துணை முதல்வர் ஓ,பி.எஸின் இளைய மகன், வி.ப.ஜெயபிரதீப் திருப்பூரில் தொழில் செய்யும் இடம் 200 கோடி மதிப்பிலானது. வீடுகட்டி விற்பனை செய்துவரும் அங்கு, வேலைக்கு ரோபோக்களை பயன்படுத்தி வருகிறார். அதற்கு வீட்டுவசதி துறையிடம் ஒரே நாளில் அனுமதி பெற்றிருக்கின்றார் என்ற குற்றச்சாட்டை திமுக தலைவர் ஸ்டாலின் முரசொலியில் எழுதியிருந்தார்.
அதற்கு பதில் அளித்த வி.ப. ஜெயபிரதீப் எம்.பி.,‘நான் வீடுகட்டி விற்கும் தொழிலை செய்வதில்லை. நிலத்தை வாங்கி ப்ளாட்போட்டு நிலமாகதான் விற்று வருகின்றேன். வீடே கட்டாத பொழுது, அங்கு ரோபோக்களை எப்படி வேலைக்கு வைத்துக்கொள்ள முடியும். தவிர நான் எல்லா அனுமதியையும் முறையாகத்தான் பெற்றேன் என்பதற்கு ஆதாரமாக, ‘மூலப்பத்திரத்தில் இருந்து’ அனைத்து ஆவணங்களையும் எடுத்து வருகின்றேன்.
நீங்கள் முரசொலி இடத்திற்கான மூலப்பத்திரத்தையும்-கட்டிடம் கட்டியதற்கான ஆவணங்களையும் எடுத்துவாருங்கள். மக்கள் முன் வைப்போம். மேலும் ஸ்டாலினே அந்த இடத்திற்கு 200 கோடி மதிப்பு என்று கூறிவிட்டார். அந்த தொகையை கொடுத்தால், நாளையே நான் அவருக்கு எழுதிக் கொடுத்துவிடுகிறேன். 200 கோடி வேண்டாம். 100 கோடி கொடுத்தாலும் போதும். அதுகூட வேண்டாம் 50 கோடி கொடுத்தாலும் போதும். அந்த திருப்பூர் இடத்தை அவர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்து விடுகின்றேன்” என்று பதில் அறிக்கை விட்டுள்ளார்.
இதைப் படித்தவுடன் சிரிப்பு. ஒரு பிளாஷ்பேக் ஸ்டோரி..
1977- எம்ஜிஆர் முதல்வராகியிருந்த சில மாதங்கள் கழித்து.
‘பார்த்தாயா உடன் பிறப்பே. நம்மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்த நடிகரின் ஆட்சியில் நாளெல்லாம் ஊழல். நாடெல்லாம் ஊழல் என்று முரசொலியில் தீட்டிவிட்டார் கலைஞர்.
அதற்கு பதில் அளித்த நாஞ்சில் மனோகரன், எம்ஜிஆரின் ‘தென்னகம்’ நாளேட்டில், ரத்தத்தின் ரத்தமே, பார்த்தீர்களா, பொன்மனச் செம்மல் ஆட்சியில் ஊழல் நடக்கிறதாம் என்று விமர்சித்து, ‘அரசியல் அசிங்கம் நீ. தமிழகத்தின் கலங்கம் நீ’ என்று கலைஞரை சாடி முடித்திருந்தார்.
அடுத்த நாள் முரசொலியில் எழுதிய கலைஞர், “உடன் பிறப்பே. நாளேட்டை பார்த்தாயா. அந்த ‘மந்திரக்கோல்’ (நாஞ்சில் மனோகரன்) என்ன எழுதியிருக்கிறதென்று! என தொடங்கி, சத்தியவாணி முத்துவின் வீட்டு தாழ்வாரத்தில் முடங்கிக்கிடந்து, அங்கு மிஞ்சியதைத் தின்று வளர்ந்த ’மந்திரக்கோல் மனோகரனுக்கு’ இன்று அண்ணா நகரில் பத்து லட்சம் ரூபாயிலான பங்களா. கதவுவும் சன்னலும் சந்தனத்தால் இழைக்கப்பட்டது. எப்படி வந்து அந்த வசதி” என்று இறங்கி அடித்திருந்தார்.
அடுத்த நாள் ‘தென்னகம்’ நாளேடு சூடாகியிருந்தது. கலைஞரை கடுமையாக விமர்சித்திருந்த நாஞ்சில் மனோகரன், “ஏ கருணாநிதியே. நான் குடியிருக்கும் வீடு பத்து லட்சமா? சவால் விடுகின்றேன். அந்த தொகைக்கே நான் விற்க தயார். நீ வாங்க தயாரா.” என்று தாக்கிவிடுவிறார்.
மறுநாள், முரசொலி கொதித்தது. ‘பார்த்தாயா உடன் பிறப்பே. மந்திரக்கோல் சவால் விடுகிறது. அந்த சவாலை ஏற்போம். ‘அனுப்பு பணத்தை. வாங்குவோம் வீட்டை’ என்று சூடாக சாடி முடிக்கின்றார் கலைஞர்.
அடுத்தடுத்த சில நாட்களில் இருந்து திமுக தொண்டர்கள் பணத்தை அனுப்பத் தொடங்கினார்கள். யார் யார், என்ன தொகை என்ற பட்டியல் நாள்தோறும் முரசொலியில் வந்தது. குறிப்பிட்ட தொகை பத்து லட்சத்தை தாண்டி 13 லட்சம் வரை சேர்ந்தது. கொஞ்ச காலம் நகர்ந்தது. அதற்குள் அரசியல் களமும் மாறியது.
கருத்து வேறுபாடு என்று எம்ஜிஆரிடம் இருந்து பிரிந்த நாஞ்சில் மனோகரன் திமுக-வில் கலைஞரிடம் வந்து சேர்ந்தார். அண்ணாநகர் வீட்டை விற்பதாகச் சொன்ன நாஞ்சில் மனோகரனும், வீட்டை வாங்கிவிடுவதாகச் சொல்லி தொண்டனிடம் நிதி வசூல் செய்த கலைஞர் ஒரே மேடையில்..
வழக்கம் போல் கலைஞர், ‘அருமைச் சகோதர், வித்தகர், அப்படி இப்படி என்று நாஞ்சில் மனோகரனை உயர்த்திப் பேச, பணத்தை அனுப்பிய அந்த தொண்டர்கள் வழக்கம்போல் விசிலடித்து ஆராவராரம் செய்துகொண்டிருந்தார்கள். அந்த பணம் என்ன ஆனது? தெரியாது.
இதுதான் அரசியல்…
(ப்ளாஷ்பேக் ஸ்டோரி. திருச்சி வேலுசாமியின் ‘அரசியல் ஆடுகளம்’ (அனுபவம்) புத்தகத்திலிருந்து..)
குறிப்பு. இன்று நடந்த சம்பவத்தை வைத்து, பழைய ப்ளாஷ் பேக் சம்பவத்தைச் சொன்னேன். சிரித்துக்கொள்வதும் சீரியஸாக எடுத்துக்கொள்வதும் அவரவர் மனநிலை.! நான் பொறுப்பல்ல.
— பா. ஏகலைவன்
மூத்த பத்திரிக்கையாளர்
https://m.facebook.com/story.php?story_fbid=3299571756721601&id=100000064280192