிகளை பிடித்து வரும் என்று கூறியுள்ளார். அந்த அளவுக்கு, தெற்காசிய பிரதேசத்தில் நாம் ஒரு வளர்ந்த நாடாகத்தான் இது வரையில் இருந்துள்ளோம்.
சீனாவை நாம் தொடக்கம் முதலே சந்தேகமாகத்தான் பார்த்து வந்தோம். சீனாவும், நம்மை ஒரு போதும் நட்புநாடாக பார்த்தது இல்லை. இந்தியா சீனாவைப் பொறுத்தவரை, ஒரு சந்தை. அவ்வளவே. சீனா, தொடர்ந்து, இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சில், 26/11 தாக்குதல் மற்றும் இந்தியாவின் மீது நடந்த பல்வேறு தாக்குதல்களுக்கு காரணமான தீவிரவாதி மசூத் அஸாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தை, சீனா தடுத்து நிறுத்தியது. ஆனால் அதற்கு பிறகுதான் அக்டோபரில், சீன அதிபரை மகாபலிபுரம் வரவைத்து, இளநீர் அளித்தார் மோடி. இது போன்ற சந்திப்புகள் புகைப்படம் எடுப்பதை தவிர வேறு எதற்கும் பயன்படவில்லை.
இது போன்ற ஒரு நாட்டோடு இந்தியா கொஞ்சிக் குலவ வேண்டியதில்லை. ஆங்கிலத்தில் Equidistance என்று சொல்லப்படும் முறையில் இந்நாடுகளை வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, சீனா அமெரிக்காவுக்கு இடையே ஏற்படும் மோதலில், இந்தியா நடுநிலை வகிக்க வேண்டும். ஆனால், மோடி எந்த பெரிய நாட்டுக்கு சென்றாலும், அந்நாட்டின் அதிபர்களை கட்டிப் பிடித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில் காட்டிய கவனத்தை, இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் காட்ட மறந்தார். அதே போல சிறிய நாடுகளுக்கு செல்கையில், அந்நாட்டின் அதிபர்களை, ஒரு கடைகோடி பிஜேபி தலைவரைப் போல, ஆணவமாக நடத்தினார்.
மோடி ஒரு சுயமோகி என்பதை பல முறை எழுதியுள்ளேன். மோடி வெளியுறவு கொள்கை உள்ளிட்ட அத்தனை விவகாரங்களிலும் அடைந்துள்ள தோல்விக்கு காரணமும் இந்த சுயமோகமே.
சீனாவோடு போருக்கு செல்லும் நிலையில் நாம் இல்லை என்பது நம்மை விட மோடிக்கு நன்றாக தெரியும். இதன் காரணமாகத்தான், ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் சீனாவோடு தொடங்கிய சிக்கலை, இரு நாட்கள் முன்பு வரை மறைத்தார் மோடி. எத்தியோப்பிய காட்டில் தீப்பிடித்தால் உடனடியாக வருத்தம் தெரிவிக்கும் மோடி, நம் சொந்த நாட்டின் வீரர்கள் 20 பேர் இறந்த பிறகும், 24 மணி நேரத்துக்கு மேலாக அமைதி காத்தார். சீனா என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூட மோடிக்கு அச்சமாக உள்ளது.
மோடியின் வெளியுறவுக் கொள்கைக்கு சிறந்த உதாரணம், சீனாவின் இந்த அடாவடியான தாக்குதலை, உலகில் எந்த நாடும் வெளிப்படையாக கண்டிக்கவில்லை என்பது. மோடி ஊர் ஊராக சென்று கட்டிப்பிடித்த ஒரு தலைவர் கூட சீனாவை கண்டிக்கவில்லை. ஏனெனில், உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும், சீனாவோடு வர்த்தக உறவு உள்ளது. உலக நாடுகளில் ஒன்று கூட சீன-இந்திய சிக்கலில் மாட்டிக்கொள்ள தயாராக இல்லை. இதுதான் மோடி 2000 கோடி செலவு செய்து, ஊர் ஊராக சுற்றி அடைந்த பலன்.
தேர்தலுக்காக, மோடியும், பிஜேபியின் இதர தலைவர்களும், பாகிஸ்தானை எத்தனை முறை சீண்டியுள்ளார்கள் !!! சீனாவோடு இன்று நாம் சிக்கலில் உள்ள நிலையில், பாகிஸ்தான், தன் துருப்புக்களை எல்லையை நோக்கி நகர்த்தினால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள் ?
மோடி மற்றும் பிஜேபியால், இந்தியா இத்தனை ஆண்டுகளாக சம்பாதித்த, புகழ், மரியாதை, ஸ்திரத்தன்மை அனைத்தையும் இழந்து நிற்கிறது. எதிரிகளால் சூழப்பட்டு நிற்கிறோம்.
56 இன்ச் மார்பு என்று பீற்றிக் கொள்பவரின் தோல்வி இது.
சவுக்கு சங்கர்
18 ஜூன் 2020